உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இளம் வயதில் ஊராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார் திருப்பூர் பெண்மணி.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் குப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி மணிவேல், இவரது மனைவி கனகரத்தினம், இந்தத் தம்பதியின் மூத்த மகள் முத்துபிரியா (22).
இவர் பி.இ. பொறியியல் படிப்பைப் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துள்ளார். இந்த நிலையில், தந்தை அரசியலில் ஈடுபட்டு வந்ததால் உள்ளாட்சி தேர்தலில் நவனாரி ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியுள்ளார். இதில், 320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த முத்துபிரியா சிறு வயது முதலே சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது என்கிறார் இவரது தந்தை மணிவேல்.
அவர் மேலும் கூறுகையில், முத்துபிரியா கல்லூரியில் படிக்கும் பொழுதே சமூக சேவையில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். தான் பிறந்த கிராமத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
அதே வேளையில், தன்னால் இயன்ற அளவுக்குக் கிராமத்தில் உள்ள பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கொங்கு மண்டலத்தில் இளம் வயத்தில் ஊராட்சி தலைவராக தனது மகள் வெற்றி பெற்றுள்ளார் என்கிறார் பெருமையுடன். தந்தை மகளுக்கு ஆற்றும் நன்றி!