குழந்தைகளின் மெனுவில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய 4 உணவுப் பொருட்கள்!

குழந்தைகளின் மெனுவில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய 4 உணவுப் பொருட்கள்!

குழந்தைகளின் மெனுவைப் பொருத்தவரை எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. பெற்றோர்களான நாம் எதையெல்லாம், சத்தானது, ஆரோக்யமானது என்று அழுத்திச் சொல்லி உண்ணச் சொல்கிறோமோ அதெல்லாம் அவர்களுக்கு உண்ணத் தகாததாகி விடும

குழந்தைகளின் மெனுவைப் பொருத்தவரை எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. பெற்றோர்களான நாம் எதையெல்லாம், சத்தானது, ஆரோக்யமானது என்று அழுத்திச் சொல்லி உண்ணச் சொல்கிறோமோ அதெல்லாம் அவர்களுக்கு உண்ணத் தகாததாகி விடும். எதையெல்லாம் ஜங்க் ஃபுட், சாப்பிடக் கூடாது என்று வலுக்கட்டாயமாகத் தடுக்கிறோமோ, அதெல்லாம் தான் அவர்களுக்கு ரொம்பப் பிடித்த மெனுக்களாக இருக்கும்.

யோசித்துப்பாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்த டாப் டென் மெனுக்கள் என்னவென்று;

  • நூடுல்ஸ்
  • பீட்ஸா
  • பர்கர்
  • சிக்கன் கபாப், மட்டன் கபாப் (இரண்டிலும் என்னென்ன ரோஸ்டெட் வகைகள் உண்டோ, அத்தனையும் குழந்தைகளுக்குப் பிடிக்கும்)
  • தந்தூரி அசைவ உணவுகள்
  • வெஜிடேரியன் எடுத்துக் கொண்டால்
  • பூரி, நெய் ரோஸ்ட்,
  • பனீர் டிக்கா, காலி ஃப்ளவர், காளான் ரோஸ்ட்,
  • ஃபிஷ் ஃப்ரை இப்படித்தான் தொடர்கிறது அவர்களது ஃபேவரிட் மெனு.

அவர்களிடம் போய் சீரியல் சாப்பிடுங்கள், தினமும் வால்நட் சாப்பிடுங்கள், ப்ளூபெர்ரீஸ் உடல் ஆரோக்யத்துக்கு நல்லது என்று சொல்லிப் பாருங்கள். அப்புறம் குட்டிச் சந்திரமுகி, சந்திர முகன்களாக ;)) மாறி விடமாட்டார்களா என்ன? 

அதனால் பாட்டி சொன்ன விதியாக ஒன்றை இங்கு நாம் பின்பற்றிப் பார்க்கலாம்.

சத்தான எதைக் கொடுப்பதாக இருந்தாலும் ஆரம்பத்தில் அதைப் பற்றி விலாவரியாக விளக்கோ, விளக்கென்று விளக்கி குழந்தைகளுக்கு அந்த உணவுப் பொருட்களின் மீது ஆர்வம் வருவதற்குப் பதிலாக சலிப்பை வரவழைத்து விடத் தேவையில்லை. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய விதை உணவு மெனுக்களை பழக்க விரும்பினீர்கள் என்றால் முதலில் அதை அவர்களுடனான அரட்டையின் போது தொடங்குங்கள். இது நல்ல பலனைத் தரக்கூடும்.

அதே போல பழங்களை சாப்பிடப் பழக்க விரும்பினால் இரவுகளில் படுக்கைக்குச் செல்லும் முன் தினம் ஒரு வாழைப்பழம், காலை உணவுடன் தினம் ஒரு ஆப்பிள் அல்லது ஆரஞ்சு, மதிய உணவுடன் தினம் ஒரு மாதுளை அல்லது கிவி என்று பழக்குங்கள். நிச்சயம் பலன் இருக்கும். 

மொத்தமாக ஒரே நேரத்தில் நீ இதைத்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தி உண்ண வைப்பதைக் காட்டிலும், பெற்றோரான நீங்கள் முதலில் சாப்பிடத் தொடங்கி பேச்சோடு பேச்சாக அதை குழந்தைகளுக்கும் தொற்றிக் கொள்ளச் செய்யலாம். எங்கள் பாட்டி எங்களுக்கு இப்படித்தான் சத்தான உணவுகளைச் சாப்பிடப் பழக்கினார். இன்று மெனு விஷயத்தில் எங்களுக்கு எந்த ஒதுக்கவும் இல்லை.

பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், கீரைகள், நட்ஸ்கள் என்று எல்லாவற்றையும் கலந்து சாப்பிடும் ஆர்வம் இப்படித்தான் வந்தது. 

மேற்கண்டவாறு வீட்டுப் பெரியவர்களால் பழக்கப்படுத்தப் படாத போது;

சில குழந்தைகளுக்கு எப்போதும் உணவில் தயிர் மட்டுமே வேண்டும். எப்போது பார்த்தாலும் தயிர்ச்சாதமே சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

சிலரோ பள்ளி இறுதி வகுப்பு வந்த பிறகும் கூட வெறும் சாம்பாரும், உருளைக்கிழங்கு வறுவலும் மட்டுமே சாப்பிட்டுப் பழகிக் கொண்டிருப்பார்கள். அதைத் தவிர்த்த பிற உணவுகள் அனைத்துமே அவர்களுக்கு வேப்பங்காய் தான்.

சிலர் அன்னப்பட்சி போல பாலில் மட்டுமே உயிர் வாழ்வார்கள். மூன்று போஜனமும் பால் தான் அவர்களுக்கு. இதெல்லாம் தேறாத கேஸ் என்று பெற்றோரே அவர்களைத் திருத்த வகையின்றி திண்டாடிக் கொண்டிருப்பார்கள். 

சிலருக்கு வினோதமான உணவுப் பழக்கம் இருக்கும். சில குழந்தைகள் பருப்புச் சாதத்துக்கு ஜிலேபியும், லட்டும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பழகியிருப்பார்கள். 

இதெல்லாமும் ஆரோக்யத்துக்கு உகந்தவை அல்ல. 

உங்கள் குழந்தைகளின் மெனுவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய முக்கியமான 4 உணவு வகைகளைப் பற்றி இப்போது சொல்கிறேன். முதலில் அவற்றில் இருந்து தொடங்குங்கள். பிறகு படிப்படியாக அடுத்தடுத்த ஆரோக்ய மெனுக்களுக்கு தாவலாம்.

1. சீரியல்ஸ் என்று சொல்லப்படக்கூடிய பருப்பு வகைகள். 

மளிகை லிஸ்டில் இடம் பெறும் உளுந்தப் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம்பருப்பு என அத்தனை பருப்பு வகைகளுமே குழந்தைகளுக்கு தினமும் சாப்பிடத் தரத்தக்கவையே. இவற்றில் கூடுதலாக சோயா பீன்ஸ் பருப்பு, ராஜ்மா, மொச்சை, முக்கடலை, பட்டாணி என்று தினமொரு வெரைட்டியாக சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பருப்பு வகைகள் இல்லாமல் குழந்தைகளின் ஒரு நாள் கூட கழிய அனுமதிக்காதீர்கள். இவற்றை நீங்கள் உங்கள் வழக்கப்படி குழம்பு சாதமாகவோ அல்லது தனியாக அவித்தோ, வறுத்தோ கூட அவர்களைச் சாப்பிடச் செய்யலாம். இவை அனைத்துமே புரதம் நிறைந்த உணவுவகைகள் லிஸ்டில் சேர்ந்தவை. குழந்தைகளின் அடிப்படை உடல் பலத்தை கட்டமைக்கக் கூடியவை இவையே.

2. கீரைகள்:

இந்தியாவில் பலவகைக் கீரைகள் புழக்கத்தில் உள்ளன. அதில் சாப்பிடக் கூடியவை மட்டுமே கிட்டத்தட்ட 60 வகைகள் உண்டு. அவற்றில் உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான சுவையில் அமையும் கீரைகளை தினம் ஒன்றாக வாரம் முழுவதும் அவித்தோ, பொரித்தோ அல்லது மசித்தோ சாப்பிடத் தரலாம்.

3. வால்நட்: 

வால்நட்டைப் பார்த்திருப்பீர்கள். அதன் வடிவமே கிட்டத்தட்ட மனித மூளை போன்றது தான். ஒரு கைப்பிடி வால்நட்டில் மட்டும் 2.6 கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிரம்பியுள்ளது. இது மனித மூளையின் செயல்திறன் அதிகரிப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பிலும், இதய செயல்பாட்டைச் சீரமைப்பதிலும் கூட வால்நட்டின் பங்கு அதிகம்.எல்லாவற்றையும் விட முக்கியமாக வால்நட்டில் அதிகமிருக்கும் மெலட்டோனின் குழந்தைகளின் ஆரோக்யமான தூக்கத்திற்கு உத்தரவாதமளிக்கிறது.

4. ப்ளூபெர்ரி: 

ப்ளூபெர்ரியில் பாலிஃபீனால் ஆண்ட்டி ஆக்ஸிடண்டுகளின் சதவிகிதம் அபிரிமிதமாக இருப்பதால் அவை ரத்த நாளங்களைப் பாதுகாத்து அவற்றில் வீக்கமிருப்பின் அதையும் சரி செய்து கொள்ள உதவுகிறது. அத்துடன் பிற எந்தப் பழங்களிலும் இல்லாத க்வாலிட்டியாக ப்ளூபெர்ரி பழங்களுக்கு மாத்திரம் டியூமர் செல்களை உருவாகாமல் தடுக்கும் சக்தியும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால் நம் குழந்தைகளின் மெனுவில் நிச்சயம் இடம் பெற வேண்டிய பழவகைகளில் இது முக்கிய இடம்பிடிக்கிறது.

கீரைகளை குழந்தைகள் தனியாகச் சாப்பிட விரும்பாவிட்டால் அவற்றை சப்பாத்தி மற்றும் பூரியில் ஸ்டஃப் செய்து கொடுத்து சாப்பிடப் பழக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com