கோடை காலம் ஆரம்பித்து, வெயில் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது. உடுத்தும் உடைகள் அனைத்தும் வியர்வையால் முழுமையாக ஈரமாகிவிடுகிறது. இதனால் கோடை காலங்களில் வெளியில் செல்வது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகிவிட்டது.
வியர்வை அதிகம் வெளிவந்தால், அது உங்களின் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும். எனவே, கோடையில் வியர்வையை சமாளிக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
அதோடு இந்தக் கோடையில் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் போன்றவற்றை பருக வேண்டும். இதனால் வியர்வை கட்டுப்படும்.
கோடை காலங்களில் தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சியடைவது மட்டுமல்லாமல், உடலில் துர்நாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்கலாம்.
ஆடை அணியும் முன்னர் உடலில் ஈரம் இல்லாதவாறு நன்றாக துடைக்க வேண்டும். ஈரமாக இருக்கும் போது ஆடை அணிந்தால் அது துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமையும்.
முடி அதிகமாக வைத்திருப்பவர்கள் அவற்றை முறையாக பராமரித்தல் மிகவும் அவசியம். ஏனெனில், அவற்றினால் ஏற்படும் வியர்வை, சில சமயங்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இந்த வெப்ப நிலையில் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் எளிதாக வளரக் கூடியது.
கோடை காலங்களில் அதிகம் காரமான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிகமாக வியர்க்கும் பிரச்னை உள்ளவர்கள் உணவில் குடை மிளகாய், பச்சை மிளகாய் போன்றவற்றை அதிகம் சேர்க்கக் கூடாது. ஏனெனில், காரமான உணவுகள் அதிகம் வியர்ப்பதற்கு காரணமாக அமைகிறது. தயிர் சாதம் சிறிதளவு தினமும் சாப்பிடலாம். மோர் குடிப்பது உடலுக்கு நல்லது.
குளிக்க பயன்படுத்தும் நீரில் எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து குளிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
கோடை காலங்களில் விசாலமான பருத்தி ஆடைகளை அணிவது தான் சிறந்தது. பருத்தி ஆடைகள் அணிவதன் மூலம் வியர்வையிலிருந்து விலகி இருக்க முடியும்.
பகலில் வெளி இடங்களுக்கு செல்லும் போது வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். இவைகள் வியர்வையினால் வெளிவரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும்.
- மு.சுகாரா, திருவாடானை.