நடுப்பக்கக் கட்டுரைகள்

நூறுநாள் வேலைத் திட்டம்: ஒரு பார்வை!

க. பழனித்துரை

 ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்' ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்ற கருத்து அண்மைக்காலமாக நிலவுகிறது. அதன்மேல் விவாதங்களும் வைக்கப்படுகின்றன. ஏழைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட திட்டங்களிலேயே முதன்மையான திட்டம் என்று இதனை உலக வங்கி பாராட்டியதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
 இந்தியா நடுத்தர வர்க்க நாடு அல்ல; ஏழைகள் அதிகம் வாழும் நாடு. ஆகையால்தான் நம் பிரதமர் இந்தப் பேரிடர் காலத்தில் 80 கோடி மக்களுக்கு பொது விநியோக முறையில் உணவு தானியங்கள் வழங்கி உணவுப் பாதுகாப்பு வழங்கியுள்ளோம் என்று ஐ.நா. சபையில் கூறினார்.
 இன்று இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் நமக்கு புரிந்திருந்தால் இப்படிப்பட்ட விவாதம் வந்திருக்காது; இந்தத் திட்டத்தில் பெரிய அளவில் ஊழலும் நடந்திருக்காது. இந்தத் திட்டம் வந்ததிலிருந்து, இந்தத் திட்டத்திற்கு எதிரான கருத்தை தொடர்ந்து பரப்பி வந்தது ஒரு கூட்டம். அது மெல்ல மெல்ல அரசியல் தளத்தில் பரவி, இந்தத் திட்டம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறியது. இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு புதிய அரசு வந்தவுடன் மூடுவிழா காணப்போகும் திட்டமாக இது சித்திரிக்கப்பட்டது.
 ஆனால் நடந்தது வேறு. அந்தத் திட்டம் சீரமைக்கப்பட்டதே தவிர, நிறுத்தப்படவில்லை. உண்மை என்னவென்றால், இந்தத் திட்டம் பற்றி பொதுவெளியில் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆராய்ச்சி அறிக்கைகள் அமைந்துவிட்டன. அவை, இந்தத் திட்டம் விவசாயத்தில், இதில் பணி செய்த பணியாளர்களின் வாழ்வாதாரத்தில், குடும்பத்தில் முடிவெடுக்கும் உரிமையில், பெண்கள் மேம்பாட்டில், பொதுச்சொத்து உருவாக்குவதில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை தரவுகளின் அடிப்படையில் வெளிக் கொணர்ந்து விட்டன.
 இன்றைய மத்திய அரசாங்கம் இத்திட்டத்திற்காக ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் 45,000 கோடியிலிருந்து 70,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து விட்டு தேவையின் அடிப்படையில் மேலும் 40,000 கோடி ரூபாயை 2020-ஆம் ஆண்டு மாநிலங்களுக்குக் கொடுத்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, இந்தப் பேரிடர் காலத்தில் இத்திட்டத்தின் தேவையைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் பல ஆய்வு இதழ்களில் வந்ததை பலர் வசதியாக மறந்து விட்டனர்.
 இந்தப் பேரிடர் காலத்தில் விளிம்புநிலை மக்களுக்கும், பெண்களுக்கும், தலித்துக்களுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியது இந்தத் திட்டம்தான் என்பதை ஆதாரத்துடன் "டௌன் டு எர்த்' என்ற ஆங்கில ஆய்வு இதழ் கட்டுரையாக வெளியிட்டது. இத்திட்டத்தின் மூலம் எவ்வளவு பொது சொத்துகள் உருவாகியுள்ளன என்பதையும் அவை எவ்வாறு விவசாயத்துக்கு உதவுகின்றன என்பதையும் கள ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு
 வந்துள்ளது.
 அதேபோல் தமிழ்நாட்டின் காந்திகிராம பல்கலைக்கழகமும் குஜராத்திலுள்ள "இர்மா' ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து பன்னிரண்டு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்தன. ஆய்வு முடிவில், பெண்களை அதிகாரப்படுத்துவதில், குடும்பத்தில் பெண்கள் முடிவெடுப்பதில், கிராமசபையில் பெண்கள் பங்கேற்பதில் இந்தத் திட்டத்தால் ஏற்பட்ட விளைவுகளை அறிக்கை மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தன.
 அமெரிக்காவிலுள்ள பிரெளன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன்ரோ பாஸ்டர், இந்தத் திட்டத்தால் கிராமப்புற உள்ளாட்சியின் ஆளுகையில் நடந்த மாற்றங்களை தன் ஆய்வின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார். இத்திட்டத்தால் வரவேற்கத்தக்க பல விளைவுகள் விளிம்புநிலை மக்களின் குடும்பங்களில் பெண்கள் மூலம் நடந்துள்ளன. இந்தத் திட்டம் வட மாநில மக்களுக்குத்தான் அதிக அளவில் பலனளித்திருக்க வேண்டும். அங்குதான் இந்தத் திட்டம் அதிகம் தேவைப்பட்டது.
 ஆனால் இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களான கேரளமும் தமிழகமும்தான். நூறுநாள் வேலைத் திட்டம் என்பது வேலை தருவதும் பணம் தருவதும், பொதுச்சொத்தை உருவாக்குவதும் மட்டுமல்ல. இவற்றைத் தாண்டி பல உயரிய நோக்கங்கள் இந்தத் திட்டத்திற்கு இருக்கின்றன. அவற்றை நாம் புரிந்துகொண்டு மக்களிடமும் அந்தப் புரிதலை ஏற்படுத்திவிட்டால் உலகையே வியக்க வைக்கும் உன்னதத் திட்டமாக இந்தத் திட்டத்தை மாற்றிடலாம்.
 இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு என்பதை சட்டத்தின் மூலம் உரிமையாக்கித் தந்துள்ளது. அதை நாமும் புரிந்துகொண்டு, மக்களும் புரிந்து கொண்டால் இதன் மகத்துவம் நமக்குப் புரியும். நம் உரிமையை நாமே பாழ்படுத்த மாட்டோம்.
 அடுத்து இத்திட்டத்தின் அடுத்த நோக்கம், வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது. இந்தப் பணியின் மூலம் வாழ்வாதாரப் பாதுகாப்பு விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதிகாரப்பரவலுக்கு வலு சேர்க்க வேண்டும். பஞ்சாயத்து அமைப்புகள் இதன் மூலம் வலுப்பெற வேண்டும். இதில் மக்கள் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும். திட்டமிடும் பணி மக்கள் பங்கேற்போடு நடத்திட வேண்டும். இந்தப் பணியாளர்கள் மூலம் கிராமசபை நடவடிக்கைகள் மேம்பட வேண்டும்.
 அடுத்து, இத்திட்டத்தின் மூலம் தரமான பொது சொத்துகள் உருவாக்கப்பட்டு விவசாயத்திற்கு வலு சேர்க்க வேண்டும். நீர்நிலைகள் ஆழப்படுத்தப்பட வேண்டும், வரத்துக் கால்வாய், போக்குக் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும். மண்ணை வளப்படுத்துவது, நீர் ஆதாரத்தை பாதுகாப்பது போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தோட்டக்கலை அபிவிருத்தி, நில மேம்பாட்டுச் செயல்பாடுகளை நடத்திட வேண்டும்.
 நூறுநாள் வேலைத் திட்டத்தில் செலவழிக்கப்படும் மொத்த தொகையும் யாருக்கு நேரிடையாகச் செல்ல வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு, குறிப்பாக தலித்துக்கள், பெண்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்கள் கைகளுக்குச் செல்ல வேண்டும். அப்படிக் கிடைக்கின்றபோது அந்தப் பணம் அவர்களுக்குப் பல வழிகளில் பாதுகாப்பை வழங்கிடும்.
 இவ்வளவு உன்னதமான அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நூறுநாள் வேலைத் திட்டம், இன்று வேலையே செய்யாமல் மரத்தடியில் உட்கார்ந்து விட்டு பணம் வாங்கும் திட்டமாக சித்திரிக்கப்பட்டு பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சோக நிகழ்வு. இந்தத் திட்டத்தில் ஊழல் இல்லாமல் இல்லை. இதற்கு யார் காரணம்? கிராமசபையில் பொதுமக்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை? இந்தத் திட்டத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படும் பணம் மக்கள் வரிப்பணம்தானே? அதை நம் மக்கள் ஏன் கண்காணிக்கத் தவறுகின்றார்கள்?
 நம் பஞ்சாயத்து தலைவர்களும் அரசு அதிகாரிகளும் இதை ஏன் முழுப்புரிதலுடன் செயல்படுத்தவில்லை என்பதுதான் அடிப்படையான கேள்வி. இதில் பல விதமான ஊழல்கள் இருக்கின்றன. அவை களையப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஒரு நிலையில் தமிழகம் இந்தத் திட்டத்தின் மூலம் பொது சொத்துகளை உருவாக்குவதில் சிரத்தையற்று இருந்தது. தற்போது அது மாறி வருகிறது.
 மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் தமிழகத்தில் ஓரளவு சிறப்பாகச் செயல்படுவதாகத்தான் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் தவறுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த திட்டச் செயல்பாட்டின்மீதும் குறை கூறுவது சரியல்ல. அப்படிப்பட்ட கருத்துகளை ஆய்வு முடிவுக் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.
 கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ 30,143 கோடி ரூபாய் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழக கிராமப்புறங்களில் செலவு செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு கிராமப் பஞ்சாயத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் மட்டும் 2.4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவ்வளவும் யாருக்குச் சென்றிருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஏழைகளுக்கும், தலித்துக்களுக்கும், பெண்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் இந்தத் திட்டத்தின் பயன் சென்றிருக்கிறது.
 நம் பஞ்சாயத்தில் இத்தனை கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்றால் இந்தத் திட்டத்தால் உருவாக்கப்பட்ட பொது சொத்து எங்கே என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.
 நாம் குடிமக்களாக வாழாமல் பொதுமக்களாக வாழ்ந்து குறை சொல்லிப் பழகிவிட்டோம். திட்டத்தில் ஏற்படக்கூடிய தவற்றை தட்டிக் கேட்க பொறுப்புள்ள குடிமக்களாக மாறி நாம் கேள்விகளை கிராமசபையிலே கேட்டிருக்க வேண்டும். தற்போது இத்திட்டத்திலுள்ள குறைகளைக் களைவதற்கான நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 நூறுநாள் வேலைத் திட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவை களையப்பட்டு திட்டம் சிறப்பாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, ஏழை எளிய மக்கள், குறிப்பாக விளிம்புநிலை மக்கள் பயன்பெறும் ஒரு திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் கருத்துக் கூறுவது அந்த மக்களுக்கு நாம் இழைக்கும் துரோகம் என்பதை உணர வேண்டும்.
 நூறுநாள் வேலைத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் குறைந்தபட்ச கூலி என்பது பல மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் சுதந்திர இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி என்பதும் கிராமங்களில் இத்திட்டத்தின் மூலமே கிடைத்தது.
 கேரள மாநிலத்தைப்போல இந்தத் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் எடுத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் இருக்கும் தவறுகளைத் திருத்த முனைய வேண்டும். இந்தத் திட்டம் பற்றி சரியான முறையில் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
 கிராமசபை உறுப்பினர்கள் திட்ட செயல்பாடுகள் பற்றி கிராமசபையில் கேள்வி கேட்க வேண்டும். பஞ்சாயத்தைத் திட்டமிட வைக்க வேண்டும். அதுதான் நாம் ஏழை எளிய மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும், பெண்களுக்கும் செய்யும் நல்ல பணியாகும். இத்திட்டத்தை கைவிட வைக்க முனைவது அடித்தட்டு மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT