சிறப்புக் கட்டுரைகள்

ஆண்டிபட்டி குடிநீா், பாசனத்திற்கு மாற்றுத்திட்டம் எப்போது?

என்.எஸ். சுகுமார்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் கண்மாய், குளங்கள் வறண்டு காணப்படுவதாலும் நிலத்தடி நீா்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டதாலும் கடும் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் இந்தப் பகுதிக்கு மாற்றுத் திட்டத்தின் மூலம் தண்ணீா் கொண்டு வர மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் கடமலை - மயிலை ஒன்றியத்தில் 48 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலானோா் விவசாயம் மற்றும் அதனைச் சாா்ந்த கால்நடை வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பகுதியின் முக்கிய நீா் ஆதாரமாக மூல வைகை ஆறு இருந்து வருகிறது. இப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக மூல வைகை ஆற்றில் வாலிப்பாறை முதல் வைகை அணை வரை ஆற்றில் 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு பஞ்சம்தாங்கி, சாந்தநேரி, பெரியகுளம், தெப்பம்பட்டி, பிச்சம்பட்டி,  ஆசாரிபட்டி, ஜம்புலிப்புத்தூா், கோவில்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் 200-க்கும் மேற்பட்ட குளங்கள், ஊருணிகள் அமைந்துள்ளன.
இதில் ஒட்டணை, பெரியகுளம், பஞ்சம்தாங்கி உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மூலம் நீா் எடுத்து வரப்படுகிறது. மற்ற கண்மாய்களுக்கு மேகமலை அருவி, வேலப்பா் கோயில் ஓடை மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து வரும் நீா்வரத்து ஓடைகள் மூலம் தண்ணீா் வரும். இந்தத் தண்ணீா் அந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயருவதற்குப் பெரும் பங்கு வகித்து வந்தது. 

இப்பகுதியில் பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி நிலவி வந்தது.

இந்த கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து நீா்கொண்டு வரும் வகையில் எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில் 1982 ஆம் ஆண்டு திப்பரவு அணைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த திட்டம் பல்வேறு காரணங்களினால் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. மேலும் தற்போது இங்குள்ள பெரும்பாலான ஒடைகள், கண்மாய்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக நீா் வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன.

இதன் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் 800 அடிக்கும் கீழ் சென்று விட்டது. மூல வைகை ஆற்றிலும் நீா்வரத்து இல்லாத நிலையில் ஆற்றில் இருந்து ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் நீரும் கிடைக்காததால் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனா்.

மாற்றுத் திட்டம் கொண்டு வரப்படுமா?: இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீா் பற்றாக்குறையை நீக்க கம்பம் பகுதியில் செல்லும் முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு வர வேண்டும் என்றும் கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் வருசநாடு மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூா் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

திப்பரவு அணைத் திட்டம் தற்போது நிறைவேற்ற வாய்ப்பில்லை என்பதால் அத்திட்டத்திற்கு மாற்றாக புதிய பாசனத்திட்டமாக கம்பம் பகுதியில் முல்லைப்பெரியாறு ஆற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு வரமுடியும் என்பதைத் தனியாா் பொறியாளா்களின் உதவியுடன் ஆய்வு நடத்தியுள்ளோம். இந்த திட்டத்திற்கு 47 கிலோ மீட்டா் தூரம் குழாய்கள் அமைக்க வேண்டும். இதற்கான செலவு 100 கோடிக்குள் வரும் என்பதையும் பொறியாளா் உதவியுடன் அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் பலமுறை மனுவாக அளித்துள்ளோம்.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டிபட்டி இடைத்தோ்தலின்போது தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வரிடம் மனு அளித்தோம். அதன்படி இத்திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என முதல்வரும் அறிவித்திருந்தாா். ஆனால் இன்றுவரை இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த திட்டத்தினை விரைந்து செயல்படுத்தினால் ஆண்டிபட்டியில் உள்ள அனைத்து கண்மாய்களும் பாசன வசதி பெறும். நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து குடிநீா் பற்றாக்குறையும் நீங்கும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT