நடுப்பக்கக் கட்டுரைகள்

புலன் விசாரணை: சட்ட விதியும் நடைமுறையும்!

பெ. கண்ணப்பன் ஐபிஎஸ்


ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குற்ற வழக்குகளில் துப்புத்துலக்கி குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்ற நிலையில், ஒரு சில வழக்குகளின் புலன் விசாரணை தடம் புரண்டு விடுவதால் காவல்துறைக்குப் பெரும் தலைகுனிவு ஏற்பட்டு விடுகிறது. 

குற்ற வழக்குகள் மீதான புலன் விசாரணையின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, குற்ற விசாரணை முறை சட்டமும், குற்றச்செயலை நிரூபிக்கத் தேவையான சாட்சியங்களைத் திரட்டுவது குறித்து இந்திய சாட்சிய சட்டமும் வரையறை செய்துள்ளன. புலன் விசாரணையின்போது இந்த சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத சில வழக்குகள் பொதுவெளியில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்கின்றன.

ஒரு குற்ற வழக்கில் துப்புத்துலக்க மேற்கொள்ளும் புலன் விசாரணையின்போது குற்றச் செயல்கள் சிலவற்றை புலன் விசாரணை அதிகாரி செய்வதும், குற்றவாளியைக் கண்டறியும் முயற்சியில் செய்யப்படும் குற்றச் செயல்களைத் தவறாகக் கருதாத மனநிலை சமுதாயத்தில் நிலவுவதும் தடம்புரளும் புலன் விசாரணைக்கு முக்கிய காரணங்களாக அமைந்து விடுகின்றன.

ஒரு குற்ற வழக்கில் சந்தேகப்படும் எந்த ஒரு நபரையும் விசாரணை செய்வதற்கான அதிகாரத்தை குற்ற விசாரணை முறை சட்டம் புலன் விசாரணை அதிகாரிக்கு வழங்கியுள்ளது. அச்சட்டத்தின்படி சந்தேகப்படும் நபருக்கு அழைப்பாணை அனுப்பி, அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்யலாம். அவர் குற்றம் செய்தவர் என்பதற்கான ஆதாரங்கள் விசாரணையில் கிடைத்தால் அவரை கைது செய்து புலன் விசாரணையைத் தொடரலாம்.

பெரும்பாலான குற்ற வழக்குகள் மீதான புலன் விசாரணையில், இந்த சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. காவல்துறையின் இத்தகைய செயல் எதிர்மறையான விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுகிறது.

குற்றச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு சட்ட ரீதியான அழைப்பாணை வழங்காமல் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, சில நாட்கள் தங்க வைத்து விசாரணை மேற்கொள்வதும், சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாக இருந்தால் அவரின் நெருங்கிய உறவினர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வருவதும் புலன் விசாரணையின்போது நடைபெறுகிறது.

புலன் விசாரணை என்ற பெயரில் செய்யப்படும் இத்தகைய செயல்கள் "சட்ட விரோத காவல்' என்ற  குற்றச் செயல் என்பதை புலன் விசாரணை அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லை.

சந்தேகிக்கப்படும் நபர், தான் செய்த குற்றத்தை மறைப்பதாக புலன் விசாரணை அதிகாரி கருதினால், அந்த நபரிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டுவர தேவையான சாட்சியங்களைத் திரட்ட வேண்டும்; உண்மை கண்டறியும் சோதனையில் அவரை ஈடுபடுத்தவும் வேண்டும்.  ஆனால் நடைமுறையில் நிகழ்வது என்ன?

சந்தேகிக்கப்படும் நபரை அடித்து மிரட்டினால் அவர் உண்மையைக் கூறுவார் என்ற கருத்து புலன் விசாரணை அதிகாரிகள் பலரிடம் நிலவுகிறது. ஒரு குற்றச்செயலின் பின்னணியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சந்தேகிக்கப்படும் நபரை அடித்து மிரட்டுவது நம் நாட்டில் நிகழ்த்தப்படும் புலன் விசாரணையில் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. 

செய்த குற்றத்தை மறைக்க முயற்சி செய்பவர்களில் சிலர், விசாரணையின்போது தங்களுக்குக் கொடுக்கப்படும் துன்புறுத்தலுக்குப் பயந்து, உண்மையை வெளிப்படுத்துவதும் உண்டு. சில நேரங்களில் குற்றம் செய்யாதவர் கூட துன்புறுத்தலுக்குப் பயந்து தான் செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக் கொள்வதும் உண்டு. 

விசாரணை என்ற பெயரில் கொடுக்கப்படும் துன்புறுத்தலைத் தாங்க முடியாத சிலர் காவல் நிலையத்திலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் உண்டு. 
இவை அனைத்தும் இந்திய தண்டனை சட்டத்தின்படி சிறை தண்டனைக்குரிய குற்றச் செயல்களாக இருந்தாலும் புலன் விசாரணை என்ற பெயருக்குள் அவை அடங்கி விடுகின்றன.


குற்ற வழக்குகள் சிலவற்றில் புகார் கொடுத்தவரே புலன் விசாரணையின் போக்கை தவறான திசையை நோக்கித் திருப்பி விடுவதும் உண்டு. "சந்தேக குற்றவாளி என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபரிடம் தீவிரமாக விசாரணை செய்யவில்லை' என்ற குற்றச்சாட்டு சில நேரங்களில் புலன் விசாரணை அதிகாரி மீது சுமத்தப்படுவதும் உண்டு. 

சந்தேகிக்கப்படும் நபரைத் துன்புறுத்தி புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற வாதியின் எதிர்பார்ப்பு அசம்பாவிதங்களுக்கு வழி வகுத்து காவல்துறையை தலைகுனியச் செய்த சம்பவங்களும் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளன. 

குற்றச் சம்பவம் குறித்த புகார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டால் தாமதமின்றி உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று குற்ற விசாரணை முறை சட்டம் (பிரிவு 154) கூறுகிறது. ஆனால்,  இச்சட்ட விதி எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படுவது இல்லை.

அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் வழக்கு பதிவு செய்தால், குற்ற வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து, அது சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற விமர்சனத்திற்கு வழி வகுக்கும் என்பதாலும், வேலைப்பளு அதிகரிக்கும் என்பதாலும் வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்க்கும் மனநிலை காவல்துறையினரிடம் நிலவுகிறது.

சில குற்ற நிகழ்வுகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் தவிர்ப்பதற்கு வாதியும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றார். திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சில குற்ற நிகழ்வுகள் தொடர்பாக கொடுக்கப்படும் புகார்களில் பறிபோன பொருட்களின் மதிப்பை மிகைப்படுத்தி புகார் கொடுக்கப்படுவதும் உண்டு. இதன் காரணமாக உண்மையான குற்ற நிகழ்வுகள் மீது வழக்குகள் பதிவு செய்யாமல் தவிர்க்கப்படும் நிலை நிலவுகிறது.

கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சில குற்ற நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை காவல்துறையினர் குறைத்து மதிப்பீடு செய்து வழக்குகள் பதிவு செய்வதைத் தவிர்த்து விடுவதும் உண்டு. அதன் விளைவாக கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்த சம்பவங்களும் உண்டு. 

குற்ற நிகழ்வை நேரில் பார்த்த சாட்சிகளைக் கண்டறிந்து அவர்களின் சாட்சியத்தைப் பெறுவதே புலன் விசாரணையின் வெற்றி ஆகும். குற்ற நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் பல சமயங்களில் சாட்சியம் சொல்ல முன் வருவதில்லை. அதற்குக் காரணம், குற்றவாளிகளால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நிகழக் கூடும் என்ற பயமும், அத்தகைய ஆபத்து நிகழாமல் காவல்துறை நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை இல்லாமையுமே ஆகும். 
தடய அறிவியல் நுட்பம், விரல் ரேகை, கண்காணிப்பு கேமரா, கைப்பேசி அழைப்புப் பட்டியல் போன்றவை குற்ற வழக்குகளில் துப்புத்துலக்க புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருந்தாலும், திட்டமிட்டு நிகழ்த்தப்படும் குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பலரிடம் சட்ட நுணுக்கமும், மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்த தெளிவான பார்வையும் இருப்பது துப்பு துலக்குவதற்குத் தடையாக இருந்து வருகின்றன.

அதிகரித்துவரும் குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களும் புலன் விசாரணைக்குத் துணைபுரியும் வகையில் சில சட்ட திருத்தங்களும் கொண்டுவரப்பட்டு இருந்தாலும், புலன் விசாரணை அதிகாரிகள் பல சவால்களை எதிர்கொள்ளும் நிலையில்தான் இன்றும் இருந்து வருகின்றனர்.

ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு என பல்வேறு பணிகளை கவனிப்பதில் காவல்துறையினர் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதால், கொடுங்குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் அவர்கள் அதிக கவனத்தைச் செலுத்துவதில்லை என்ற முணுமுணுப்பு பொதுமக்களிடம் காணப்படுகிறது.

காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஒருவர், ஆண்டு ஒன்றுக்கு கொடுங்குற்ற வழக்குகள் உட்பட சுமார் 50  வழக்குகளில் புலன் விசாரணை மேற்கொள்கிறார். குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி மூன்று மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால்  ஓராண்டு கடந்த பின்னரும் பெரும்பாலான வழக்குகள் புலன் விசாரணையில் இருப்பதும், சட்டம் - ஒழுங்கு பணிச்சுமையே அதற்குக்  காரணம் என்பதும் கள எதார்த்தமாகும். இதற்கு என்னதான் தீர்வு?

காவல்துறையில் "புலனாய்வு பிரிவு' ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை மத்திய மாநில அரசுகளுக்கு 2006-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதே அறிவுரையை "தேசிய காவல் ஆணைய'மும் வழங்கியுள்ளது. சில மாநில காவல்துறையில் புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. தமிழ்நாடு காவல்துறையும் புலனாய்வுப் பிரிவை உருவாக்கி, குற்றத் தடுப்புப் பணியில் திறம்பட செயல்படும் நிலையை நோக்கி நகர வேண்டும். 

குற்ற வழக்குகளில் விரைவாக துப்புத்துலக்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருக்கிறது. ஆனால், புலன் விசாரணையின்போது ஏற்படும் செலவுகளை புலன் விசாரணை அதிகாரி எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.

"புலன் விசாரணை நிதி' என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்ட காவல்துறைக்கும் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து வழக்கு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் பல வழக்குகளுக்கு புலன் விசாரணை நிதியில் இருந்து பணம் வழங்கப்படுவது இல்லை. 

காவல்துறையின் பொறுப்பில் இருக்கும் குற்றவாளி ஒருவரின் ஒரு வேளை உணவு செலவுக்காக ரூ.35-உம், ஒரு நாள் உணவு செலவுக்காக ரூ.100-உம் வழங்கப்படுகிறது.  இந்தப் பணத்தைக் கொண்டு குற்றவாளிக்கு உணவு அளிக்க முடியாது என்பதே எதார்த்தம்.

புலன் விசாரணையின்போது ஏற்படும் செலவினங்களை அந்தந்த புலன் விசாரணை அதிகாரி ஏதோ ஒரு வகையில் ஈடுகட்டிக் கொள்ளும் நிலைதான் தற்பொழுது இருக்கிறது. புலன் விசாரணையில் நேர்மையற்ற தன்மை நிலவுவதற்கு இத்தகைய சூழலும் ஒரு காரணமாகும்.

இந்தியாவின் "முதன்மை புலனாய்வு அமைப்பு' என்று அழைக்கப்படும் சி.பி.ஐ. புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வழக்குகளில், புலன் விசாரணையின்போது ஏற்படும் செலவினங்களுக்கு சி.பி.ஐ. நிதியில் இருந்தே தொகை வழங்கப்படுகிறது. இம்மாதிரியான நடைமுறையை மாநில காவல்துறையிலும் கொண்டு வருவது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

கட்டுரையாளர்: காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT