சிறப்புக் கட்டுரைகள்

ஆப்கன் முதல் சீனா வரை; சவால்களை சமாளித்து சரித்திரம் படைப்பாரா பைடன்?

சுதர்சனன்

ஜோ பைடன், அரை நூற்றாண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தகாரர். தனது வாழ்க்கையில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். இறுதியாக, 'தி ஐசிங் ஆன் தி கேக்' என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை தோற்கடித்து வெற்றி கண்டார்.

பைடனின் ஆரம்ப கால வாழ்க்கை

டெலாவேர் மாகாண உள்ளூர் அரசியலில் பிரபலமாக இருந்த ஜோ பைடன், 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சியின் மூத்த தலைவரை தோற்கடித்து 30 வயதில் செனட் சபை உறுப்பினரானார். துரதிர்ஷ்டவசமாக, தேர்தலில் வெற்றி பெற்று சில வாரங்களிலேயே அவரின் மனைவியும் மகளும் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். 

படுகாயம் அடைந்த தன் மகன்களான பியூ, ஹன்டர் ஆகியோரை பார்த்துகொள்ள தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். இருப்பினும், சிலரின் அறிவுறுத்தலால் அரசியலில் தொடர்ந்த அவர், 1973 ஆம் ஆண்டு, ஜனவரி 5 ஆம் தேதி செனட் சபை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2008 ஆம் ஆண்டு வரை, நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக தொடர்ந்தார்.

இனவாத விவகாரத்தில் பைடனின் நிலைப்பாடு என்ன?

கடந்த, 1970களில், கருப்பின குழந்தைகளை வெள்ளையினத்தவர் படிக்கும் பள்ளிகளில் சேர்க்க 'பஸ்ஸிங்' என்ற திட்டத்தை அரசு வகுத்தது. இதன்மூலம், கருப்பின குழந்தைகள் வெள்ளையின குழந்தைகளுடன் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தை பைடன் கடுமையாக எதிர்த்தார்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் செனட் சபை உறுப்பினரான கமலா, இந்த விவகாரத்தை முன்வைத்து கடுமையாக தாக்கி பேசினார். இருந்த போதிலும், கமலா ஹாரிஸை தனது துணை அதிபர் வேட்பாளராக பைடன் அறிவித்தார்.

தகவல் திருட்டு சர்ச்சையில் சிக்கிய பைடன்

1987ஆம் ஆண்டு, நாற்பது வயதை எட்டியிருந்த துடிப்பான பைடன் முதல் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டினார். தொடக்கத்தில் பலர் அவரை வரவேற்றிருந்தாலும் மிக மோசமான வகையில் வேட்பாளர் தேர்விலேயே தோல்வியை தழுவினார். பரப்புரைகளின் போது, மற்றவர்களின் கருத்தை அவர் திருடி பேசுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

தவறுகளை ஒப்பு கொண்ட பைடன்

1991 ஆம் ஆண்டு, செனட் நீதி ஆணையத்தின் தலைவராக பைடன் இருந்த போது, நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் மீது சட்டத்துறை பேராசிரியர் அனிதா ஹில் என்பவர் பாலியல் புகார் அளித்தார். இதுகுறித்த வழக்கு விசாரணையை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார் பைடன். விசாரணையின் போது, வெள்ளையின ஆண்களால் நிறைந்திருந்த நீதிக்குழு அனிதாவிடம் கடுமையாக நடந்துக் கொண்டு பல அறுவருக்க தக்க கேள்விகளை எழுப்பியது. இது பலரால் விமர்சிக்கப்பட்டது.

பின்னர், இச்சம்பவத்திற்காக பைடன் மன்னிப்பு கோரினார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டத்தை கொண்டு வந்தார். சட்டத்துறையில் தன்னுடைய மிகச் சிறந்த சாதனையாக அதனை அவர் கருதுகிறார்.

நீதித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் விதமாக கொண்டு வரப்பட்ட ஒரு குற்றச் சட்டம் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்த சட்டத்தை கொண்டு வந்ததில் மிக முக்கிய பங்காற்றியவர் பைடன்.

அமெரிக்காவில் குற்றச் செயல்கள் அதிகரித்திருந்த போது, பில் கிளிண்டன் தலைமையிலான அரசு எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து கடும் சட்டத்தை கொண்டு வந்தது. 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அந்த குற்றச் சட்டத்தினால், அமெரிக்காவின் சிறைகளில் சிறைவாசிகள் அதிகரித்தனர். குறிப்பாக, ஆப்பிரிக்கஅமெரிக்கர்கள் சிறைவாசிகள் ஆனார்கள். கிராக் எனப்படும் போதை பொருளை பயன்படுத்துவர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது. அதனை ஏழை மக்கள் அதிகமாக பயன்படுத்தினர். ட்ரம்ப்புடனான இறுதி விவாதத்தில், இந்த விவகாரத்தில் தான் செய்தது தவறு என பைடன் ஒப்புக் கொண்டார்.

வெளியுறவு விவகார ஆணையம் நடத்திய விசாரணையில், சதாம் உசேன் அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பலர் தவறான கருத்துகளை தெரிவித்தனர். இதனால், 2002 ஆம் ஆண்டு அந்த ஆணையத்தின் தலைவராக இருந்த பைடன், ஈராக் போருக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தார். பின்னர், இதிலும் தான் தவறான முடிவை எடுத்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.

ஒபாமாவுக்கு நெருக்கமாக கருதப்பட்ட பைடன்

உலகமே பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவித்தபோது, பைடனை தனது துணை அதிபர் வேட்பாளராக ஒபாமா தேர்ந்தெடுத்தார். தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு பைடன் துணை அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். சிறப்பாக செயல்பட்ட பைடன், 800 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றார். இந்த பொறுப்பை ஒபாமா அவருக்கு வழங்கியிருந்தார். இந்த திட்டத்தின் வெற்றி காரணமாக, அமெரிக்க பொருளாதாரம் மீண்டது.

கடந்த, 2016 ஆம் ஆண்டு, பைடனின் மூத்த மகன் மூளை புற்றுநோயால் உயிரிழந்தார். இதன் காரணமாக, அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் பைடன் போட்டியிட முடியாமல் போனது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, ட்ரம்ப்பை தோற்கடிக்க பைடன் தனது பரப்புரையை தொடங்கினார். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் ஆதரவால், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் பைடன் வெற்றி பெற்றார். இறுதியில், கரோனாவுக்கு மத்தியில் யாரும் கண்டிராத பரப்புரையை மேற்கொண்டு ட்ரம்ப்பை வீழ்த்தினார்.

அதிபராக பைடன் சந்தித்த சவால்கள்

இன்று, 79ஆவது பிறந்த நாளை காணும் பைடன், அதிபராக பொறுப்பு வகிக்கும் மிக வயதான நபர் ஆவார். வரும் ஜனவரி 20ஆம் தேதியோடு, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பு ஏற்று ஓராண்டு காலம் நிறைவாகவுள்ளது. இந்த ஓராண்டு காலத்தில், அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். பெருந்தொற்று தொடங்கி ஆப்கானிஸ்தான் விவகாரம் வரை, பைடன் மீது கலவையான விமர்சனங்களே வைக்கப்படுகிறது.

குறிப்பாக, ஆப்கானிஸ்தான் விவகாரத்தில், அங்கிருந்து படைகளை அமெரிக்கா திரும்ப பெற்று கொண்டது. அமெரிக்க படைகள் வெளியேறிய ஒரு சில நாள்களிலேயே, ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாடும் தலிபான்கள் கீழ்வந்து சேர்ந்தது. இது, பைடனுக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் போரின் முடிவு என்ன என பைடனை நோக்கி கேள்விகள் குவிகின்றன.

உலகின் மிக பெரிய வல்லரசாக உருவெடுத்துள்ள சீனாவை கையாளும் விவகாரத்திலும் பைடன் தலைமையிலான அமெரிக்க திணறிவருகிறது. மேற்கத்திய நாடுகள், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல நாடுகளின் ஆதரவு அமெரிக்காவுக்கு இருந்தபோதிலும், சீனாவின் ஆதிக்கத்திற்கு பைடனால் முடிவுரை எழுத முடியவில்லை.

உலகம் முழுவதும் சர்வாதிகாரிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மனித உரிமைகள் கேள்விக்குள்ளாகும் சமயத்தில் ஜனநாயகத்தின் தாயகமாக திகழும் அமெரிக்காவுக்கும் பைடனுக்கு பொறுப்பு அதிகமாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

SCROLL FOR NEXT