தலையங்கம்

தீர்வு, நீர் மேலாண்மை! | மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தண்ணீர் தன்னிறைவு பெற்று விளங்குகின்றனவா என்று கேட்டால், இல்லை. ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் மழை நன்றாகப் பெய்தாலும் கூட, நம்மால் அந்தத் தண்ணீரை எல்லாம் முழுமையாகச் சேகரிக்க முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த 75-ஆவது ஆண்டிலும் இந்த நிலை தொடர்கிறது என்பது வேதனையிலும் வேதனை.
 மழைநீர் வீணாகாமல் விவசாயத்துக்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படும் விதத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், அவை முழுமையானவையாக இல்லை. நாட்டில் எத்தனையோ அணைகளும், தடுப்பணைகளும் கட்டப்பட்டாலும், பொதுமக்களின், விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைதான் தொடர்கிறது.
 ஒரு மாநிலம் (உதாரணமாக தமிழகம்) போதுமான தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறது. அதே சமயம், அண்டை மாநிலத்தில் (கேரளம்) ஏராளமான மழைநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதுதான் இன்றைய நிலைமை. பல மாநிலங்களுக்குள்ளேயேகூட நீர்மிகை மாவட்டங்களும், வறட்சியில் தவிக்கும் மாவட்டங்களும் இருக்கின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் வறட்சியும், ஏனைய பகுதிகளில் வெள்ளச் சேதமும் ஆண்டுதோறும் வாடிக்கை. இத்தனைக்கும் கோதாவரி, கிருஷ்ணா, தபதி நதிகள் பாயும் மாநிலம் அது.
 ஒடிஸா, பிகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. காவிரி பாயும் கர்நாடகத்திலேயே பல பகுதிகளில் வறட்சியும், தண்ணீர் தட்டுப்பாடும் காணப்படுகின்றன. மக்களும், அரசும் கொஞ்சம் விழிப்புணர்வோடு திறமையான நீர் மேலாண்மையை மேற்கொண்டால், தண்ணீர் தேவையில் ஓரளவு தன்னிறைவு பெற முடியும்.
 தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்கள் தங்களது குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு எதிர்கொள்ளும் பிரச்னைகள் சொல்லி மாளாது. நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும் இதேநிலைதான். வாழ்வதற்கான உரிமையை அரசியல் சாசனம் உத்தரவாதப்படுத்தி இருக்கும் நிலையில், சுத்தமான தண்ணீரைப் பெற முடியாத காரணத்தால், மக்கள் அசுத்தமான தண்ணீரைக் குடித்து இறக்கின்றனர் என்பது தேசிய அவலம்.
 அண்டை மாநிலமான கர்நாடகத்தில் அசுத்தமான குடிநீரால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய அறிக்கையின்படி, அந்த மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டத்தில் உள்ள கோனால் என்ற கிராமத்தில் ஒரு இளம் பெண் இறந்துள்ளார். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 தாவண்கெரே மாவட்டம், கனனகத்தே கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜூன் முதல் வாரத்தில், ராய்ச்சூர் நகரில், சுத்திகரிக்கப்படாத தண்ணீரைப் பயன்படுத்தியதால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள தண்ணீரை சுத்திகரிக்கும் மையம் ஐந்து ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருந்ததே இதற்கு முக்கியக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் இந்த அவலம் தொடர்வது வேதனையிலும் வேதனை.
 இந்த நிகழ்வு கர்நாடகத்தில் மட்டும் அல்ல. இது ஒரு தேசிய சோகமாகும். இந்தியாவில் அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இறப்புகள் ஏற்படுவதாக நீதி ஆயோக் அளித்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் மக்கள்தொகையில் ஒரு பகுதியினராகத் தோன்றினாலும், முழுமையான அடிப்படையில் இதனை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகவே கருத வேண்டும்.
 இந்த நெருக்கடி நிலையை மத்திய அரசு உணர்ந்துள்ளது. அதனால்தான் ஜல் சக்தி என்ற முழு அளவிலான அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் "ஜல் ஜீவன் மிஷன்' திட்டம், ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 நீதி ஆயோக்கின் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் நிலத்தடி, மேற்பரப்பு நன்னீர் கிட்டத்தட்ட 70% அசுத்தமானதாக உள்ளது. ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்படுவதாலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தண்ணீரில் கலப்பதாலும் நீர்நிலைகள் மாசு அடைகின்றன. அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளிலும், தொழில்துறை பகுதிகளிலும் நிலத்தடி நீரைத் தக்கவைத்துக் கொள்வது குறைகிறது அல்லது பாதிக்கப்படுகிறது.
 மத்திய நீர் ஆணையத்தின் பதிவுகளின்படி, இந்தியாவின் ஆண்டு தண்ணீர் தேவை 3,000 பில்லியன் கன லிட்டர்கள் ஆகும். விவசாயத்திற்கு மட்டும் 80% தண்ணீர் தேவையாக உள்ளது. ஆனால், இந்தியாவில் ஆண்டுக்கு 4,000 கன லிட்டர் மழை மட்டுமே பெய்கிறது. நீர் நெருக்கடியைத் தவிர்க்க, மழைநீர் சேகரிப்பு, முறையான நீர் சுத்திகரிப்பு முறைகள், சிறந்த நீர்ப்பாசன நடைமுறைகள், கடுமையான நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை முன்னெடுக்கப்பட வேண்டும்.
 மழைநீர் சேகரிப்பு பற்றி மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது குறித்தும், சுகாதாரமான பயன்பாடு குறித்தும் போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
 இந்த விஷயத்தில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீரின்றி அமையாது உலகு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT