அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் உலக சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சயன கோலத்திலும், பிறகு ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிலையில், இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்பட்டு குளத்தில் நீர் நிரப்பப்படும். அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ஆம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.