சிறப்புக் கட்டுரைகள்

தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சீர்காழி சைக்கிள் அல்வா!

எம். ஞானவேல்

சீர்காழியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமிக்க சைக்கிள் அல்வா விற்பனை செய்யப்படுகிறது. இதற்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சைக்கிளில் கொண்டுவந்து விற்கப்படுவதால் சைக்கிள் அல்வா!

அல்வா என்கிற சொல்லை கேட்டாலே சிறியவர் முதல் பெரியவர் வரை நாக்கில் எச்சில் ஊறும். அப்படிப்பட்ட அல்வாவிற்கு என்று ஒரு சில உதாரணங்கள் உண்டு. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, திருவையாறு அசோகா அல்வா போன்று சீர்காழியில் பிரபலமானது சைக்கிள் அல்வா.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செட்டித்தெருவில் வசித்துவந்த சுந்தரம் என்பவர் 1966- ஆம் ஆண்டு முதல் தனது வீட்டிலேயே சம்பா கோதுமையை அரைத்து அதில் பால் எடுத்து தன் கை பக்குவத்தில் அல்வா தயார் செய்து, அதனை தட்டில் வைத்து, கடைவீதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த பாரம்பரிய அல்வா இன்று, 55 ஆண்டுகள் கடந்து தற்போதும் தொடர்ந்து அதே சுவையுடன் சீர்காழி மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வரவேற்பைப் பெற்று விற்பனையாகி வருகிறது. 

சீர்காழி அல்வா சுந்தரத்தின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன்கள் நான்கு பேரும் தனித் தனியாக தங்களது வீடுகளிலேயே தன் தந்தையிடம் கற்றுக் கொண்ட அல்வா பக்குவத்தை சிறிதும் மாறாமல் அல்வா தயார் செய்து சைக்கிளில் எடுத்துச் சென்று சீர்காழி நகர் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இரண்டு சகோதரர்கள் இந்த அல்வா விற்பனையை கைவிட்ட நிலையில் தற்போது மற்ற இரு சகோதரர்களான கணேசன் மற்றும் ரவி ஆகிய இருவர் மட்டும் அல்வா வியாபாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

இந்த அல்வா திருநெல்வேலி அல்வா போன்று சுவை, நல்ல தரத்துடன் இருப்பதால் மக்களிடையே பிரபலமானது. சீர்காழி மக்கள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது இந்த சம்பா கோதுமை அல்வாவை வாங்கிச் செல்வதுடன், வேலை நிமித்தமாக  சிங்கப்பூர், சவூதி, துபை போன்ற வெளிநாடுகளில் பணிபுரியும் தங்கள் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் வாங்கி கொடுத்து அனுப்புகின்றனர். ஒரு மாதம் ஆனாலும் இந்த சம்பா கோதுமை அல்வா கெடாமல் உள்ளது. இந்த நவீன காலத்திலும் இந்த அல்வா வியாபாரிகள் சைக்கிளில் சென்றுதான் வியாபாரம் செய்கின்றனர். இதனாலேயே இது சைக்கிள் அல்வா என பெயர் பெற்று மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 

தினந்தோறும் இந்த சைக்கிள் அல்வா வருகை நோக்கி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆகையால் ஒரு சில மணித்துளிகளில் இந்த அல்வா விற்றுத் தீர்ந்துவிடும்.

இதுகுறித்து, அல்வா வியாபாரம் செய்துவரும் ரவி கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக அல்வா வியாபாரம் செய்து வருவதாகவும் பாரம்பரிய முறையில் தனது தந்தையின் பக்குவத்தை  முறையாகப் பின்பற்றி, விறகு அடுப்பைப் பயன்படுத்தி அல்வா தயார் செய்வதாகவும் கூறுகிறார். 

முதல் நாள் சம்பா கோதுமையை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்த கோதுமையை நன்கு அரைத்து அதிலிருந்து பால் எடுத்து பின்னர், மூன்றாம் நாள் அந்த பாலை தெளியவைத்து அல்வா கிண்டுவோம். தயார் செய்த அல்வாவை சைக்கிளில் எடுத்துச்சென்று நகர் முழுவதும் தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்து வருகிறோம். 

தனது தந்தையின் காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உறவினர்கள் தொடர்ந்து கோபாலபுரம் செல்லும்போதெல்லாம் அவருக்காக தனது தந்தையிடம் அல்வா வாங்கிச் செல்வார்கள் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காலத்தில் பொருள்களின் விலையேற்றத்தினால் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம் இந்த பாரம்பரிய அல்வா வியாபாரத்தை தொடர அரசு உதவி கரம் நீட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT