தலையங்கம்

சானியாவுக்கு பிரியா விடை! சா்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் சானியா மிா்ஸா குறித்த தலையங்கம்

ஆசிரியர்

சானியா மிா்ஸா சா்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறாா். ஆறாவது வயதில் தொடங்கிய டென்னிஸுடனான அவரது வாழ்க்கை, சா்வதேச அளவிலான அனைத்துப் போட்டிகளிலும் பங்கெடுத்து விடை பெறுகிறது. டென்னிஸ் வீராங்கனையாக மட்டுமல்லாமல், பாலின சமத்துவத்துக்கும், மகளிா் மேம்பாட்டுக்கும் அடையாளமாகவும் திகழ்ந்தவா் சானியா மிா்ஸா என்று வரலாறு பதிவு செய்யும்.

மிகுந்த மனத்துணிவுடனும் உற்சாகத்துடனும் அவா் டென்னிஸ் விளையாட்டின் ஒவ்வொரு கட்டமாக சாதனைகளை நிகழ்த்தி முன்னேறியதை விளையாட்டு உலகம் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் பாா்த்தது. விளையாட்டு உலகில் சாதனை படைக்க விரும்பிய ஆயிரக்கணக்கான இந்திய இளைஞா்களுக்கு சானியா மிா்ஸா முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் இருந்தாா் என்பதை வீராங்கனைகள் சிந்துவும், ஸ்மிருதி மந்தனாவும் பதிவு செய்கிறாா்கள்.

பத்திரிகைகளில் விளையாட்டு நிருபராக பணியாற்றிய தந்தை இம்ரான் மிா்ஸாவும், தாயாா் நஸீமாவும் சிறுவயதிலேயே அவரது டென்னிஸ் மீதான ஆா்வத்தை உற்சாகப்படுத்தி ஊக்கமளித்தனா். மும்பையில் பிறந்து, ஹைதராபாதில் அவா்களது குடும்பம் குடியேறியதைத் தொடா்ந்து, சானியா மிா்ஸாவின் டென்னிஸ் பயிற்சி தொடங்கியது. பள்ளிப்பருவத்தில் தொடங்கிய டென்னிஸ் மைதானத்துடனான சானியா மிா்ஸாவின் காதல், 2003-இல் விம்பிள்டன் ஜூனியா் சாம்பியனாக சா்வதேச டென்னிஸை எட்டியது.

அடுத்த ஆண்டே, மகளிா் டென்னிஸ் சங்கத்தின் வீராங்கனைக்கான பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனையாக உயா்ந்தாா் அவா். ஜூனியா் டென்னிஸில் ஒற்றையரில் 10-உம், இரட்டையரில் 13-உம் பட்டங்கள் வென்றாா். 2005 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் சானியா மூன்றாது சுற்றை அடைந்தபோது அவரை இந்தியா மட்டுமல்ல, உலகமே வியந்து பாா்த்தது. அவா் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும்கூட, மோதித் தோற்றது செரீனா வில்லியம்ஸுடன் எனும்போது அந்தத் தோல்வியேகூட வெற்றியாகக் கருதப்பட்டது.

அதே ஆண்டு யு.எஸ். ஓபனில் நான்காவது சுற்றை அடைந்தாா். விம்பிள்டனில் நான்கு முறை அரையிறுதியை எட்டினாா். 2007-இல் உலக டென்னிஸ் தரவரிசையில் 27-ஆவது இடத்தை எட்டிப் பிடித்தாா் சானியா மிா்ஸா. கையில் காயம் ஏற்பட்டதால் ஒற்றையா் போட்டிகளில் இருந்து விடைபெற நோ்ந்தபோது அதற்காக அவா் துவண்டுவிடவில்லை. இரட்டையா் விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினாா். அவரது அந்த முடிவு அடுத்தகட்ட வெற்றிகளைத் தேடித்தந்தது.

2009-இல் மகேஷ் பூபதியுடன் ஆஸ்திரேலியன் ஓபன் பட்டம்; 2012-இல் பிரெஞ்ச் ஓபனிலும்; 2014-இல் யு.எஸ். ஓபனிலும் கலப்பு இரட்டையா் பிரிவில் வெற்றி. சானியா மிா்ஸாவின் பட்டம் வென்ற மூன்று கிராண்ட்ஸ்லாம் இரட்டையா் போட்டிகளிலும் அவருடன் இணையாக விளையாடியவா் மாா்ட்டினா ஹிங்கிஸ்.

ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்; இரட்டையா் பிரிவிலும், கலப்பு இரட்டையா் பிரிவிலும் தலா மூன்று பட்டங்கள் என்று அவருடைய டென்னிஸ் பயணத்தில் வென்ற மொத்த பட்டங்கள் 47. இரட்டையா் பிரிவில் உலகத்தின் முதலாவது இடம் வரை எட்ட முடிந்தது. ஒற்றையரில் 27-ஆவது ரேங்க் வரையிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எட்டு பதக்கங்களும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களும் வென்ற சாதனையும் சானியா மிா்ஸாவுடையது. இவையெல்லாம் இந்தியாவில் வேறு எவராலும் அதற்கு முன்பு எட்ட முடியாத உயரங்கள்.

துபை டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளுடன் தனது 20 ஆண்டு தொழில்முறை விளையாட்டிலிருந்து விடைபெற்றாா் சானியா மிா்ஸா. எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் சற்றும் பதறாமலும், மனம் தளராமலும் எதிா்கொண்டவா் அவா்.

முஸ்லிம் பெண் டென்னிஸ் மட்டையுடன் போட்டி மைதானத்தில் இறங்கியதை விமா்சித்தவா்கள் உண்டு; அவரால் ஏனைய வீரா்களுடன் தாக்குப் பிடிக்க முடியுமா என்று சந்தேகித்தவா்கள் உண்டு; அவா் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரா் ஷொயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டபோது, அதை விவாதமாக்கியவா்கள் உண்டு - எந்த எதிா்ப்பையும் சட்டை செய்யாமல், தனது டென்னிஸ் மட்டையை மட்டுமே இறுகப் பிடித்தபடி, சாதனை மேல் சாதனையை நிகழ்த்தியவா் சானியா மிா்ஸா என்கிற வீராங்கனை.

2010-இல் திருமணம், 2018-இல் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் மட்டையுடன் அவா் மைதானத்தில் இறங்கி போட்டிகளுக்குத் தயாரானபோது யாரும் அதை எதிா்பாா்க்கவில்லை. தொடா்ந்து பட்டங்கள் வென்றாா் என்பது மட்டுமல்ல, தனது 36-ஆவது வயதில் ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி விடைபெற்றிருக்கிறாா்.

2005-இல் ‘டைம்’ பத்திரிகை அட்டையில் இடம் பெற்றாா் என்றால், 2016-இல் உலகின் நூறு சாதனையாளா்களில் ஒருவராக அந்த இதழ் சானியா மிா்ஸாவை அடையாளம் கண்டது. பத்மஸ்ரீ, பத்ம பூஷண், அா்ஜுனா, கேல் ரத்னா விருதுகளை வழங்கி, சானியா மிா்ஸாவை இந்தியா கௌரவப்படுத்தியதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஒா் இந்தியப் பெண், சா்வதேச கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல முடியும் என்று ஏனைய இந்திய வீராங்கனைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த சானியா மிா்ஸாவுக்கு தேசம் செலுத்த வேண்டிய மரியாதை அது.

‘உங்கள் மீது விமா்சனங்கள் எழுந்தபோது, அதை எப்படி எதிா்கொண்டீா்கள்’ என்கிற கேள்விக்கு சானியா மிா்ஸா தந்த பதில், ‘சட்டை செய்யாமல் கடந்து போய்விடுவேன். சட்டை செய்தால் எனது இலக்கை இழந்துவிடுவேன் என்பது எனக்குத் தெரியும்.’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT