அன்னையர், தந்தையர் தினம் போன்று அக்டோபர் மாதம் 4 ஆவது ஞாயிற்றுக்கிழமை மாமியார் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஈரோடு வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 'மாமியாரை 'அம்மா' என்று அழைக்கலாமா?' என்பது குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
சா.மோகனாதேவி: மாமியாரை தாய்க்கு இணையானவராக ஏற்றுக்கொள்ளலாம். தாய் வீட்டுக்கு இணையாக மாமியார் வீட்டையும் அங்குள்ள அனைத்து உறவுகளையும் நேசிக்க வேண்டும்.
பூவரசி: மாமியாரை அம்மா என்று அழைக்கலாம். தாய் வீட்டு உறவுகளை பிரிந்து மாமியார் வீட்டுக்குச் செல்லும் பெண், தன் தாய்க்கு இணையாக மாமியார் இருப்பார் என நினைக்கிறார். அந்த எண்ணத்தை பூர்த்தி செய்யும் மாமியார் கிடைத்துவிட்டால் தாயாக அழைப்பதில் தவறு இல்லை.
பிரியா: மாமியார் காட்டும் பாசம், அரவணைப்பு தான் அவரை அம்மா என்று அழைக்கலாமா என்பதை முடிவு செய்ய முடியும்.
திவ்யபாரதி: மாமியாரை அம்மாவுக்கு இணையாக நினைத்து அவரிடம் அன்பு செலுத்துவதன் மூலம் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாமியார் கண்டித்தாலும் அம்மா கண்டிப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டும்.
ந.பவ்யா: பிறந்த வீட்டில் இருந்த காலத்தைக் காட்டிலும் புகுந்த வீட்டில்தான் அதிக காலம் இருக்கப்போகிறோம் என்பதை நினைவில் கொண்டு, மாமியார் என்று அழைக்கலாம்.
நவீனா: மாமியாரை இன்னொரு அம்மா என்றுதான் நினைக்க வேண்டும். பெற்றோரைப்போல் மாமியாரை பார்த்துக்கொள்ள வேண்டும்.
அஸ்மா ரிஸ்வானா: புகுந்த வீட்டில் பிரச்னைகளை தவிர்க்க அம்மாவுக்கு இணையாக மாமியார் மீது அன்பும், மரியாதையும் செலுத்த வேண்டும்.
ஆர்.ஹரிணி: பிறந்த வீட்டில் தாயைப் பிரிந்து செல்லும் நிலையில் மாமியாரை தாயாக நினைத்து அன்பு செலுத்தி அவரை வாழ்க்கை முழுவதும் உடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
சௌமியா: மாமியாரை தோழியாக நினைத்துப் பழக வேண்டும். அவருடைய உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஜெயஸ்ரீ: சோம்பறித்தனத்தினாலேயே மாமியார் வீட்டில் பிரச்னை வருகிறது. இதனால் புகுந்த வீட்டில் வேலைகளை மாமியாருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மாமியார்- மருமகள் உறவு தாய் -மகள் உறவாக இருக்கும்.
பிரீத்தி: அம்மாவுக்கு இணையான புனிதமான உறவுதான் மாமியார். எனினும்மாமியாரை அம்மா என்று அழைக்க வேண்டியதில்லை. அவரை அத்தை என்றே அழைக்கலாம்.
சம்யுக்தா: மாமியாரை அம்மா என்று அழைப்பதன் மூலம் இருவருக்குமிடையோன உறவு வலுப்படுகிறது. அரவணைத்துச்செல்லும் மாமியார் கிடைப்பது வரம். அவரை அம்மா என்று அழைக்கலாம்.
கோகிலா: மாமியார் நல்ல விதமாக நடந்துகொண்டால் அவரை தாயாக நினைக்கலாம்.
கிருஷ்ணஹரினி: பெற்றோர் வீட்டில் கிடைத்த அரணைப்பு புகுந்த வீட்டில் மாமியாரிடம் கிடைத்தால் அவரை தாயாக நினைக்கலாம்.