சிறப்புக் கட்டுரைகள்

'அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்' பற்றி தெரியுமா?

கோ. ஜெயலெட்சுமி

ஒரு நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெறுவதற்கு திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதே நேரத்தில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். மேலும், அவற்றை விரைவுபடுத்த புதிய புதிய தொழில்நுட்பங்களை அத்துறையில் இருப்பவர்கள் உடனுக்குடன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யக்கூடிய நிலையில் செய்திகள் எங்கு கிடைக்குமோ அவற்றையெல்லாம் ஒன்று திரட்ட வேண்டும். அதில் சரியான செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். இதுபோன்ற பணிகளை ஒரு அரசாங்கத்தால்தான் செய்ய முடியும். இதனை நன்கு உணர்ந்த ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) பல்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டு அரசு உதவியுடன் தேசிய ஆவணத் தொகுப்பு மையங்களை (National Scientific Documentation Centre) ஏற்படுத்த பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறது. இதன் விளைவால் 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது.

இந்திய அறிவியல் வளர்ச்சி கி.பி. 1784 ஆம் ஆண்டு ராயல் ஏசியாடிக் சொஸைட்டி ஆஃப் பெங்கால் (வங்காள அரசாங்க ஆசியக் கழகம்) என்ற நிறுவனத்தின் உதவியுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து கி.பி. 1800 ஆம் ஆண்டு முக்கோணத்தின் கோணச்சிறை வீதங்களை கணித்து ஆயும் கணக்கியல் துறை மதிப்பீடு என்ற ஆய்வுத் துறையினையும் பிறகு தாவர இயல், புவியியல், மருத்துவ இயல் போன்ற துறைகளில் மதிப்பீட்டு ஆய்வுக் கழகங்களும் அதன் பிறகு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விலங்கியல், மானுடவியல், தொல்பொருள் ஆய்வியல் ஆகியவற்றின் மதிப்பீட்டு மையங்களும் தொடங்கப்பெற்றன. கல்வித்துறை ஆராய்ச்சியில் மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்களால் முன்னேற்றம் ஏற்பட்டது.

சமூக, பொருளாதார தாக்கங்களால் ஏற்படும் அடிப்படை சிக்கல்களைப் பற்றிய ஆய்வு நிலையங்களும் இம்பீரியல் வேளாண்மை ஆய்வுக் கழகமும், வன ஆய்வு நிலையமும், இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகமும், இந்திய ஆய்வு நிதிக் கழகமும், தேசிய கட்டட அமைப்புக் கழகமும், நீர்ப்பாசன சக்தி ஆகியவற்றின் ஆய்வுக் கழகமும், எண்ணெய், இயற்கைவாயு, சுரங்கத்துறை முதலிய ஆய்வுக் கழகங்களும் தொடங்கப்பெற்றன.

விடுதலைக்குப் பிறகு இக்கழகங்களின் அறிவியல் ஆராய்ச்சிகளும் முடுக்கிவிடப்பட்டன. அந்தந்த மாநில அரசுகளும் ஆய்வுக்கூடங்களையும், தொழில்நுட்பக் கழகங்களையும் தோற்றுவித்தன.

1948 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அறிவியல் கழகமும், 1958ல் பாதுகாப்பு வளர்ச்சி ஆய்வுக் கழகமும் நிறுவப்பட்டன. 1948 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அணுசக்தி சட்டத்தின் அடிப்படையில் டிராம்பேயில் 1954 ஆம் ஆண்டில் அணு ஆய்வுக் கூடம் தோற்றுவிக்கப்பட்டது. இத்தகு ஆய்வுக் கழகங்களால் வெளிவந்த ஆராய்ச்சி முறைமைகள் ஆய்வுக் கட்டுரைகளாக பருவ ஏடுகளில் வெளிவந்தன. இதனால் 25 ஆண்டுகளில் பருவ ஏடுகளின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது. இவைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் கருதி ஒரு தேசிய ஆவணத் தொகுப்பு மையம் ஏற்படுத்தப்பெற்றது.

இதனடிப்படையில் இந்தியாவில் பேராசிரியர் டாக்டர் சி.இரா. அரங்கநாதன் தலைமையில் பொறுப்பாண்மைக் குழு ஓர் அறிக்கையினை 1947 ஆம் ஆண்டு அரசிற்கு அனுப்பியது. இருப்பினும் இத்திட்டம் உடனே செயலாக்கம் பெறவில்லை. பிறகு சாந்தி சுவரூப்பட்னகர் முயற்சியால் யுனெஸ்கோ உதவியுடன் 1950 ஆம் ஆண்டு நிறுவப்பெற்ற அமைப்பு 1952 ஆம் ஆண்டு இந்திய தேசிய ஆவணத் தொகுப்பு மையம் என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது.

இம்மையம் பல்வேறு நிறுவனங்கள் கண்டறிந்த ஆய்வு முடிவுகளையும், அண்மைக்கால ஆய்வு முறைகளையும் அறிந்து ஆய்வு நிலையங்களுக்கு இடையே ஓர் கருத்துப் பரிமாற்றம் ஏற்படும் மையமாகவும் செயல்படத் தொடங்கியது.

அறிவியல் ஆவணத் தொகுப்பு மையத்தின் முக்கிய குறிக்கோள்:

1. ஆய்வுக்கு பயன்படும் அறிவியல் ஆய்வு ஏடுகளை வாங்குவது, அவற்றை முறைப்படுத்துவது.

2. அறிவியல் துறை சார்ந்தவர்களுக்கும், பொறியியல் துறை சார்ந்தவர்களுக்கும் பயன்படும் ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கத்தை சுருக்கக் குறிப்பு அறிக்கைகளாக வெளியிடுவது.

3.   சிறப்புத்தகவல் வேண்டுவோருக்கு இம்மையம் விடை தருவது.

4.   ஆய்வாளர்களுக்குத் தேவையான நிழற்படங்களையும், மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும் வழங்குதல்.

5. நாட்டில் வெளியிடப்பட்டதும், வெளியிடப்படாததுமான ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கும் மையமாக பயன்படுவது.

6.   உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கிடையே ஒரு இணைப்பகமாக செயல்படுவது. மேலும் ஆவணத் தொகுப்பமாகவும், தேசிய நூலகமாகவும் பல்வேறு குறிக்கோள்களைக் கொண்டு இந்திய தேசிய ஆவணத் தொகுப்பு மையம் செயல்படத் தொடங்கியது.

இதற்கென அரசு பல்வேறு பொறுப்புக்குழுக்களை நியமித்தது. நாட்டில் உள்ள நூலகங்களையும் அவற்றின் தொகுப்புகளையும், பருவ ஏடுகளையும் தொகுத்து வைப்பதும் முக்கியமான பணியாகும். அறிவியல் அறிஞர்களுக்கும், பொறியியல் அறிஞர்களுக்கும் பயன்தரும் வகையில் பயன்மிக்க 2000 கட்டுரைகள் அடங்கிய 650 பருவ இதழ்கள் பட்டியல் ஒன்றினை முதன்முறையாக 1954 ஆம் ஆண்டு வெளியிட்டது.

அதேபோன்று எட்டு நாடுகளில் வெளியிடப்பட்ட 300 அறிவியல் பருவ இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்ட 500 கட்டுரைகள் 1958 ஆம் ஆண்டு முதலாக வெளிவந்து தொடர்ந்து மாதந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும் இம்மையம் ஆவண நிழற்பட படிவமைப்பு மையமாக செயல்படுவதோடு ஜெர்மனி, ரஷியா, பிரெஞ்ச், இத்தாலி, ஸ்பானிஷ், ஜப்பான், சீனம் போன்ற மொழிகளில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை தேவைக்கேற்ப ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தும் வெளியிடுகின்றது.

இப்பணிக்காக தகுதியும், திறமையும் வாய்ந்த மொழிப்பெயர்ப்பாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இத்தகு பணிகளுக்காக இந்நிறுவனத்திற்கு அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் மிகுந்த ஆதரவு அளித்து ஊக்கம் கொடுத்து வருகிறது. நெதர்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய மொழிபெயர்ப்பு மையத்துடன் இணைந்து செயல்படுகிறது. 1971 ஆம் ஆண்டு ரஷிய தகவல் நிலையத்தையும் தொடங்கி அதன்வழி சோவியத் நாட்டில் வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகளை மொழிபெயர்த்து இந்திய அறிஞர்களுக்கு சோவியத் அறிவியல் பருவ இதழ்களின் நவீனப் பட்டியல் மற்றும் இணைப்புப் பட்டியல் ஆகியவற்றை வழங்குகிறது.

மேற்கூறிய ஆவணத் தொகுப்புப் பணிகளைத் தவிர இம்மையமானது தனிப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் சிறப்புத் தகவல்களையும் வழங்கி வருகிறது. இப்பணிகளை விரைவுபடுத்த பல மண்டல மையங்களை எடுத்துக்காட்டாக சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய நகரங்களில் அமைத்துக்கொண்டு செயலாற்றி வருகின்றது.

1964 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு கால ஆவணத் தொகுப்பு பயிற்சி வகுப்பு ஒன்றையும் நடத்தி வருகின்றது.

1972 ஆம் ஆண்டு இந்திய தேசிய அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம் நவீனமயமாக்கப்பட்டு இங்கே பல்வேறு வகையில் அறிவுசார் துறையில் பயணிப்பவர்களுக்கு பயனளித்து வருகிறது. 

[கட்டுரையாளர் - பட்டதாரி ஆசிரியை, சக்கராப்பள்ளி]

(பிப். 28 - தேசிய அறிவியல் நாள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT