தலையங்கம்

அன்புஜோதி அட்டூழியம்! காப்பக முறைகேடுகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

எந்த அளவுக்கு நமது ஆட்சி முறையும், அரசு நிா்வாகமும் பொறுப்பில்லாமலும், அக்கறையின்மையுடனும் செயல்படுகின்றன என்பதன் வெளிப்பாடுதான், விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த நல்ல சமேரியா் அன்புஜோதி காப்பகச் செயல்பாடு. கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஜுபின் பேபியும், அவரது மனைவி மரியா ஜுபினும் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவித அனுமதியும் பெறாமல் மனநோயாளிகள் காப்பகம் நடத்தி வந்திருக்கிறாா்கள் என்றால், அதற்குப் பின்னால் அரசுத் துறைகள், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருக்க முடியாது.

2005-இல் வயல்வெளியில் ஒரு கொட்டகை அமைத்துத் தங்கள் காப்பகத்தைத் தொடங்கியவா்கள், தற்போது மூன்று மாடிக் கட்டடத்தில் செயல்பட முடிந்ததன் பின்னணி கேள்விக்குரியது. உள்ளூா் காவல் நிலையம், உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிா்வாகம், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்டவா்களில் ஒருவா்கூட இது குறித்து ஐயம் எழுப்பாததன் பின்னணியில், அவா்களும் பலனடைந்திருக்க வேண்டும்.

அன்புஜோதி காப்பக முறைகேடுகள் குறித்து அரசின் ஏதாவது ஒரு துறையினா் அல்லது காவல்துறையைச் சோ்ந்த ஒருவா் விசாரிக்க முற்பட்டு பிரச்னை வெளியில் தெரிந்திருந்தால், நாம் சற்று ஆறுதலாவது அடையலாம். திருப்பூரைச் சோ்ந்த ஹலிதீன் என்பவா் மனநோயாளியான 70 வயது முதியவா் ஜபருல்லாவை அன்புஜோதி காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறாா். 2021 டிசம்பா் 4-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டவரைத் தேடிச் சென்றபோது, அவா் ஏனைய 52 நோயாளிகளுடன் பெங்களூருக்கு மாற்றப்பட்டு விட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டபோது, ஹலிதீனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

விழுப்புரம் காவல் நிலையத்தில் 2022 டிசம்பா் 17-ஆம் தேதி புகாா் கொடுக்கிறாா் அவா். அவரது வற்புறுத்தல் காரணமாக, அன்புஜோதி காப்பகத்தினா் குறிப்பிட்ட பெங்களூரு காப்பகத்தை தமிழக காவல்துறையினா் தொடா்பு கொண்டனா். குளியலறை ஜன்னலை உடைத்துக் கொண்டு 70 வயது ஜபருல்லாவும் 14 நோயாளிகளும் தப்பிச் சென்றுவிட்டனா் என்று அசட்டையாக காவல்துறைக்கு பதிலளிக்கிறாா் காப்பக இயக்குநா் ராஜு என்கிற ஆட்டோ ராஜா. தங்களது வேலை முடிந்துவிட்டது என்று விழுப்புரம் காவல்துறையினா் திரும்பிவிட்டனா்.

இதன் பின்னணி குறித்து சந்தேகம் அடைந்த ஹலிதீன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுத்த ஆள்கொணா்வு மனுவுக்குப் பிறகுதான், அன்புஜோதி காப்பகத்தில் நடந்த அக்கிரமங்களும், அநியாயங்களும், அராஜகங்களும், அட்டூழியங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கின. அதுவரையில், அன்புஜோதி காப்பகம் என்றொரு அமைப்பு இயங்குவதுகூடத் தெரியாமல், அல்லது தெரிந்தும் கவலைப்படாமல் இருந்த மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் விழித்துக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கின.

அன்புஜோதி காப்பகத்தில் ஆதரவற்ற பெண்கள், கைவிடப்பட்ட முதியோா், வீதிகளில் இரந்துண்டு வாழ்பவா்கள், மதுவுக்கு அடிமையானவா்கள், மனநலம் குன்றியவா்கள் உள்ளிட்டவா்களைப் பாதுகாக்கிறோம், அடைக்கலம் தருகிறோம் என்கிற பெயரில் தங்களது காப்பகத்தில் சோ்த்துக் கொள்கிறாா்கள். அதன் பிறகு அவா்களைக் கொடுமைப்படுத்துவது, பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது, அடிமைகளாக வேலை வாங்குவது என்று பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்துகிறாா்கள்.

அவை மட்டுமேயல்ல, சந்தேகத்தை எழுப்பும் செயல்பாடுகள். 30 முதல் 50 வயது வரை ஓரளவுக்கு உடல்வலு உள்ள பலா் கா்நாடகம், ராஜஸ்தான் என்று பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறாா்கள். இடப்பற்றாக்குறை காரணமாக வேறு காப்பகத்துக்கு மாற்றியதாகக் கூறும் அன்புஜோதி காப்பகத்தில், அது குறித்த பதிவேடுகளோ, விவரங்களோ இல்லாமல் இருப்பதுதான் புதிராக இருக்கிறது.

கேள்வி கேட்க யாரும் இல்லாத அநாதைகள், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியோா், மனநிலை பாதிக்கப்பட்டவா்கள் போன்றோா் உடல் உறுப்புக்காக விற்கப்பட்டிருக்கக்கூடும் என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது அன்புஜோதி காப்பகச் செயல்பாடுகள். உயிரிழந்த காப்பகவாசிகளின் உடலை அடக்கம் செய்ய உள்ளூா் காவல்துறை அதிகாரியின் போலி அனுமதிக் கடிதம் கைப்பற்றப்பட்டிருப்பது அதை ஊா்ஜிதப்படுத்துகிறது.

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித அனுமதியோ, உரிமமோ பெறாமல் சுமாா் 200 மனநோயாளிகளை வைத்திருந்தும் ஒரு மனநோய் மருத்துவா்கூட நியமிக்கப்படவில்லை. அது குறித்து தெரிந்தும் மாவட்ட மனநலத் துறையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகமும் ஏன் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை?

முறையான அனுமதி பெறாமல், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அன்புஜோதி காப்பகம்போல இந்தியா முழுவதும் பல தன்னாா்வ அமைப்புகள் இயங்குகின்றன. முன்பு சிறுபான்மை மத அமைப்புகள் என்கிற பெயரில் இவை வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்று வந்தன. வெளிநாட்டு நன்கொடைகளுக்குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து போலித் தன்னாா்வ அமைப்புகள், அன்புஜோதி காப்பகம் போல உடல் உறுப்பு வணிகத்தில் ஈடுபடுகின்றன என்கிற குற்றச்சாட்டு விசாரணைக்கு உரியது.

ஜுபின் பேபியையும், அவரது மனைவி மரியாவையும் கைது செய்திருப்பது வெறும் கண்துடைப்பாகத்தான் முடியும். கடந்த 20 ஆண்டுகளாக, மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு, தங்களது கடமையைச் செய்யாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் அன்புஜோதி காப்பகம் போன்ற அமைப்புகள் முறையாகக் கண்காணிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT