நடுப்பக்கக் கட்டுரைகள்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல!

டி.எஸ். தியாகராசன்

 திரைப்படத்தில் மகாராஜாவாக நடிப்பவரை உண்மையான மகாராஜா என்று எண்ணி சமூகம் மதிப்பு அளிக்கும் காலமிது. திரைப்படங்களில் வரும் மகாராஜா தலையில் அணியும் கிரீடம், உடுத்தும் உடை, இடுப்பில் வைத்திருக்கும் வாள், உடலில் அணியும் ஆபரணங்கள் எல்லாமே இரவல்தான். திரையில் நடிப்பவர் நம்மில் ஒருவர்தான் என்று உணர வேண்டும். மக்கள் தங்களது வயிற்றுப் பிழைப்பிற்காக பல பணிகளில் சேர்ந்து உழைப்பது போலவே நடிகரும் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக அரிதாரம் பூசி நடிக்கிறார், அவ்வளவே!
 இதை புரிந்து கொண்டால், நமது பொழுதுபோக்கிற்காக நாம் காசு செலவு செய்து சிலமணி நேரம் திரையரங்குகளில் இருந்து விட்டு போகிறோம் என்ற மனநிலையில் நிறைவோடு இல்லம் திரும்பலாம். திரையில் கதாநாயகன் கதாநாயகியை கட்டிப் பிடித்து ஆடுவது போலவோ, பலரை தான் ஒருவராக நின்று சமர் புரிந்து வெற்றி பெறுவது போலவோ நாம் நமது தினசரி வாழ்வில் செய்து காட்ட இயலாது.
 அசல் வீரர் யார், வீரராக நடிப்பவர் யார் என்று மக்கள் இனம் கண்டு கொண்டால் அண்மையில் இரு நடிகர்கள் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் வெளியீட்டு விழா விரோதங்கள், பொருட்சேதங்கள், உயிர்ப் பலிகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
 ஒரு நடிகரின் பிரபலத்தை, அவர் நடித்த படத்தின் வசூல், நடிகரின் பிரமாண்ட கட்-அவுட், பால் அபிஷேகம், அலைமோதும் கூட்டம் இவற்றை அளவு கோலாக வைத்து செய்தி ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு பிரத்யேக விளம்பரச் செய்திகள் வெளியிடுகின்றன. தனது படத்திற்கான மக்களின் பெரியதொரு எழுச்சியை வைத்து நடிகர் தங்களின் நடிப்பிற்கான ஊதியத்தை பன்மடங்காக ஏற்றிக் கொள்கின்றனர்.
 அண்மையில் மும்பையில் ஒரு நடிகர் நடித்த படம் வெளியான முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 55 கோடி. இப்படி நம் நாட்டில் திரைத்தொழிலில் புகழ் பெறும் நடிக, நடிகைகள் ஈட்டும் மூலதனம் இல்லா வருவாய் வேறு யார்க்கும் கிடைக்க வாய்ப்பில்லை.
 அண்மையில் தனக்குப் பிடித்த நடிகரின் திரைப்படம் வெளிவந்த அன்று சாலையில் ஓடும் வாகனத்தில் ஏறி நடனம் ஆடியவர் கீழே விழுந்து இறந்தார் என்ற செய்தி நாளேடுகளில் வந்தது. அந்த இளைஞரின் சாகசத்தைப் பாராட்ட இயலுமா?
 போட்டியாளர் என்று கருதப்படும் இரு கதாநாயகர்களின் ரசிகர்கள் தங்களை ஒரு நாட்டின் படை வீரர்களாக எண்ணிக் கொண்டு பகையரசரின் படைகளோடு மோதுவது போன்று தெருவில் சண்டை போடுவதும் தங்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்க்க திரையரங்குகளை நடத்தும் தொழில் துறையினரின் சொத்துகளை சேதப்படுத்துவதும் அவ்வப்போது காணக் கிடைக்கின்ற காட்சிகள்.
 மக்கள் கூட்டத்தின் அடர்த்தி கருதியும், வரி வசூல் மேம்பாடு கருதியும் காட்சிகளின் எண்ணிக்கையை கூட்டுவதும் அவசியமாகிறது. அதனால் என்ன, நடுநிசியானாலும் சரி, விடியற்காலை ஆனாலும் சரி தன் குடும்பம் மறந்து, பணி துறந்து, உழைப்பைத் தொலைத்து, ஏன் தன்னையே ஈந்து இனிய திரைப்படம் பார்க்க ரசிகர்கள் வெள்ளமென கூடுகிறார்கள்.
 இதனால் மக்கள் மத்தியில் நடிகர்கள் மாபெரும் ஆதரவை ஈட்டுகிறார்கள். சில நேரங்களில் சிலருக்கு அவர் தம் அரசியல் வாழ்விற்கு நுழைவு வாயில்களாக மாறி ஆட்சிக் கட்டிலில் அமரவும் வாய்ப்பாகிறது என்ற உண்மையையும் மறுப்பதற்கு இல்லை.
 திரையும் அரசியலும் பின்னிப் பிணைந்தவை. இதே ஜனவரி 14-ஆம் நாள் மாலை 5.40 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோஷில்லா சுரங்கப் பாதையில் வேலை செய்து வந்த மெகா இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸைச் சார்ந்த 172 சுரங்கத் தொழிலாளர்கள் மிகப்பெரிய பனிச்சரிவில் சிக்கிக் கொண்டார்கள்.
 இந்த நிறுவனம் உடனே நமது இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு தொழிலாளர்களை மீட்க உதவி கேட்டனர். "சேவா பரமோ தர்ம' என்ற தனது குறிக்கோளுக்கு இணங்க இந்திய ராணுவம் மின்னல் வேகத்தில் பணியில் இறங்கியது.
 தனது ராணுவப் பிரிவில் உள்ள அஸ்ஸாம் ரைபிள் ரெஜிமெண்ட் பிரிவில் மீட்புப் பணிகளில் நல்ல முதிர்ச்சியையும், தேர்ச்சியையும் பெற்ற பல நூறு வீரர்களை களத்தில் இறக்கியது. அந்த காரிருள் சூழ்ந்த, மைனஸ் 15 டிகிரிக்கும் குறைவான குளிரில், பல ஆயிரம் அடி உயரம் உள்ள மலைச் சிகரங்களுக்கிடையே உள்ள பகுதியை விரைவாக அடைந்தனர்.
 மோப்ப நாய்கள், பனி மலைச் சரிவுகளில் கால் பதிக்க வல்ல உபகரணங்களோடு ஒன்று கூட்டி ஒழுங்கமைதியோடும் உயிர் துடிப்போடும் களப்பணியாற்றினார்கள். இந்திய ராணுவப் பிரிவில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், உயிர் காக்கும் மருந்துகள், ஏனைய உபகரணங்கள் எல்லாம் மீட்புப் பணி குழுவினரில் அடக்கம். என்ன அற்புதம்!
 இறைவனின் பெருங் கருணையால் வல்லமை கொண்ட இந்திய ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள் ரெஜிமெண்ட், மறுநாள் (ஜனவரி 15) காலை, பனிச்சரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 172 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டார்கள். எலும்பையும் ஊடுருவித் தாக்கும் குளிரில் தங்களது இன்னுயிரையும் பொருட்டாக கருதிடாது, விரைந்து பணி ஆற்றிய நம் இந்திய ராணுவத்தை பாராட்ட வார்த்தைகள் உண்டா?
 ராணுவத்தினர் தங்கள் தேக சுகம் துறந்து தேசம் சுகமாக இருக்க இரவு, பகல் பாராது கனத்த உடையோடும் பெருத்த இயந்திர துப்பாக்கிகளோடும், சில நேரங்களில் தங்கள் உடலின் இயற்கை அழைப்புகளையும் மறந்து, அல்லது தள்ளி வைத்து காவல் காக்கும் இவர்களை, உள் நாட்டில் இரவில் நிம்மதியாக உறங்கி, பகலில் பகைவர்கள் தொல்லை இல்லாது பாதுகாப்போடு உலவும் நமது சமூகமோ, நமது நாட்டு இளைஞர்களோ என்றேனும் ஹீரோக்கள் என்று சொல்லி மகிழ்ந்ததுண்டா?
 அவர்தம் பிறந்த நாளை அல்லது போரில் அமரர் ஆன நாளை நினைத்ததுண்டா? ராணுவத்தினர் நலம் காக்க அரசு விழா எடுக்கும் கொடி நாளின் வசூல் தொகை எவ்வளவு? புகழ் பெற்ற நடிகர் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கேட்கும் ஊதியத்தின் தொகைக்கு பக்கத்திலாவது நிற்குமா? ஆனால் நாட்டிற்காக தங்கள் உயிரையே பணயம் வைத்துப் பயணம் செய்யும் ராணுவ வீரர்தான் அசல். கதாநாயகர்கள் வேடத்தில் தோன்றும் மற்ற நபர்கள் போலிகள்.
 உலகில் மக்கள் திரைமோக கவர்ச்சியில் மகிழ்ந்தும், ஆழ்ந்தும் இருப்பதால் தான் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட ரொனால்டு ரீகன் என்றதொரு நடிகர் ஆளும் அதிபர் ஆனார். இதைவிட வேதனையும், கொடுமையும் கொண்டதொரு நிகழ்ச்சி உலகின் மிகுந்த சுறுசுறுப்பு மிக்க நாடு, மின்னியல் துறையில் சாதனைகளை நிகழ்த்தும் நாடு, கடுமையான உழைப்பு மிக்க நாடு என்று பெயர் பெற்ற ஜப்பான் நாட்டில் நடந்தது.
 நமது நாட்டு பிரதமரின் நட்புக்குரியவரான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே, யமகாமி என்ற ஜப்பானியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். உலகமே கண்ணீர் வடித்தது. கொலையாளி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
 இந்நிலையில் வழக்கம்போல உலகில் கொடூர சம்பவங்கள் நடந்தால் அதனை ஒட்டி திரைப்படம் தயாரித்து பொருள், புகழ் ஈட்டும் வல்லவர்கள் இந்தக் கொலையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்றை "ரெவல்யூஷன் பிளஸ் ஒன்' என்ற பெயரில் தயாரித்து ஜப்பானில் திரையரங்குகளில் வெளியிட்டார்கள்.
 கொலையாளி யமகாமியின் வாழ்க்கை, அவர் ஏன் முன்னாள் பிரதமரை கொன்றார் என்ற போக்கில் திரைப்படம் போகிறது. கொலையாளியின் குடும்ப வாழ்க்கை அவரது கொலை வெறிக்கு எப்படித் துணை நின்றது என்ற தடத்தில் பயணிக்கிறது.
 படத்தைப் பார்த்தவர்கள் யமகாமிக்கு ஏற்பட்ட வாழ்க்கை சூழலில் தன் குறிக்கோளை அடைய அவனுக்கு வேறு மார்க்கமே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். இதுமட்டுமல்ல, ஜப்பான் நாட்டு இளம் மங்கையர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.
 இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், இவர்கள் எல்லாம் "யமகாமி கேர்ல்ஸ்' என்று பெருமையாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். இதனால் கொலையாளியை சிறையில் இருந்து விடுவிக்க சட்ட நிபுணர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, வழக்கு நடத்துவதற்கு நிதி திரட்டப்படுகிறது.
 யமகாமிக்கு பரிசுப் பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் இருக்கும் சிறை அறைக்குள் குவியும் பொருட்களை வைக்க இடம் போதவில்லை. பொதுவாக ஜப்பானியர்கள் மிகுந்த பண்பு நிறைந்தவர்கள் என்ற பெயர் பெற்றவர்கள்.
 அண்மையில் உலக கால்பந்தாட்டப் போட்டியில் இவர்களது அணி தோற்றாலும் ஆடி முடித்த பின்னர் மைதானத்தில் சிந்தியிருந்த குப்பைகளை அகற்றி விட்டுச் சென்றார்கள். இத்தகைய நற்சிந்தனை உடையவர்களிடம் கூட ஒரு திரைப்படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் பார்க்கும்போது திரை வானின் வலிமையை உணர்ந்து கொள்ளலாம்.
 இது சமூகத்தின் வரமா, சாபமா என்றால் இரண்டும்தான். சில ஆண்டுகட்கு முன்னர் தாய்லாந்தில் நீர்க் குகையில் விளையாட்டு வீரர்கள் சிலர், பல நாட்கள் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிய போது உலகமே கண்ணீரோடு பிரார்த்தனை செய்தது.
 ஆனாலும் அவர்களைக் காப்பாற்றிய துணிவு மிக்க வீரர்களையோ, அவர்தம் வாரிசுகளையோ மக்கள் மனம் கொள்ளுவது இல்லை.
 இதே தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படம் ஒன்று நாகப்பட்டினத்தில் ஆண்டு கணக்கில் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது. திரைப்படம் பார்ப்பதற்காகவே, திருவாரூரில் இருந்து மாலையில் தொடர் வண்டியை தென்னக ரயில்வே இயக்கியது என்பது வரலாறு.
 ரசிகர்கள், திரைப்படத்தை ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகக் கருதிடாது திரையில் தோன்றும் நடிகரே தன்னுடைய வாழ்க்கையின் விடியல் என்று எண்ணிட்டால் என் செய்ய? இந்த அவலங்கள் பெருகிடாமல், நாளை உலகு நல்லன பெருக்கி அல்லன அகற்றி வாழவல்ல இளைஞர்களை வழிநடத்த இனி ஒரு விதி செய்வோம்.
 அறிஞர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள் என்று ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று கூடி இளைஞர்களை நெறிப்படுத்த செயல் திட்டத்தை உருவாக்குதல் மிக அவசியம். அப்போதுதான் "மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்பதை இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்வர்.
 
 கட்டுரையாளர்:
 தலைவர்,
 திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT