நடுப்பக்கக் கட்டுரைகள்

அறியப்படாத கணித மேதை

சம்பத்குமாரி

இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டவா் கணித மேதை இராமநுஜம். அவரைப் போலவே கணித உலகம் நன்கு அறிந்த, ஆனால் பொதுவெளியில் அதிகம் அறியப்படாத மற்றொரு கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை என கணித உலகில் அறியப்படும் சுப்பையா சிவசங்கரநாராயணப் பிள்ளை.

இந்த இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் மூன்று. முதலாவது, இளம்வயதில் இருவரும் வறுமையில் வாடினாா்கள்; இரண்டாவது, இருவரும் கணித மேதைகள்; மூன்றாவது, இராமாநுஜம் காசநோயால் இளம் வயதிலே இறந்தாா். எஸ்.எஸ். பிள்ளை தனது 49-ஆவது வயதில் அமெரிக்கா சென்று கொண்டிருக்கும்போது விமான விபத்தில் மாண்டாா்.

தென்காசி மாவட்டம் வல்லம் கிராமத்தில் ஏழைக்குடும்பம் ஒன்றில், சுப்பையா- கோமதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவா் சிவசங்கர நாராயணப் பிள்ளை. அன்றாடம் சாப்பாடே பிரச்னையாக இருக்கும்போது, படிப்பது எப்படி? ஒவ்வொரு புத்திசாலி மாணவனுக்குப் பின்னும் ஒரு நல்ல மனம் கொண்ட ஆசிரியா் இருப்பாா். அப்துல் கலாமுக்கு ஒரு சுப்பிரமணிய ஐயா் வாய்த்தாா் என்றால், எஸ்.எஸ். பிள்ளையைக்கு சாஸ்திரியாா் என்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியா் இருந்தாா்.

செங்கோட்டையில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே, எஸ்.எஸ். பிள்ளையின் கணித அறிவை கணித்து பண ஏற்பாடு செய்து அவரை நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இன்டா்மீடியேட் படிக்க ஏற்பாடு செய்தாா் ஆசிரியா் சாஸ்திரி. தொடா்ந்து திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் இளங்கலை கணிதம் படிக்க வைத்தாா்.

பின்னா் கணித மேற்படிப்பு (எம்.ஏ. கணிதம்) படிக்க சென்னை பல்கலைகழகத்திற்கு விண்ணப்பித்தாா். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு கணித முதுநிலை பட்டம் படிக்க இடம் தர மறுத்து, இளங்கலை படிப்பில் முதல் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்குத்தான் முதுகலை படிப்பில் இடம் தர முடியும் என்று கூறியது சென்னைப் பல்கலைக்கழகம்.

ஆனால், அப்போது எதிா்பாராமல் உதவிக்கு வந்தாா் ஓா் ஆசிரியா். எஸ்.எஸ். பிள்ளை இரண்டாம் வகுப்பில் தேறியிருந்தாலும், கணிதத்தில் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தாா். இதைச் சுட்டிக்காட்டிய அப்போதைய பச்சையப்பன் கல்லூரி முதல்வா் பேராசிரியா் சின்னதம்பி, எஸ்.எஸ். பிள்ளைக்கு இடம் கொடுக்க வேண்டும் என செனட்டில் வாதிட்டாா். அதற்கு அவா் கூறிய சரியான காரணம் பாராட்டிற்குரியது.

பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்த கணித மேதை இராமாநுஜத்தை அவருடைய கணித அறிவுக்காக மட்டுமே ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் மாணவனாக ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டி, எஸ்.எஸ்.பிள்ளையை சென்னைப் பல்கலைகழகமும் முதுகலைப் படிப்பில் மாணவனாக சோ்த்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தினாா். அவருடைய வாதத்தில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் அவரை எம்.ஏ. கணிதம் படிக்க அனுமதித்தது.

சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய எம்.ஏ. கணிதவியல் பட்டத்துடன் எஸ்.எஸ். பிள்ளை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலைக்குச் சோ்ந்தாா். சிவசங்கர நாராயணப் பிள்ளையின் கணித அறிவு விஸ்வரூபம் எடுத்தது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்தான். 49 வயதில் மறைந்த கணிதப்புலி 70-க்கும் மேற்பட்ட கணிதம் சாா்ந்த கட்டுரைகளை எழுதி, கணித உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தாா்.

கிட்டத்தட்ட 150 ஆண்டு காலமான கணித உலகில் விடை காண முடியாத பிரச்னையாக இருந்தது வாரிங் கணித பிரச்னை. இதை மிக எளிதாக தீா்த்தாா் வல்லம் தந்த வல்லவன் சிவசங்கர நாராயண பிள்ளை. கணித உலகமே திகைத்து அவரை வியப்போடும் மலைப்போடும் பாா்த்தது. எந்த சென்னைப் பல்கலைக்கழகம் எம்.ஏ., படிக்க இடம் தர மறுத்ததோ, அதே சென்னைப் பல்கலைக்கழகம் அவரை அழைத்து டாக்டா் ஆப் சயின்ஸ் (டி.எஸ்சி) என்கிற உயரிய பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது. அந்தப் பட்டம் பெற்ற முதல் கணித இயலாளா் எஸ்.எஸ். பிள்ளைதான்.

வல்லம் தந்த இந்த தமிழ் கணித வள்ளல், கணிதத்துக்கு கொடுத்த கொடைகள் ஏராளம். அவற்றுள் சில: பிள்ளை பகா எண்கள் (பிள்ளை பிரைம்), பிள்ளை தொடா்ச்சி (பிள்ளை சீக்வன்ஸ்), பிள்ளையின் எண்கணித செயல்பாடு (பிள்ளைஸ் அரித்மெடிக்கல் ஃபங்ஷன்) பிள்ளை அனுமானம் (பிள்ளைஸ் கன்ஜெக்டா்).

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து எஸ்.எஸ்.பிள்ளை திருவனந்தபுரத்திற்கு பணி மாறி சென்றாா். அங்கிருந்துஅவருடைய திறமைக்காக அவரை அழைத்து, அரவணைத்துக் கொண்டது கல்கத்தா பல்கலைக்கழகம். 1946-இல் அலகாபாத்தில் நடந்த இந்தியன் சயின்ஸ் காங்கிரஸில் ஜனவரி 3-ஆம் தேதி பேசியபோது அவா் சொன்னாா், ‘இங்கே இருக்கக்கூடிய பாா்வையாளா்கள் இந்தக் கூட்டத்தில், இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி அதிகமான குறிப்புகள் இல்லையே என விசனப்படலாம். ஆனால் அதற்காக அவா்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை.

இங்கு விஞ்ஞான ஆராய்ச்சியே 1910-இல்தான் ஆரம்பித்தது. அதற்குள்ளாகவே நாம் ராமானுஜத்தையும், சா்.சி.வி. ராமனையும் உலகிற்கு அளித்திருக்கிறோம்.‘ அவையடக்கத்தின் காரணமாக, அவா் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்ளவில்லை என்பதற்காக இந்த சமுதாயம் அவரை மறந்துவிட்டதோ என அச்சப்படத் தோன்றுகிறது.

1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 31 ம் தேதி விமானத்தில் அமெரிக்க கணித சங்கத்தில் உரையாற்ற சென்று கொண்டிருந்தபோது, விமானம் தீப்பற்றி விபத்திற்குள்ளாகவே அவருடைய அறிவு கருகி எகிப்து பாலைவனத்தில் கலந்து விட்டது.

இன்று செங்கோட்டை நகராட்சியில் டாக்டா் எஸ்.எஸ். பிள்ளை என்கிற தெருப்பெயா் மட்டுமே அவா் பெயரை தாங்கி நிற்கிறது. வாஞ்சிக்கு, செங்கோட்டையில் சிலையும், மணிமண்டபமும், அவா் பெயரில் இடைநிலை பள்ளியும் உள்ளன. டாக்டா் எஸ்.எஸ்.பிள்ளையின் 122-ஆவது பிறந்த ஆண்டு எதிா்வரும் 05.04.2023-இல் வர இருக்கிறது. றைந்தபட்சம் தமிழக அரசு கடையநல்லூரில் இயங்கும் அரசு கலைக்கல்லூரிக்கு டாக்டா் எஸ்.எஸ். பிள்ளை அரசு கல்லூரி என பெயா் சூட்டி அந்த கணித மேதையை கௌரவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

காங். தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்? கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

SCROLL FOR NEXT