தலையங்கம்

"ஆர்சிஇபி' - சீனாதான் தடை! | ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை கையொப்பமிடப்பட்ட, சர்வதேச அளவில் சீனா உள்ளிட்ட 15 ஆசிய - பசிபிக் நாடுகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் "ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்', ஒரு மிகப் பெரிய திருப்பம். அந்த 15 நாடுகளும் வற்புறுத்தியும் கூட, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 16-ஆவது நாடாக இணையவில்லை. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணைவதற்கான வழியை அந்த நாடுகள் அடைத்துவிடவில்லை என்பதிலிருந்து இந்தியாவின் இன்றியமையாமையை உணரலாம்.

"ஆர்சிஇபி ஒப்பந்தம்' என்று அழைக்கப்படும் "ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்' 2012 முதல் விவாதிக்கப்பட்டு வருகிறது. "ஆசியான்' என்கிற தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளும் சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டபோதே  பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இணையப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார். 

ஆசிய - பசிபிக் நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்கும் இந்த ஒப்பந்தம், உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கும் நாடுகளின் பங்களிப்பு உலகப் பொருளாதாரத்தில் 30%. ஏறத்தாழ உலகின் 220 கோடி மக்கள்தொகை கொண்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைகின்றன. "ஆர்சிஇபி' ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம், தளர்ந்து போயிருக்கும் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்று இந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன. 

"ஆர்சிஇபி' நாடுகளுக்கு இடையே உதிரி பாகங்கள், மூலப் பொருள்களை இறக்குமதி செய்வதும், உற்பத்திப் பொருள்களைத் தங்குதடையின்றி சந்தைப்படுத்திக் கொள்வதும் சாத்தியமாவதால், பொருளாதார ரீதியாக பயனளிக்கும். அதனால்தான் சீனாவுடன் கடுமையான கருத்துவேறுபாடுகள் இருந்தும்கூட, ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் "ஆர்சிஇபி'யில் இணைந்திருக்கின்றன. வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளும் "ஆர்சிஇபி'யில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன.

எட்டு ஆண்டுகளாக "ஆர்சிஇபி' பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இந்தியா, இந்த ஒப்பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாதது சர்வதேச விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்திய உற்பத்தியாளர்களையும் பொருளாதாரத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இப்படியொரு கடுமையான முடிவை எடுக்க அரசுக்குப் பல காரணங்களும், சில நிர்பந்தங்களும் இருக்கின்றன. 

மருந்து உற்பத்திக்கு அடிப்படையான ஜெனரிக் (அடிப்படை மூலக்கூறு) மருந்துகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து மருந்துகள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணைய வேண்டும் என்று விரும்பின. ஆனால், ஜவுளி, வேளாண் பொருள்கள், தோட்டப் பொருள்கள், பால் வளப் பொருள்கள் உற்பத்தித் துறையினரின் கடுமையான எதிர்ப்பு அரசை ஒப்பந்தத்தில் இணையாமல் தடுத்திருக்கிறது. 

வர்த்தகப் பற்றாக்குறை என்பது நமது ஏற்றுமதிக்கும், பிற நாடுகளிலிருந்தான இறக்குமதிக்கும் இடையேயான இடைவெளி. அரசு எடுத்த முடிவுக்கு சீனா உள்ளிட்ட சில நாடுகளுடனான நமது வர்த்தகப் பற்றாக்குறை ஒரு முக்கியமான காரணம். "ஆர்சிஇபி'யில் இணைந்திருக்கும் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, ஏற்கெனவே 105 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7.81 லட்சம் கோடி). அதில் 2019-20-இல் சீனாவுடனான பற்றாக்குறை மட்டுமே ஏறத்தாழ சரிபாதி (49 பில்லியன்  டாலர்). 

இதுபோன்ற வர்த்தக ஒப்பந்தங்களால் பெரிய அளவில் பயனிருப்பதாகத் தெரியவில்லை. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால், பெரிய அளவிலான ஏற்றுமதி அதிகரிப்பு காணப்படவில்லை என்பதுதான் முன் அனுபவம். தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்குப் பிறகு ஆசியான், கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான உறவால் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்ததுதான் மிச்சம். அதனால்தான் இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக எந்தப் புதிய வர்த்தக ஒப்பந்தத்திலும் கையொப்பமிடவில்லை. 

சீனாவிலிருந்து இறக்குமதியை மேலும் அதிகரிக்கும் எந்தவித ஒப்பந்தத்திலும் கையொப்பமிடுவதில்லை என்பது இந்தியாவின் எழுதப்படாத வர்த்தகக் கொள்கையாக இருப்பதில் தவறென்ன இருக்க முடியும்? இந்தியாவுக்கு ஏற்கெனவே மூன்று நாடுகள் தவிர, ஏனைய "ஆர்சிஇபி'யின் உறுப்பு நாடுகளுடன்  தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கான அவசியம் இல்லை என்று முடிவெடுத்ததில் தவறில்லை. 

இந்த நாடுகளுடன் நமக்கு ஏற்றுமதி வாய்ப்பு குறைவு. நமது பெரும்பாலான ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்கும், ஐரோப்பியக் கூட்டமைப்பிற்கும்தான் என்கிற நிலையில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை நாம் செய்துகொண்டால், அதனால் பயனிருக்கும். ரஷியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்துவதும் லாபகரமாக இருக்கும். 

ஒரேயடியாக எல்லைகளை மூடிவிட முடியாதுதான். "ஆர்சிஇபி'யில் இணைவதால் இந்தியா அடையும் லாபத்தைவிட, இந்தியாவில் தனது பொருள்களைத் தங்குதடையின்றிக் குவிப்பதற்கு, அது சீனாவுக்கு வாய்ப்பாக அமையும். கண்ணை விற்று சித்திரம் வாங்கக் கூடாது என்பதுபோல, உள்நாட்டு உற்பத்தியை அழித்துக் குறைந்த விலை இறக்குமதிகளை அனுமதிக்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT