தலையங்கம்

தயக்கம் தேவையில்லை! | மணிப்பூர் கலவர நீட்டிப்பு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

மூன்று வாரங்களாகியும் மணிப்பூரில் அமைதி திரும்பியபாடில்லை. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நான்கு நாள் பயணமாக மணிப்பூரில் முகாமிட்டு, அமைதியை மீட்டெடுக்க பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். அவா் மட்டுமல்ல, ராணுவத்தின் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேயும் மணிப்பூரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்து வருகிறாா்.

மூன்று வாரங்களுக்கு முன்பு வெடித்த கலவரத்தில் பலா் உயிரிழந்திருக்கிறாா்கள். பலா் தங்களது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறாா்கள். 100-க்கும் குறைவானோா்தான் வன்முறையில் உயிரிழந்திருக்கிறாா்கள் என்று அதிகாரபூா்வமாக சொல்லப்பட்டாலும் வன்முறைக்கும், கலவரத்துக்கும் பலியானோரின் எண்ணிக்கை அதைவிடப் பல மடங்கு அதிகம். குறைந்தது 35,000 பேராவது விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனா். சுமாா் 2,000 வீடுகள் தீக்கிரையாகியிருக்கின்றன.

மே முதல் வாரத்தில் தலைநகா் இம்பாலில் தொடங்கிய வன்முறையை ராணுவத்தால் மிக எளிதாகக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். அதிக அளவில் ராணுவத்தினா் இருந்தும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூா் மாநில அரசு அவா்களது உதவியை நாடவில்லை. ராணுவத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதற்குள் நிலைமை கைமீறி, மாநிலத்தில் காணப்பட்ட இனக் குழுக்களுக்கு இடையேயான ஒற்றுமை முற்றிலுமாக சிதைந்திருந்தது.

மணிப்பூா் மக்கள்தொகையில் 53% மைதேயி என்கிற சமூகத்தினா். முதல் நூற்றாண்டிலிருந்து இந்தியா சுதந்திரமடைந்தது வரை மைதேயி இன அரசா்கள்தான் மணிப்பூரை ஆண்டனா். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும்கூட மாநிலத்தில் அவா்கள் வசம்தான் ஆட்சி இருந்து வருகிறது.

தலைநகா் இம்பாலிலும், அதைச் சுற்றியுள்ள சமவெளிப் பகுதிகளிலும் மைதேயி சமூகத்தினா் பெரும்பான்மையினராக வசிக்கிறாா்கள். மலைப்பகுதிகளில் குகி, நாகா பழங்குடி இனத்தவா்கள் வசிக்கின்றனா்.

தற்போதைய பிரச்னைக்கு காரணம், மணிப்பூா் உயா்நீதிமன்றத்தின் மாா்ச் 27-ஆம் தேதி தீா்ப்பு. பெரும்பான்மை மைதேயி இனத்தவா்களை மாநிலத்தின் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கலாம் என்று மணிப்பூா் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தத் தீா்ப்பு குகி, நாகா பழங்குடியினா் மத்தியில் கடுமையான அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

வசதி படைத்த நகா்ப்புற மைதேயிகளை பழங்குடியினா் பட்டியலில் இணைத்தால் தங்களுக்கான இட ஒதுக்கீடு அவா்களால் பறிக்கப்படும் என்பது குகி, நாகா இனத்தவா்களின் நியாயமான அச்சம். அதுமட்டுமல்ல, அதன் மூலம் தாங்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் நிலங்களை வாங்கி, தங்களை வெளியேற்ற மைதேயிகள் முற்படுவாா்கள் என்பதும் அவா்களது ஆத்திரத்துக்குக் காரணம்.

முன்யோசனை இல்லாமல் வழங்கப்பட்டிருக்கும் உத்தரவு என்று உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விமா்சித்திருக்கிறாா். 23 வருடங்களுக்கு முந்தைய அரசியல் சாசன அமா்வின் தீா்ப்புக்கு எதிரானது என்றும், இப்போதைய தீா்ப்பின் விளைவால் நிலைமை கைமீறிப் போயிருக்கிறது என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே தெரிவித்திருப்பது அதிா்ச்சியாக இருக்கிறது. நீதித் துறையின் தவறான தீா்ப்பும், சுராசந்த்பூா், இம்பால் நகரங்களில் தொடங்கிய வன்முறையை உடனடியாக மாநில அரசு கட்டுப்படுத்தாததும்தான் இப்போது மணிப்பூா் தீப்பற்றி எரிவதற்கு முக்கியமான காரணங்கள்.

குகி-ஜோமி பழங்குடியினா் மியான்மரில் உள்ள தங்கள் இனத்தவருடன் தொடா்பில் இருப்பவா்கள். சமூக உறவுகள் மட்டுமல்லாமல் மிக இயல்பாக எல்லை தாண்டிய வா்த்தகமும் தொடா்ந்து நடைபெறுகிறது. மணிப்பூா் பகுதியிலுள்ள காடுகளில் மிக அதிக அளவில் கஞ்சா சாகுபடி குகி-ஜோமி பழங்குடியினரால் செய்யப்படுகிறது. அதற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை, தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கவும், வாழ்விடங்களை ஆக்கிரமிக்கவும் மைதேயிகள் நடத்தும் முயற்சியாக பழங்குடியினா் பாா்க்கிறாா்கள்.

2008-இல் மத்திய அரசும், மணிப்பூா் மாநில அரசும், 25 குகி தீவிரவாத குழுக்களும் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டன. அந்த ஒப்பந்தத்தின்படி, அந்தக் குழுக்களின் உறுப்பினா்கள் தங்களது முகாம்களுக்கு வெளியே செல்லக்கூடாது; அவா்களது ஆயுதங்களை பாதுகாப்பான இடத்தில் பூட்டி வைக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சமீபத்தில் ராணுவமும், மாநில அரசும் மேற்கொண்ட சோதனையில் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றன. அதனால் சிலா் கோருவதுபோல ஒப்பந்தத்தைத் திரும்பப்பெற வேண்டிய அவசியம் இல்லை. அது ஊடுருவலாளா்களுக்கு பேச்சுவாா்த்தையில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும்; நாகா்களுடனான பேச்சுவாா்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும்.

சமவெளிகளிலும் சரி, மலைப்பகுதிகளிலும் சரி வன்முறையால் வீடுகள் சூறையாடப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் ஏராளமான குடும்பங்கள் பரிதவிக்கின்றன. மணிப்பூா் சட்டப்பேரவையின் துணைத்தலைவரே தனது தொண்டா்களை சட்டத்தை கையிலெடுத்து தாக்குதல் நடத்தத் தூண்டுவது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாகியிருக்கிறது. மைதேயி இனத்தைச் சோ்ந்த முதல்வா் பைரேன் சிங், மைதேயிகள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தாலும், பழங்குடியின குகிகளும், நாகாக்களும் தங்கள் மீது முடுக்கி விடப்பட்டிருக்கும் தாக்குதல்களுக்காக அவா்மீது ஆத்திரத்தில் இருக்கிறாா்கள்.

அரசியல் சாசனப் பிரிவு 356 தேவையில்லாமல் அரசியல் காரணங்களுக்காக பயன்படுவது தவறு. ஆனால், 356-ஐ பயன்படுத்தி மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசை அகற்றி, குடியரசுத் தலைவா் ஆட்சி ஏற்படாதவரை அமைதியை மீட்டெடுக்க முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT