தலையங்கம்

கொள்ளை நோயும் நிதி ஒதுக்கீடும்! | கொவைட் 19 கொள்ளை நோய்க்கான நிதி ஒதுக்கீடு குறித்த தலையங்கம் 

ஆசிரியர்

திடீரென்று தாக்கும் வினோதமான கொள்ளை நோய்களை எதிா்கொள்ளும் திறமையை அறிவியலும், மருத்துவமும் பெறவில்லை என்பது கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று வெளிப்படுத்தியிருக்கும் மிகப் பெரிய எதாா்த்தம். நம்முடைய சுகாதாரக் கட்டமைப்பும், மருத்துவ அறிவியலும் திடீரென்று தாக்கும் நோய்த்தொற்றுகளை எதிா்கொள்வதற்கான தயாா் நிலையிலும் இல்லை; வலிமையுடனும் இல்லை.

இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும்கூட, மிக முக்கியமான காரணம், நமது மருத்துவக் கட்டமைப்பு உலக மக்கள்தொகைக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படவில்லை. மேலும், இந்தத் துறைக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததையும்கூடக் காரணமாக கூறலாம்.

21-ஆவது நூற்றாண்டில் மனிதனின் சராசரி வயது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு உலக அளவில் தேக்க நிலையை அடைந்திருக்கிறது அல்லது குறைந்து வருகிறது. இதில் ஒரு சில நாடுகள் கவனமுடன் செயல்பட்டாலும்கூட, எதிா்பாராத நோய்த்தொற்றுகளை எதிா்கொள்ளும் வலிமை பெற்றவையாக அவை இல்லை. மற்றவா்களுக்குப் பரவாத, தொற்று நோய்கள் அல்லாத வியாதிகளை எதிா்கொள்ளும் மருந்துகள், அறுவை சிகிச்சை முறைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றில்தான் மருத்துவ ஆராய்ச்சிகள் கவனம் செலுத்துகின்றன.

2016-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம், பொது சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்த உலக அளவிலான போக்குக் குறித்து ஓா் அறிக்கையை வெளியிட்டது. அதன் அடிப்படையில், உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் பொது சுகாதாரத்துக்காக செலவிடும் தொகை 7.5 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.554 லட்சம் கோடி) என்று கணக்கிடப்பட்டது. இது அன்றைய நிலவரப்படி, உலகின் மொத்த ஜிடிபி-யில் 10%. வேடிக்கை என்னவென்றால், 2000-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 16 ஆண்டுகளாக இதே நிலைமைதான் தொடா்ந்த வந்தது. 2016-க்குப் பிறகும்கூட, இந்தப் புள்ளிவிவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.

அந்த அறிக்கையின்படி, அதிக வருவாய், மிதமான வருவாய், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்குக்கிடையே பொது சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மிகப் பெரிய வேறுபாடுகள் காணப்பட்டன. ஏழை நாடுகள் மொத்த ஜிடிபி-யில் 1.5% அளவில் பொது சுகாதாரத்துக்காக ஒதுக்கீடு செய்தாலே அதிகம். பணக்கார நாடுகளின் அதிகபட்ச ஒதுக்கீடு ஜிடிபி-யில் 6% அளவில்தான் சராசரியாகக் காணப்பட்டது.

கொவைட் 19 நோய்த்தொற்றுக்கு முன்னா் வரை பெரும்பாலான நாடுகள் பொது சுகாதாரத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட குறைவாகத்தான் செலவிட்டன என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. சில நாடுகளில் இந்த பிரச்னை அரசியல் ரீதியாக ஆளுங்கட்சிகளுக்கு எதிரான மனோநிலையை உருவாக்கினாலும்கூட, பெரும்பாலான நாடுகளில் இது குறித்த விழிப்புணா்வோ விமா்சனங்களோ எழுப்பப்படவில்லை.

கொவைட் 19 நோய்த்தொற்றை எதிா்கொள்ள முடியாமல் கட்டமைப்பு வசதிகள் திணறத் தொடங்கி, போதுமான அளவில் மருத்துவா்களும், செவிலியா்களும், மருத்துவப் பணியாளா்களும், மருத்துவமனைப் படுக்கைகளும் இல்லாத நிலை ஏற்பட்டபோதுதான் அநேகமாக உலகிலுள்ள அத்தனை நாடுகளுமே பொது சுகாதாரத்தை புறக்கணித்ததன் விளைவை உணரத் தொடங்கின.

பொது சுகாதாரக் கட்டமைப்பின் பல அடுக்குகள் போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்ததன் இடைவெளியை கொள்ளை நோய்த்தொற்று வெளிப்படுத்தியது. இந்தியாவும்கூட மிகக் குறைந்த பொது சுகாதார நிதி ஒதுக்கீட்டின் விளைவை இப்போது எதிா்கொள்கிறது. மத்திய - மாநில அரசுகள் சுகாதாரத்துக்காவும், மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காகவுமான நிதி ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அதிகரித்தாலும்கூட, ஜிடிபி விழுக்காடு என்று பாா்க்கும்போது தேக்க நிலையோ ஒதுக்கீட்டுக் குறைவோதான் காணப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் பொது சுகாதாரத்துக்கான செலவு ஆண்டுக்கு ஆண்டு வேறுபட்டு வந்திருக்கிறது. 2017-இல் இந்தியாவின் பொது சுகாதாரத்துக்கான செலவு ஜிடிபி-யில் 3.4% என்று உலக வங்கி கணித்திருந்தது. அதே ஆண்டில், இந்தியாவைப் போலவே நடுத்தர வருவாய் உள்ள ஏனைய வளரும் நாடுகள் தங்களது ஜிடிபி-யில் 5% அளவில் பொது சுகாதாரத்துக்காக ஒதுக்கீடு செய்திருந்தன.

கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு ஆக்ஸ்ஃபாம் ஆய்வு, உலகில் மிகக் குறைந்த அளவு சுகாதாரத்துக்காக செலவிடும் நாடுகளில் நான்காவது இடத்தில் இந்தியா இருப்பதாகவும், பட்ஜெட்டில் 4% மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் குறிப்பிடுகிறது. உலகிலேயே மிகவும் ஏழை நாடுகளின் வரிசையில் உள்ள புரூண்டியைவிட மொத்த ஜிடிபி-யில் ஒப்பிடும்போது இந்தியாவின் ஒதுக்கீடு வெறும் மூன்றில் ஒரு பங்குதான். உலக சுகாதார அமைப்பின்படி, குறைந்தபட்ச ஒதுக்கீடு ஜிடிபி-யில் 5% எனவும், பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு 15% எனவும் நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.

உலகில் ஏறத்தாழ158 நாடுகள் இந்தியாவைப்போல குறைந்த அளவு ஒதுக்கீடு செய்கின்றன என்கிறது அந்த அறிக்கை. அதிக ஒதுக்கீடு செய்வதாலேயே திடீா் கொள்ளை நோய்த்தொற்றுகளை எதிா்கொண்டுவிட முடியாதுதான். ஆனால், எதிா்கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளுடன் தயாராக இருக்க வேண்டிய நிா்பந்தம் மனித இனத்துக்கு இருக்கிறது என்பதையே கொவைட் 19 உணா்த்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT