சிறப்புக் கட்டுரைகள்

ஈரோட்டின் அடையாளமான இட்லி சந்தை

கே.விஜயபாஸ்கா்

ஒரே இடத்தில் உள்ள கடைகளில் 20,000 இட்லிகள் வரை விற்பனையாகும் சந்தைதான் ஈரோடு இட்லி சந்தை. அரை நூற்றாண்டுகளாக ஈரோட்டின் புகழை பரப்பிவரும் இட்லி சந்தை ஈரோட்டின் அடையாளமாக இருக்கிறது.

தமிழகத்தில் ஆடு, மாடு, காய்கறி, பூக்கள், மளிகை என பல்வேறு சந்தைகள் இருந்தாலும் இட்லிக்கு என்று தனியாகச் சந்தை இருப்பது ஈரோட்டில் மட்டுமே.
கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தயாரித்து பாத்திரத்தில் வைத்து தலைச்சுமையாக வீதிவீதியாகச் சென்று விற்பனை செய்யப்பட்ட இட்லி வியாபாரம் இப்போது வெளிமாவட்டங்களில் இருந்தும் தேடி வந்து இட்லி வாங்கிச் செல்லும் அளவுக்கு வளர்ந்திருப்பதோடு இட்லிக்கு என்று தனிச் சந்தையாகவும் கடந்த அரை நூற்றாண்டாக மாறியுள்ளது. 

இட்லி சந்தை அதிகாலை 3 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சுடச்சுட இயங்குகிறது. இட்லி சந்தையில் தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் இட்லிகள் வரை விற்பனையாகிறது. முகூர்த்த நாள்களில் 1 லட்சம் இட்லி கூட விற்பனையாகிறது. 

இட்லி கட்டும் பணியில் கார்த்திக்

ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த நாட்களில் இட்லி சந்தையில் கூட்டம் அலைமோதுகிறது. ஈரோடு மற்றும் அருகாமையில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடக்கும் திருமணம், கோயில் விழாக்கள் பலவற்றுக்கும் காலை உணவுக்கு இங்கிருந்துதான் இட்லி செல்கிறது. தவிர ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களுக்கு இட்லி சந்தையில் இருந்துதான் இட்லி விநியோகம் செய்யப்படுகிறது.

பள்ளி, கல்லூரி விடுதிகள், அரசியல் கூட்டங்களுக்கும் இங்கிருந்தே இட்லி அனுப்பி வைக்கப்படுகிறது. இட்லிக்கு சட்னி, காரச் சட்னி, குருமா என சைவம் மட்டுமே வழங்கப்படுவதால் சபரிமலை, பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட இட்லி சந்தையில் இட்லிகளை பொட்டலம் போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

60 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள இட்லி சந்தைக்கு பின்புறமாக கால்நடை சந்தை நடந்து வந்தது. சந்தைக்கு வரும் வியாபாரிகள், கால்நடை வளர்போருக்காக இட்லி கடை தொடங்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் தீபாவளி போன்ற விஷேச நாள்களில் மட்டுமே வீடுகளில் இட்லி கிடைக்கும் பண்டமாக இருந்ததால் வெளியூர்களில் இருந்து மாட்டுச் சந்தைக்கு வரும் வியாபாரிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் இட்லியை விரும்பிச் சாப்பிட்டனர். இதனால் வியாபாரம் மெல்ல சூடுபிடித்து. இப்போது, அப்பகுதியில் மாட்டுச் சந்தை மறைந்து இட்லி சந்தை மட்டுமே நிலைத்து நிற்கிறது.

முதன்முதலில் இப்பகுதியில் இட்லி வியாபாரம் தொடங்கிய தனபாக்கியத்துக்கு இப்போது 82 வயதாகிறது. தனபாக்கியத்தின் மகள், பேரன் என 3வது தலைமுறையாகத் தொடர்ந்து இட்லிக் கடையை நடத்தி வருகின்றனர். 

வெளியூர்களுக்கு காரில் எடுத்துச்செல்லப்படும் இட்லி

இதுகுறித்து தனபாக்கியத்தின் பேரன் எல்.கார்த்திக் கூறியதாவது: இட்லி வியாபாரத்தை என் அம்மாயி(பாட்டி) தனபாக்கியம் 20 வயதில் தொடங்கியுள்ளார். 60 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்துக்கு இதுதான் தொழில். சட்னி, குருமாவோடு சேர்ந்து ஒரு இட்லி ரூ.6.  இட்லி மட்டும் தனியா ரூ.3.50க்கு விற்பனை செய்கிறோம். கூடையில் வைத்து வியாபாரம் செய்த பாட்டி தனபாக்கியம் இங்கு கடை தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிறது.

பாட்டியின் பெண் குழந்தைகள் 3 பேர் உள்பட இப்பகுதியில் 10 இட்லிக் கடைகள் இயங்குகின்றன. அனைத்துக்கும் விதை பாட்டி தனபாக்கியம் போட்டதுதான்.

எங்களுடைய கடையில் காலையும் மாலையும் சேர்த்து சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் இட்லி விற்பனையாகிறது. விசேஷ நாட்களில் 3 மடங்கு விற்பனையாகும். அரிசி, உளுந்து, கடை வாடகை, மின்கட்டணம், ஆட்கள் கூலி என அனைத்து செலவும் போக ஒரு நாளைக்கு ரூ.1,000 மிச்சமாகும். பொன்னி அரிசி, ஐஆர் 20, இட்லி அரிசி, சாதா உளுந்து, ஆமணக்கு இதைத்தான் பயன்படுத்துகிறோம். விறகு அடுப்பில்தான் இட்லியை வேக வைக்கிறோம். 20 கிலோ அரிசியை அரைத்தால் ஒரு அண்டா மாவு கிடைக்கும். இதுல 800 இட்லி வரை அவிக்கலாம். 

சட்னிக்குத் தக்காளி நறுக்கும் காந்திமதி

காலை 4 மணிக்கே சந்தையில் சுடச்சுட இட்லி கிடைக்கும். அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து சாப்பிட்டுச் செல்வார்கள், பார்சலும் வாங்குவார்கள்.  இங்கு டோர் டெலிவரி கிடையாது. ஒருமுறை மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அன்னதானத்துக்கு கோயில் வளாகத்தில் 1 லட்சம் இட்லி அவித்துக்கொடுத்தோம். இப்போதும் திருமண ஆர்டர்களுக்கு மண்டபத்துக்கு சென்றே இட்லி அவித்துக்கொடுத்து வருகிறோம்.  திருமண ஆர்டர்களில் 5,000 முதல் 30,000 இட்லி வரை அவித்துக்கொடுப்போம்.

எனக்கு தெரிந்தவரையில் இந்தியாவிலேயே இங்க மட்டும்தான் இட்லிக்குனு சந்தை இயங்கிட்டு இருக்கு. மலேசியாவுல உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது பாரம்பரிய தமிழர் உணவான இட்லியை பரிமாற விரும்பி அதுக்காக எங்கள் சிலரை மலேசியாவுக்கு அவர்களே செலவழித்து அழைத்துச்சென்றனர்.

அதே மாதிரி பல இடங்களில் இட்லிக் கடை போடச் சொல்லி அழைப்பு விடுத்து வருகின்றனர். மும்பையில் தமிழர்கள் பெருமளவு வாழும் தாராவியில கூட கடை நடத்தச் சொல்லி கேட்டார்கள். காரணம் தரம், சுவை, சுகாதாரம் தான். தரத்தில் குறைந்த அரிசி, உளுந்தை நாங்கள் பயன்படுத்துவது இல்லை.

விறகு அடுப்பிலேயே இட்லி கடை செயல்பட்டு வருவதை நேரில் பார்த்த பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தினர் எரிவாயு அடுப்புகளை அமைக்கும் கட்டமைப்பு உருவாக்கித் தருவதாக கூறியுள்ளனர்.  இப்போது உள்ள விலை 6 ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால் தனி இட்லி ரூ.4 ஆகவும், சட்னி, குருமாவுடன் இட்லி ரூ.6.50க்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். விலை உயர்வு ஓரிரு மாதங்களில் அறிவிக்க இருக்கிறோம். 

சுடச்சுட இட்லி வாங்கக் கடை முன்பு காத்திருக்கும் மக்கள்

சுடச்சுட இட்லி

இட்லிக் கடை நடத்தி வரும் காந்திமதி, மல்லிகா ஆகியோர் கூறியதாவது:

பொதுவா வீடுகள்ல இட்லிக்கு மாவு அரைக்கறப்ப வெந்தயம் சேர்ப்பாங்க. ஆனா, நாங்க வெந்தயத்துக்கு பதிலா ஆமணக்கு சேர்க்கறோம். இதனால துணில இட்லி ஒட்டறதில்ல. பூ போல உதிராம மெத்து மெத்துனு இருக்கும்.
குஷ்பு இட்லி, கப் இட்லி, ஹார்ட்டின் இட்லி,  இளநீர் இட்லி, இரண்டு இட்லிக்கு இடைல சுண்டல், புதினா மசாலா வைச்ச சான்ட்விச் இட்லி, சீரகம் மிளகு கொத்தமல்லி சேர்ந்த காஞ்சிபுரம் இட்லினு எல்லா வகையான இட்லியும் இங்க கிடைக்கும்.

ஒருபோதும் பழைய மாவு, புளிச்ச மாவுகள்ல இட்லியை தயாரிக்க மாட்டோம். அதே மாதிரி காலைல மிச்சமான இட்லியை மாலையில் விற்க மாட்டோம். எப்பவும் சுடச்சுட இட்லி கிடைக்கும் என்றார்.

மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலைமிட்டாய் என உணவுகளின் அடையாளமாக உள்ள நகரங்களின் வரிசையில் ஈரோட்டின் அடையாளமாக இட்லி சந்தை மாறியுள்ளது.  

படங்கள்: ஆர்.ரவிச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT