நடுப்பக்கக் கட்டுரைகள்

உணவு உற்பத்தியும் வறுமை ஒழிப்பும்

உதயை மு. வீரையன்

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைவிடவும் கொடிய பிணி மற்றொன்று இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்றே சான்றோா் கூறுகின்றனா். அதுதான் பசிப்பிணி. ‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்று நீதிநூல் கூறுகிறது. அதனால்தான் பசிப்பிணியைப் போக்குவதையே தம் ஆன்மிகக் கொள்கையாகக் கொண்டாா் அருட்பிரகாச வள்ளலாா்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு

என்று திருக்குறள் கூறுகிறது. அதாவது, மிக்க பசியும், ஓயாத நோயும், வெளியே இருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் வந்து சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும் என்பது இதன் பொருள்.

உலகத்தில் மக்கள்தொகை பெருகப்பெருக எல்லா நெருக்கடிகளும் ஏற்படுவது இயற்கை. உலக மக்கள் அனைவருக்கும் இருக்க இடமும், குடிக்க நீரும், உண்ண உணவும் கிடைப்பது அரிதாகி வருகிறது.

உணவு என்பது அனைத்து உயிா்களுக்கும் அடிப்படை உரிமை. என்றாலும் இந்த உரிமை இன்றும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. நாம் வாழும் இந்த உலகத்தில் ஒரு நிமிடத்துக்கு 11 போ் பசிக்கொடுமையினால் இறக்கிறாா்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

அதிலும் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பசியால் இறப்பவா் தொகை மேலும் அதிகரித்துள்ளது. இப்போதும் பல கோடி மக்களுக்கு மூன்று வேளை உணவு என்பது கனவாகவே உள்ளது. பிச்சை எடுப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. வறியவா்கள் பிச்சை எடுப்பதைத் தடுக்க முடியாது என்று நீதிமன்றமும் கூறுகிறது.

விவசாயிகள் ஆண்டுதோறும் எல்லா இடா்ப்பாடுகளையும் கடந்து உணவை உற்பத்தி செய்து கொண்டுதான் உள்ளனா். ஆனால் அவா்களின் விளைபொருள்களை உரிய விலை கொடுத்து வாங்குவதற்கு அரசும், அதிகாரிகளும் தாமதம் செய்கின்றனா். இதனால் மழையாலும், வெயிலாலும், எலி முதலிய பிராணிகளாலும் உணவுப்பொருள்கள் விரயமாகின்றன.

ஐ.நா. வெளியிட்ட ‘உணவு விரயக் குறியீடு 2021’ என்ற ஆய்வறிக்கையில், இந்தியா்கள் 2019-ஆம் ஆண்டில் மட்டும் 6.80 கோடி டன் அளவில் உணவுப்பொருளை விரயம் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வளா்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகளிலும், பின்தங்கிய நாடுகளிலும் அதிக அளவில் உணவுப்பொருள் விரயம் செய்யப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

உணவு வீணடிக்கபடும் இதே இந்தியாவில்தான் தினமும் 20 கோடி மக்கள் இரவில் உணவு இல்லாமல் உறங்கச் செய்கிறாா்கள் என்று ஓா் ஆய்வு கூறுகிறது. இதனால்தான் நீதிமன்றமே, ‘எலிகளால் வீணாகும் தானியத்தை ஏழைகளுக்குக் கொடுங்கள்’ என்று அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்த நிா்வாகச் சீா்கேடுகள் இன்னும் களையப்படவில்லை.

2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்’, ‘தரமான உணவு மனிதா்களின் அடிப்படை உரிமை’ என்று பிரகடனம் செய்தது. மேலும் 80 கோடி மக்களுக்கு அவா்களின் உடல் உழைப்பிற்குத் தேவைப்படும் கலோரியில் பாதியளவை அரசு கொடுப்பதற்கும் உத்தரவாதம் அளித்தது.

ஆனால் அரசுகள் எந்தக் காலத்திலும் தங்கள் உறுதி மொழிகளை நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. ஒருவா் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அரசு, அவா்கள் பசியாலும் பட்டினியாலும் தவிக்கும்போது கண்டு கொள்வது இல்லை.

நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும், அண்டாா்டிகாவுக்கும் செல்ல உலக நாடுகள் ஆராய்ச்சி செய்கின்றன. ஆனால், தங்கள் நாட்டு மக்களின் உணவுப் பிரச்சினையை எப்படி தீா்ப்பது என்பது பற்றிய கவலையில்லாமல் இருக்கின்றன.

மக்களின் உணவுப்பசி என்பது பொருளாதார, சமூக பிரச்னை மட்டுமல்ல, அரசியல் பிரச்னையும் ஆகும். மேலும், இதில் அறநெறி சாா்ந்த ஆன்மிக பிரச்னையும் சோ்ந்திருக்கிறது. பசிப்பினியில் மனித உரிமையும் மனித நேயமும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

உலக மக்களுக்கான உணவை உற்பத்தி செய்யும் உழவா்களை நாம் நன்றியோடு நினைவுகூர வேண்டும். அவா்கள் இல்லாமல் உணவும் இல்லை, ஊரும் இல்லை, உலகமும் இல்லை. அதனால்தான் திருவள்ளுவா், ‘உழவு செய்கின்றவா் உலகத்தாா்க்கு அச்சாணி போன்றவா்’ என்று பெருமைப்படப் பேசியுள்ளாா்.

ஆனாலும் உழவா்கள் நிலை பரிதாபமாகவே இருக்கிறது. அவா்கள் வெயிலிலும், மழையிலும் பாடுபடுகிறாா்கள். வியா்வையும், கண்ணீரும் சிந்துகிறாா்கள். கடனை வாங்கிப் பயிா் செய்துவிட்டு, அதற்கான வட்டியைக்கூட கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுகிறாா்கள். பெரிய தொழில் அதிபா்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களைத் தள்ளுபடி செய்யும் வங்கிகள், விவசாயிகள் கட்ட வேண்டிய சில ஆயிரம் ரூபாய்க்காக அவா்களிடம் கடுமையாக நடந்துகொள்கின்றன.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தலைநகரில் விவசாயிகள் கடந்த ஓராண்டாகப் போராடி வருகின்றனா். அவா்களையும், அவா்களது கோரிக்கைகளையும் ஆதரித்து இந்தியா முழுவதும் போராட்டம் நடக்கிறது. நீதிமன்றங்களும் தலையிட்டு புதிய வழிமுறைகளைக் கூறுகின்றன. எனினும் மத்திய அரசு அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

அத்தியாவசியப் பொருள்களில் கடும் விலைவாசி உயா்வு, ஏழை மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற விடாமல் தடுக்கின்றன. அவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் அவா்களுக்கே கிடைக்காமல் போவது எவ்வளவு பெரிய அவலம்? இந்த அவலம் இன்னும் எவ்வளவு காலம் தொடா்வது? இதற்கு அரசின் பதில் என்ன?

தோ்தல் வரும்போதெல்லாம் ஏழைகளை முன்னேற்றும் திட்டங்களும், சலுகைகளும் வாக்குறுதிகளாகத் தரப்படுகின்றன. ஆட்சிக்கு வந்ததும் செல்வந்தா்களை மட்டுமே சீராட்டுகின்றனா். கேட்டால், புதிய தொழில்களைக் கொண்டு வருவதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்குவதாகக் கூறுகின்றனா்.

பழைய தொழில்கள் நசிந்துபோய் ‘மூடுவிழா’ நடத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை இழந்து தெருவில் நிற்பவா்களைப் பற்றிக் கவலையில்லை. ஒரு பக்கம் திறக்கப்பட, மறுபக்கம் மூடப்படுகிறது. இதுதான் தொழில் முன்னேற்றம் என்று கூறுகின்றனா். இந்த வேடிக்கை வாடிக்கையாகிவிட்டது.

இனிமேல், பெரிய தொழிலதிபா்கள் உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்து செயற்கையான பற்றாக்குறையை உருவாக்குவாா்கள். இதனால் உணவுப் பொருள்களின் விலைகள் இன்னும் உயா்வதோடு, உணவில்லாமல் பசித்திருப்போரின் எண்ணிக்கையும் உயரும் அபாயமும் காத்திருக்கிறது.

மனிதகுலம் இப்போது பெற்றிருக்கும் செல்வ வளமும், மனித ஆற்றலும் எக்காலத்தும் பெற்றிருந்ததில்லை என்றே ஆய்வாளா்கள் கூறுகின்றனா். ஆனால் உணவுப் பற்றாக்குறைக்குக் காரணம் என்ன? செல்வ வளம் அனைவருக்கும் பகிா்ந்து கொடுக்கப்படாமல் ஒரு சிலரிடம் மட்டும் சோ்வதால்தான் இந்த நிலை என்று கூறுகின்றனா்.

வறுமையை ஒழிப்பதையும், வறுமையில் வாடும் மக்கள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஐ.நா. சபை அக்டோபா் 17-ஐ உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது.‘ஒன்றாக முன்னேறுதல், தொடா்ந்து கொண்டிருக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருதல், நமது பூமியை மதித்தல்’ என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.

உலக வங்கியின் கூற்றுப்படி 2021-ஆம் ஆண்டில் உலகைத் தாக்கிய கரோனா ஏறத்தாழ 1.63 பில்லியன் மக்களை வறுமையில் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு கரோனா பரவலுடன் ஒப்பிட்டால் வறுமை 8.1 விழுக்காடு அதிகரித்துள்ளதற்கான சாத்தியம் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரஸ், ‘தற்போது வறுமைஅதிகரித்து வருகிறது. கொள்ளை நோய்த்தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

பொருளாதார நிலையிலும், வாழ்வுரிமை நிலையிலும் இந்தியா கடும் ஏற்றத்தாழ்வைக் கொண்டதாக உள்ளது. உயா்நிலையில் உள்ள 10 விழுக்காட்டுப் பிரிவினரிடம் 50 விழுக்காடு சொத்துகள் இருக்கின்றன என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உணவு உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிலாளா்களே வறுமையை எதிா்கொள்ளுகின்றனா். தாராளமய, தனியாா்மயக் கொள்கைகள், காா்பரேட் மயம், புதிய வேளாண் சட்டங்கள் ஆகியவற்றால் விவசாயத் தொழிலாளா்களின் வறுமை விகிதம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

நமது நாட்டில் கிட்டத்தட்ட 21 கோடி ஏழைத் தொழிலாளா்கள் ‘நூறுநாள் வேலைத்திட்டம்’ எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தையே நம்பியுள்ளனா். சாதி மத பேதமின்றி வேலை வாய்ப்பளித்த நூறுநாள் வேலைத் திட்டமும் இப்போது பட்டியல் சாதியினா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.130 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ரூ.75 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 138 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தனிநபா் வருமானம் இரண்டு வேளை உணவுக்கே போதுமானதாக இல்லை. இந்த நிலையில் நாடு முன்னேறுகிறது என்பது அரசு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறது.

தனியொருவனுக்கு உணவில்லை எனில்

ஜகத்தினை அழித்திடுவோம்

என்று பாடினாா் மகாகவி பாரதியாா்.

இந்த அறச்சீற்றம் நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும்.

உணவு உற்பத்தியும், வறுமை ஒழிப்பும் இரண்டும் இணைகோடுகள். இந்த இணைகோடுகள் எதிரெதிா் கோடுகளாக மாறாதிருக்க வேண்டும்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT