சிறப்புக் கட்டுரைகள்

முடிவுக்கு வந்த விவசாயிகளின் அறப்போராட்டம்! - ஒரு விரிவான பார்வை

கோமதி எம். முத்துமாரி

கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய அறப்போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

விவசாய சங்கங்களோடு ஒருமுறை கூட ஆலோசனை நடத்தாமல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள்தான் விவசாயிகளின் இந்த ஓராண்டு போராட்டத்திற்குக் காரணம். 

விவசாயிகளின் நலன் காக்கவும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவுமே என்று கூறி மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வெகுண்டெழுந்தனர். 

கடந்த ஆண்டு இறுதியில் கடும் குளிருக்கு மத்தியிலும் கரோனா 2-ம் அலை தீவிரத்திற்கு மத்தியிலும்கூட விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இதற்கு மத்தியில் போராட்டத்தின் இடையே, விவசாயிகள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன. 

இந்த மூன்று சட்டங்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறியதோடு மட்டுமின்றி அதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர் விவசாயப் போராளிகள். 

விவசாயிகளின் இந்த போராட்டம் எப்போது தொடங்கியது? போராட்டத்திற்கான காரணங்கள் என்ன? விவசாயிகள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம். 

வேளாண் சட்டங்கள் கூறுவது என்ன? 

► விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா

► விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா

► அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திருத்த மசோதா

இந்த மூன்று மசோதாக்களும் கடந்த செப்டம்பர் 20-22 தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. 

இந்த புதிய வேளாண் சட்டங்களின் மூலமாக விவசாயிகள் தங்களுடைய பொருள்களை ஆன்லைனில் விற்க முடியும். ஆனால், மத்திய அரசு முன்னதாகவே e-NAM என்ற திட்டத்தைக் கொண்டுவந்து செயல்பாட்டில் உள்ளது. NAM எனும் தேசிய விவசாய சந்தை (National Agricultural Market) மூலமாக இந்தியாவில் உள்ள எந்த ஒரு விவசாயியும் தங்கள் வேளாண் பொருள்களை ஆன்லைன் மூலமாக விற்கலாம். ஆனால், ஒரு சில விவசாய சங்கங்களே இதனைப் பயன்படுத்துகின்றன. 

அடுத்ததாக விவசாயிகள் கொடுக்கும் விளைபொருள்களுக்கு உடனடியாகவோ அல்லது 3 நாட்களுக்கு உள்ளாகவோ பணத்தை செலுத்திவிட வேண்டும். இதுவும் விவசாயிகளுக்கு சாதகமான ஒன்றுதான். ஆனால், வேளாண் பொருள்கள் தரமில்லை எனில் ஒப்பந்தம் கைவிடப்பட்டு விளைச்சல் பணம்கூட கிடைக்காமல் போகலாம். 

அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் விலை குறையும்போது பதுக்கிவைத்து விலை அதிகரிக்கும்போது பொருள்கள் சந்தைக்கு வரும். பொருள்கள் சந்தையில் இல்லாத சமயத்தில் தேவை அதிகமாகும். இதனால் விலை மேலும் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. 

அடுத்து ஒரு முக்கியமான காரணம், ஏ.பி.எம்.சி. எனப்படும் வேளாண் மண்டிகள். பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதுமாக இவற்றையே நம்பியுள்ளன. இங்கு வேளாண் பொருள்கள் ஏலத்தில் விடப்படும். வேளாண் பொருள்களை வாங்கி விற்கக் கூடிய இடைத்தரகர்கள் இருப்பார்கள். ஏலத்தை பார்வையிட ஒரு அரசு அதிகாரியும் இருப்பார். விவசாயிகளின் வேளாண் பொருள்களுக்கு இங்கு சரியான விலை கிடைக்கும் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் மண்டிகளை நம்பியே இருக்கின்றனர். இதில் இடைத்தரகர்களுக்கும் 6 முதல் 7 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். புதிய வேளாண் சட்டங்களில் இந்த மண்டிகளை அரசு கைவிடுகிறது. இதனால் விவசாயிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். 

குறைந்தபட்ச ஆதார விலை

அடுத்ததாக விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது குறைந்த பட்ச ஆதார விலை.  தற்போது அரிசி, கோதுமை உள்ளிட்ட முக்கியப் பொருள்களை அரசே கொள்முதல் செய்து வருகிறது. விவசாயிகள் தங்களது பயிர்களை விற்பதற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுகிறது. விளைச்சலுக்கு ஆகும் செலவைவிட இது சற்று அதிகமாக இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் பணமாவது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த 'குறைந்த பட்ச ஆதார விலை' முறை 1960களில் இருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போதைய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. வேளாண் பொருள்களை விவசாயிகளிடமிருந்து எவரொருவரும் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதில் அதிகம் ஈடுபடும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்றும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். 

கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தங்களது பொருள்களை விற்கலாம் என்றபோது குறைந்த ஏக்கர் நிலம் கொண்ட சாதாரண விவசாயி இதனைக் கையாள முடியுமா என்பது கேள்விக்குறிதான். 

தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதான் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் வேளாண் பொருள்களுக்கு  50 சதவீத லாபத்துடன் விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஒரு விவசாயச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றால் அது தொடர்பான விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது நாடாளுமன்றக் குழுவை அமைத்து விவசாயிகளுடன் கலந்தாலோசித்து சட்டங்கள் குறித்து கருத்துகளை கேட்டறிந்த பின்னரே நிறைவேற்ற வேண்டும். ஆனால் மத்திய அரசு இதனை செய்யத் தவறிவிட்டதே விவசாயிகளை தில்லியை நோக்கி படையெடுக்க வைத்தது. 

பாஜக அரசின் வேளாண் திட்டங்கள்

விவசாயிகளுக்காகப் பல்வேறு சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது உண்மைதான்.

கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிஎம் க்ரிஷி சின்சயி யோஜனா, நீர்பாசனத் திட்டத்துக்காக கொண்டுவரப்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆம் ஆண்டு விவசாயிகள் தங்களது வேளாண் பொருள்களை இணையம் மூலமாக விற்பதற்கு e-NAM திட்டமும் 2016ல் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பொருட்டு பசல் பீமா யோஜனா திட்டமும் கொண்டு வரப்பட்டது. ஆனால், இத்திட்டத்தில் விவசாயிகள் பலருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்று புகாரும் உள்ளது. 

2018 ஆம் ஆண்டு வேளாண் பொருள்களை சேமித்து வைப்பதற்காக 'ஆபரேஷன் கிரீன்' திட்டம் கொண்டு வரப்பட்டு இதற்காக 150 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்த மத்திய அரசு இதுவரை அதற்கான தொகையை ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 

விவசாயிகளுக்காக இவ்வாறு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அதிகமாக விவசாயிகள் பயன்பெறவில்லை என்ற கருத்தே பொதுவாக முன்வைக்கப்படுகிறது. 

பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் அதிகம் பங்குபெற்றது ஏன்? 

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி போராட்டக் களத்தில் அதிகம் இருந்தனர். இதில், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம். அதிகம் வருமானம் ஈட்டும் விவசாயிகள் கொண்ட மாநிலத்தில் பஞ்சாப் முதலிடத்தில் இருக்கிறது. இவர்கள் அதிகமாக விவசாய மண்டிகளை நம்பியுள்ளனர். 

பிகாரில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏ.பி.எம்.சி எனும் விவசாய மண்டி நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தற்போது விவசாயிகளின் வருமானப் பட்டியலில் பிகார் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது எப்போது?

விவசாயிகள் நேரடியாகவே தில்லியில்தான் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யவில்லை. தில்லி போராட்டத்திற்கு முன்னதாகவே அரசியல்வாதிகள், ஊடகத்தினர் கவனம் பெறாத பல கட்டப் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தது குறித்து பலரும் அறியவில்லை. 

ரயில் மறியல் போராட்டம், வேளாண் சட்டங்களால் பயன்பெறுவதாகக் கூறப்படும் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகளை முற்றுகையிடும் போராட்டம், ரிலையன்ஸ் ஜியோ டவர்களை முற்றுகையிடும் போராட்டம் உள்ளிட்டவை பஞ்சாப், ஹரியாணா மாவட்டங்களில் நடைபெற்றன. 

செப்டம்பர் 20 -22 தேதிகளில் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். முதல்முறையாக, வேளாண் சட்டங்கள் குறித்து அக்டோபர் 14 ஆம் தேதி மத்திய அரசு அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. 

வேளாண் துறை அமைச்சருடன்தான் பேச வேண்டும் என்று விவசாயிகள் கூற மத்திய அரசோ வேளாண் துறைச் செயலாளரை அனுப்பி வைத்தது. எனினும் அதில் முடிவு எட்டப்படவில்லை. இதன் பின்னரும் பல்வேறு முறை மத்திய அரசை வலியுறுத்தி வந்த விவசாயிகள் ஒரு கட்டத்தில் தங்கள் குரலுக்கு அரசு செவி சாய்க்காமல் போகவே தலைநகரை முற்றுகையிடப் போகிறோம் என்று அறிவித்தனர். 

விவசாயிகளின் மீது தாக்குதல் 

நவம்பர் 25 ஆம் தேதி, பஞ்சாப், ஹரியாணா மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இணைந்து பேரணியாக பல இன்னல்களைக் கடந்து தில்லியை அடைந்தனர். 

விவசாயிகள் உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநில எல்லைகளைக் கடக்கும்போது காவல்துறையினர் கான்கிரீட் தடுப்புகளை அமைத்து, தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, தண்ணீரைப் பாய்ச்சிக் கலைக்க முற்பட்டனர். ஆனால், உயிரே போனாலும் தில்லியை அடைவோம் என்ற கொள்கையை நிறைவேற்றிக் காட்டியுள்ளனர். தில்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பின்னர் தங்கள் வலுவான போராட்டத்தால் புராரி மைதானத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டனர். இது நடந்தது நவம்பர் 26 அன்று. 

கடந்த ஆண்டு இறுதியில் 15 டிகிரி வெப்பநிலைக்கும் குறைவான கடும் குளிரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் குடும்பத்தினரை விட்டும் சிலர் தங்கள் குடும்பத்தினருடனும் தில்லி எல்லைகளில் இடம்பெயர்ந்தனர். 

டிராக்டர்களைக் குடிசைகளாக மாற்றித் தெருவில் விறகு அடுப்புகளை வைத்து தாங்களே சமைத்து உண்டு இரவில் தீமூட்டி குளிர்காய்ந்து இறுதியாக போராட்டக் களத்தில் வெங்காய விளைச்சல் வரை நடந்தது உலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகள் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 

சீக்கிய அமைப்புகள் முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமூக , தன்னார்வல அமைப்புகள் விவசாயிகளுக்குத் தேவையான பொருள்களை வழங்கி ஆதரவு தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

ஒவ்வொருநாளும் ஒவ்வொருவித போராட்டத்தை முன்னெடுத்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர் விவசாயிகள். அவ்வப்போது பொழுதுபோக்குகளில் ஈடுபட விவசாயிகள், போராட்டக் காலத்தில் வெங்காயத்தை பயிரிட்டும், மற்ற மதத்தினருக்கும் சீக்கிய தலைப்பாகைகளை அணிவித்தும் மக்களின் கவனத்தைப் பெற்றனர். 

விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னணியில் எதிர்க்கட்சியினர் இருப்பதாக மத்திய பாஜக அரசு குற்றம் சாட்டிவந்தது. ஆனால், தங்களுக்குப் பின்னால் எந்த ஓர் அமைப்பும் இல்லை என்றும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் போராடுவதாகவும் விவசாயிகள் தெளிவுபடுத்தினர். நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களும் தில்லி போராட்டத்தில் பங்கேற்று வட இந்திய விவசாயிகளுக்கு ஆதரவுக்குரல் கொடுத்தன. 

போராட்டத்தைக் கலைக்க முயற்சி

விவசாயிகளின் இந்த ஒருங்கிணைந்த போராட்டத்தை சீர்குலைக்க அரசும் காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை எடுக்கத்தான் செய்தது. 

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இடையே உள்ள யமுனை- சட்லஜ் நதி நீர் பிரச்சினை தூண்டி விடப்பட்டது. ஒரு சில விவசாய சங்கங்களிடம் மட்டும் பேசி வேளாண் சட்டங்களுக்கு ஆதரவுக் கடிதம் பெறப்பட்டது. பின்னர் இதுகுறித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் விளக்கம் தெரிவித்தது முதல் இவ்வாறான அரசின் பல கட்ட முயற்சிகளை தோற்கடித்தனர். 

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இதுவரை பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் எதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை திருத்தம் செய்கிறோம் என்று மத்திய அரசு பல வரைவு அறிக்கைகளை விவசாயிகளிடம் கொடுத்தும் பயனில்லாமல் இருந்தது. ஏனெனில் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டி விவகாரம் குறித்த விவசாயிகளின் கோரிக்கைகள் அதில் இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி, சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒற்றைக் கோரிக்கையாக இருந்தது. 

மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றபோதுகூட அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவையே சாப்பிட்டது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. ஆம், அவர்கள் தங்கள் உணவுக்காக யாரையும் நம்பியில்லை, இந்த நாடுதான் விவசாயிகளையும், விவசாயத்தையும் நம்பியிருக்கிறது. 

தில்லி எல்லையில் போராடிவரும் விவசாயிகள் இதுவரை மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தா வண்ணமே போராடி வந்தனர். தில்லியில் எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமே குறிப்பிடத்தக்க ஒன்று. 

அரசியல் கட்சிகள், மக்கள் ஆதரவு

விவசாய சங்கங்கள், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் தில்லிக்கு நேரடியாக சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். ஆனால், அரசியல் நோக்கில் வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரையும் போராட்டத்தில் உள்நுழைய அனுமதிக்க மாட்டோம் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்தனர்.  

போராட்டக்களத்தில் இருப்பவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னலம் கருதாது பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து அங்குள்ளவர்களுக்கு இலவசமாக சேவை செய்யும்  முடிதிருத்தும் கடைக்காரர்கள், பல்வேறு மாநிலங்களில் உள்ள தன்னார்வலர்களிடமிருந்து வரும் உணவுப் பொருள்கள், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் என விவசாயிகளுக்கு ஆதரவு குவிந்தது. 

விவசாயிகளுக்கு ஆதரவாக 2 கோடி கையெழுத்து அடங்கிய ஒப்பந்தங்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. அதுபோல பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாய சங்கங்கள் நேரடியாக தலைநகர் தில்லி சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஓராண்டு நிறைவு 

கடந்த செப்டம்பர் மாதம் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதை அடுத்து செப்டம்பர் 27 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. தலைநகர் தில்லியில் முக்கிய சாலைகளை முற்றுகையிட்டும் விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்தினர். ஜந்தர் மந்தரில் மாபெரும் பேரணியும் முக்கிய சாலைகளில் மறியல் போராட்டம், ரயில் மறியல் என நடைபெற்றது. அதுபோல பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 

பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்கள், விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

வேளாண் சட்டங்கள் ரத்து

இந்த சூழ்நிலையில்தான் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்கள் எப்படி எந்த முன்னறிவிப்பும் இன்றி அறிமுகமாகி நிறைவேற்றப்பட்டதோ அதே கோணத்தில் இன்று ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

எனினும், வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று விவசாயிகளின் சார்பில் பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் கடந்த 350 நாள்கள் நடத்திய தொடர் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. போராட்டத்தின் வெற்றிக்கு பின்னால் உள்ள இழப்புகள், இன்னல்கள் எண்ணிலடங்காதவை. தங்கள் குடும்பத்தினரை விட்டு தில்லிக்கு வந்து கடும் குளிரிலும் போராட்டம் தொடர்ந்தது. இந்த ஓராண்டாக விவசாய பொருள்கள் உற்பத்தி தடைபட்டுள்ளது. விவசாயிகளின் ஓராண்டு வருமானம் பறிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் மேலாக, போராட்டத்தில் பல்வேறு காரணங்களால் சுமார் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வேளாண் சட்டப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அத்துணை விவசாயிகளுக்கும் இந்த போராட்ட வெற்றியை சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறுவழியில்லை. 

ஓராண்டாக விவசாயிகள் பட்ட இன்னல்களை சரிசெய்ய முடியாது. ஆனால், தற்போது தில்லியில் உள்ள விவசாயிகள் பாதுகாப்பாக தங்கள் இல்லம் திரும்ப அரசு உரிய வசதிகளை செய்துதர வேண்டும், விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும், அவர்களின் பொருளாதாரத்தை சரிசெய்ய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். 

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பது ஒருபுறம் இருந்தாலும் ஓராண்டிற்கும் மேலாக பல தடைகளைத் தாண்டி தொடரும் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியே.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT