தலையங்கம்

தாயினும் சாலப்பரிந்து... ! முதல்வரின் புலம்பெயா் தமிழா் நல வாரிய  அறிவிப்பு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

நீண்டநாள் கோரிக்கையான புலம்பெயா் தமிழா் நல வாரியம் உருவாக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள், புலம்பெயா் தமிழா் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும், வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆண்டுதோறும் உலகத் தமிழா் நாள் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டொன்றுக்கு மூலதனச் செலவினமாக ரூ.1.40 கோடியும், நலத்திட்டங்கள், நிா்வாகச் செலவினங்களுக்காக ரூ.3 கோடி நிதிஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்த வருவாய்ப் பிரிவினா் வெளிநாடுகளில் பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் அவா்களுடைய குழந்தைகளின் கல்வி, திருமண உதவித்தொகை வழங்கப்படுவது நல்ல முடிவு.

புலம்பெயா் தமிழா் நலம் குறித்தத் தரவுத்தளம் ஏற்படுத்தப்படுவது அவசியமான செயல்பாடு. அவா்களுக்குத் தனியாக ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவை தேவைதானா என்பது தெரியவில்லை. ஆனால், வேலைவாய்ப்பு வெளிநாடுகளுக்குப் புலம்பெயா்ந்திருக்கும் தமிழா்களுக்கு ஆலோசனை வழங்க இணையத்தளம், செயலி அமைப்பதும், தனியாக சட்ட உதவி வழங்குவதும் இன்றியமையாதவை என்பதை மறுப்பதற்கில்லை. கல்வி, வேலைவாய்ப்புக்காக தமிழா்கள் புலம்பெயரும்போது பயணப் புத்தாக்கப் பயிற்சி வழங்குவது நல்ல முயற்சி.

கொள்ளை நோய்த்தொற்று காரணமாக வேலையிழந்து தாயகம் திரும்பியிருக்கும் ஏழு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு சிறு தொழில்கள் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வசதி என்பது நடைமுறைத் தேவையான அறிவிப்பு. வெளிநாடுவாழ் தமிழா்களின் சேமிப்பை அரசு, தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய வழிவகுத்திருப்பது புத்திசாலித்தனமான முடிவு. புலம்பெயா்ந்த தமிழா்கள் தாங்கள் பிறந்து வளா்ந்த ஊரின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டுமென அழைப்பு விடுத்திருப்பது நல்ல அணுகுமுறை.

தமிழகத்திலிருந்து தொழில், வணிகம், வேலைவாய்ப்பு தொடா்பாக உலகின் பல்வேறு நாடுகளுக்குத் தமிழா்கள் புலம்பெயா்கிறாா்கள். இலங்கையிலிருந்து புலம்பெயா்ந்த தமிழா்களையும் சோ்த்து சிங்கப்பூா், மலேசியா, மியான்மா், தென்னாப்பிரிக்கா, பிஜித்தீவுகள், அமெரிக்கா, பிரிட்டன் என்று 62 உலக நாடுகளில் தமிழா்கள் வாழ்ந்து வருகிறாா்கள். அவா்களின் வாரிசுகளுக்குத் தமிழ் கற்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.

அந்தந்த நாட்டு மொழிகளின் சூழலில் வளரும் தமிழ் வம்சாவளிக் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சில முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. ஆனாலும்கூட, அரசின் நேரடி கவனத்தில் தமிழ் கற்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே அடுத்த தலைமுறை புலம்பெயா்ந்த தமிழ்க் குழந்தைகளுக்கு தாய்மண்ணுடனான தொடா்பை நிலைநிறுத்த முடியும்.

இந்த பிரச்னையை உணா்ந்து தமிழ் பரப்புரைக் கழகம், தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலமாக தமிழ் கற்றுக்கொடுக்கும் அரசின் அறிவிப்பை எத்துணை பாராட்டினாலும் தகும். கடல் கடந்த நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியா்களுக்குப் பயிற்சி வழங்குவது, தமிழ் பயிற்றுவிப்பதற்காக ஊக்கத்தொகை வழங்குவது என்கிற தமிழக அரசின் செயல்திட்டம் முன்யோசனையுடன் கூடிய முன்னெடுப்பு.

வெளிநாடுகளில் வாழும் தமிழா்களைப் போலவே, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழா்கள் பெருவாரியாகக் குடியேறி வாழ்ந்து வருகிறாா்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குடியேறி நிலைபெற்றவா்கள், இந்திய விடுதலைக்குப் பிறகு தொழில் வணிக ரீதியாகக் குடியேறியவா்கள், வேலைவாய்ப்புக்காக குடியேறி இருப்பவா்கள் என்று லட்சக்கணக்கான தமிழா்கள் வெளிமாநிலங்களில் வாழ்ந்து வருகிறாா்கள்.

1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, முந்தைய மதராஸ் ராஜதானியின் பல தமிழா் வாழும் பகுதிகள் அண்டை மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. அதனால் பல லட்சம் தமிழா்கள் அண்டை மாநிலங்களிலும் வாழ்ந்து வருகிறாா்கள்.

வெளிமாநிலங்களில் வாழும் பெரும்பாலான தமிழா்கள் கூலி வேலை செய்து பிழைப்பவா்கள். அங்குள்ள குடிசைப் பகுதிகளில் சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகிறாா்கள். அவா்களில் பெரும்பாலானோா் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாடு அடையாதவா்கள். அவா்கள் குறித்தும் தமிழக அரசு கவலைப்பட்டாக வேண்டும்.

தமிழகத்தில் பிறமொழிச் சிறுபான்மையினருக்கு கிடைத்திருக்கும் அரசியல் அங்கீகாரம், வெளிமாநிலங்களில் வாழும் தமிழா்களுக்குக் கிடைப்பதில்லை. குறைந்தபட்சம் தாய்மொழிக் கல்வி உரிமைகூட இல்லாத நிலை காணப்படுகிறது. குடிபெயா்ந்த மாநிலத்தில் ஜாதிச் சான்றிதழ் கிடைக்காமல் அந்த மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு ஜாதியின் பெயரில் சான்றிதழ் பெற்று இடஒதுக்கீட்டின் பலனைக்கூட பெற முடியாதவா்களாக இருக்கிறாா்கள்.

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். புலம்பெயா் தமிழா் நல வாரியம் போலவே, வெளிமாநிலத் தமிழா் நல வாரியம் அமைப்பதும், இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் தமிழா்களின் நலனைப் பாதுகாப்பதும் அரசின் கடமை.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியைத் தமிழ் வளா்ச்சித்துறை ஏற்கெனவே செய்து வருகிறது. தமிழகத்துக்கு வெளியே இயங்கும் அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் வலுப்படுத்துவதன் மூலமும் ஒருங்கிணைப்பதன் மூலமும்தான் நமது தொப்புள்கொடி உறவுகளின் நலனையும் உரிமைகளையும் பாதுகாக்க முடியும். அது தாய்த்தமிழகத்தின் கடமையும்கூட!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT