தொகுதிகள்

வானூர்(தனி): தொகுதியைக் கைப்பற்றப்போவது யார்?

கி. சுரேஷ்குமார்


தொகுதி அறிமுகம்: விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று வானூர். இது தனித்தொகுதியாகும். விழுப்புரம் மாவட்ட எல்லையோரத்தில் புதுவை மாநிலத்துக்கு அருகில் அமைந்துள்ள பகுதி என்பதால் நில அமைப்பில் வானூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமானவை புதுவை மாநிலத்துக்கு இடையிடையே இருக்கின்றன. அதனால், எது தமிழ்நாடு, எது புதுவை என கணிப்பதில் கூட அங்கு புதிதாக செல்பவர்களுக்கு குழப்பம் ஏற்படும். அந்த அளவுக்கு புதுவையுடன் பின்னிப்பிணைந்த தொகுதியாக இருந்து வருகிறது.

பகுதிகள்: இத்தொகுதியானது வானூர் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளையும், விழுப்புரம் வட்டப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாக இருந்து வருகிறது. இங்கு, வானூர், கண்டமங்கலம், கோட்டக்குப்பம் ஆகிய பேரூராட்சிகளும், கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை,  வழுதாவூர்,  பக்கிரிப்பாளையம்,  நெற்குணம்,  குராம்பாளையம்,  வாதனூர்,  மாத்தூர்,  சேஷங்கனூர்,  கலித்திராம்பட்டு,  அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம்,  சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு,  நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம்,  கொங்கம்பட்டு, சொரப்பூர்,  வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம்,  ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி,  களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைளும் அமைந்துள்ளன. 

வாக்காளர் விவரம்: 1 லட்சத்து 10 ஆயிரத்து 930 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 767 பெண் வாக்காளர்களும், 16 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 713 வாக்காளர்கள்  உள்ளனர்.
   
சமூகம்: இந்த தொகுதியில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர்.

வன்னியர்கள்  30 சதவீதம், ஆதிதிராவிடர்கள் 25 சதவீதம் உள்ளனர். உடையார், ரெட்டியார் உள்ளிட்ட பிற சமுகத்தினர் 45 சதவீத்தினர் உள்ளனர். அதேபோன்று இங்கு இஸ்லாமியர்கள், மீனவர்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்: வானூர் சட்டப்பேரவைத் தொகுதி, கடந்த 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் அன்று முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன. 13 முறை அங்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.

சென்னை மாகாணமாக இருந்தபோது 1962, 1967 ஆம் ஆண்டுகளிலும், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு 1971, 1977, 1980, 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளிலும் பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தொகுதியை திமுக அதிக முறை கைப்பற்றியுள்ளது. 7 முறை திமுகவும்,  6 முறை அதிமுக வென்றுள்ளது. குறிப்பாக, தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற முதல் 5 தேர்தல்களில் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

1962, 1967 ஆகிய ஆண்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.ஜி.பாலகிருஷ்ணன் தொடர்ந்து இரண்டு முறையும்  வெற்றி பெற்றுள்ளார். இதன்பிறகு 1971 ஆம் ஆண்டு திமுக வேட்பாளர் முத்துவேலும், 1977இல் திமுக வேட்பாளர் பரமசிவமும் வெற்றி பெற்றுள்ளனர்.

1980இல் மீண்டும் இரண்டாவது முறை போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துவேல் வெற்றி பெற்றார். அதுவரையில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று, திமுக தனது கோட்டையாக வைத்திருந்தது. அதன்பிறகு, 1984இல் திமுகவிடம் இருந்து அதிமுக இந்த தொகுதியைக் கைப்பற்றியபோது அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமஜெயம் வெற்றி பெற்று வானூர் தொகுதி திமுகவின் கோட்டை என்பதை உடைத்தெறிந்தார்.

கை வழுவிப்போன இந்தத் தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் என்று விடாமுயற்சியாக போராடி கடந்த 1989 தேர்தலில் இத்தொகுதியை திமுக தன்வசமாக்கியது. 1989இல் திமுக சார்பில் போட்டியிட்ட மாரிமுத்து வெற்றி பெற்றார்.

அதன்பிறகு, 1991இல் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆறுமுகம் இந்த தொகுதியை கைப்பற்றினார். இதையடுத்து, 1996இல் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட மாரிமுத்து இரண்டாவது முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

இப்படி மாறி மாறி திமுகவும், அதிமுகவும் வானூர் தொகுதில் வெற்றி பெற்று வந்த நிலையில், அடுத்த 4 முறையாக அதிமுக இத்தொகுதியில் தொடர் வெற்றிக்கனியை சுவைத்து வந்துள்ளது. 2001,2006 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கணபதி இரண்டு முறையும் வெற்றி பெற்றார். 2011இல் அதிமுக சார்பில் ஜானகிராமனும், 2016இல் எம்.சக்கரபாணியும் வெற்றி பெற்றனர்.
 
நிறைவேறியதும், நிறைவேறாததும்: வானூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி வேண்டும் என்று அப்பகுதி மக்களின் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோன்று அப்பகுதியில் குடிநீர் பிரச்னை பெறும் தலைவலியாகவே இருந்து வருகிறது. இதனைத் தீர்க்கவும் கடல் நீரை குடிநீராக்கும் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வானூர் ஒன்றியம் இணைக்கப்பட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்தால் அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னை தீரும் எனலாம். ஆனால், இந்தத் திட்டம் எப்போது நிறைவேறும் என்பது கேள்விக்குறியே. அதனால், மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் பிரச்னையை தீர்க்க கவனம் செலுத்த வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாகவே எழுந்துள்ளது.

அதே நேரத்தில் அப்பகுதி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை. கடல் சீற்றம் காரணமாக, பல்வேறு மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு தொடர்ந்து வருகிறது. இதனைத் தடுக்க தூண்டில் வளைவுத் தேவையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோன்று, "வானூர்' வட்டத் தலைமையிடமாகவும், ஒன்றியத் தலைமையிடமாகவும் இருந்தாலும் வளர்ச்சி மட்டும் இங்கு எட்டாக்கனியாகவே உள்ளது. வானூரைவிட திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பெரும் வளர்ச்சியை எட்டி வருகிறது. கோட்டக்குப்பமும் வளர்ந்து வருகிறது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.

பிரச்னைகள்: மேலும், கோட்டக்குப்பத்தை வட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. புதுச்சேரியை ஒட்டிய பெரிய ஊராக கோட்டக்குப்பம் இருந்து வரும் நிலையில் அங்கிருந்து வானூருக்குச் சென்று வருவது சிரமமாக உள்ளது. ஆகவே, வளர்ந்து வரும் நகரத்தை வட்டத் தலைநகராமாக மாற்ற வேண்டும்.

பெயரளவில் செயல்பட்டு வரும் வானூர் வட்ட மருத்துவமனையை முழு கட்டமைப்புகளுடன், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமித்து மேம்படுத்த வேண்டும். கோட்டக்குப்பம் பகுதியில் அரசு சார்பில் அவசர கால விபத்து சிறப்பு மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளன. ஏனெனில், இப்பகுதி மக்கள் விபத்து, உடல் நலக்குறைவு உள்பட எல்லா பிரச்னைகளுக்கும் புதுச்சேரியில் உள்ள மருத்துவனைகளை நாட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், கோட்டக்குப்பம்-மரக்காணம் இடையே பெரிய மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

மேலும், புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அதே நேரத்தில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அச்சமின்றி வந்து செல்ல ஏதுவாக சட்டம் - ஒழுக்கு பராமரிப்பை சீர்படுத்த வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகவே உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கொலைக் களமாகவும், ரௌடிகளின் புகழிடமாகவும் வானூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள் உள்ளன.

குறிப்பாக, கோட்டக்குப்பம், கண்டமங்கலம் போன்ற பகுதிகளில் கொலை, அடிதடி, கட்டப் பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயல்கள் தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. இதுபோன்ற எதிர்மறை செயல்பாடுகளை கட்டுப்படுத்த திறமையான காவல்துறை அதிகாரிகளை நியமித்து, இங்கு சட்டம் ஒழுங்கை பராமரித்தால்தான் இப்பகுதி மக்கள் நிம்மதி இருக்க முடியும் என்கின்றனர். 

வானூர் பகுதியில் ஏராளமான தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களில் அளவுக்கு அதிமாக தண்ணீரை உறிஞ்சுவதாகவும், விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதனைக் கண்காணித்து விதிமீறல்களை தடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

போட்டியிட வாய்ப்பு: திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக மட்டும் கைப்பற்றி வரும் இத்தொகுதியை கடந்த 4 முறையாக அதிமுக தக்க வைத்துள்ளது. இதனால், தற்போது அதிமுகவின் கோட்டையாகவே வானூர் தொகுதி மாறியுள்ளது எனலாம். தங்கள் வசம் வைத்துள்ள வானூர் தொகுதியில், மீண்டும் அதிமுகவே போட்டியிடுவது உறுதி என கூறப்படுகிறது. 

இத்தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த முறை வெற்ற பெற்ற அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள சக்கரபாணிக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. 

இருப்பினும் அந்த தொகுதியை அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கேட்டு வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகி தசரதனை நிறுத்த, அக்கட்சி நினைத்துள்ளது. அதற்காக வானூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் காய்களை நகர்த்தி வருகிறது.

இது ஒருபுறம் என்றால், அதிமுகவை எதிர்த்து திமுகவே இங்கு நிற்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள அதிமுகவை வீழ்த்த திமுகவால் மட்டுமே முடியும் என்று நம்புகின்றனர்.

அதனால், திமுகவே இங்கு போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறது. திமுக சார்பில் மாவட்ட துணைத் தலைவர்கள் மைதிலி ராஜேந்திரன், புஷ்பராஜ் ஆகியோர் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் வானூர் தொகுதியை தங்களின் விருப்பமான தொகுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்து வருகிறது. அதனால், வானூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுள்ளது.

இருப்பினும், இத்தொகுதியில் 2016இல் தனித்துப் போட்டியிட்ட பாமக 27 ஆயிரம் வாக்குகளும், மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 23 ஆயிரம் வாக்குகளும் பெற்றிருந்தது. ஆகையால், தற்போது கூட்டணியில் போட்டியிடும்போது வெற்றியை எட்டிவிடலாம் என்று கணக்கு போடுகிறது.

எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுகவுக்கு தொடர்ந்து 5 ஆவது வெற்றியை கொடுத்து அதிமுகவின் கோட்டை வானூர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்போகிறதா அல்லது அதிமுக கோட்டையை திமுக தகர்க்கப்போகிறதா என்பதை தேர்தல் முடிவுகளில் பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT