பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த 19,427 ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரந்தர படுத்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நிறைவில் 19,427 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழகுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்களாக பணியாற்றி வந்த 19,427 பேரில், முதற்கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதன்மூலம், இனி ஒவ்வொரு ஆண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனித்தனியாக அரசாணை பிறப்பிக்க தேவையில்லை.