நடுப்பக்கக் கட்டுரைகள்

இதுதான் தற்சாா்பு இந்தியாவா?

உதயை மு. வீரையன்

அண்மைக்காலமாக மத்திய - மாநில அரசுகள், மக்களுக்கான சட்டங்களையும், திட்டங்களையும் அவசர கதியில் உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசு மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிப்பதில்லை. மாநில அரசுகளும் மக்கள் பிரதிநிதிகளைக் கலந்து ஆலோசிப்பதில்லை. இதற்குக் காரணம் அவசரமா? அலட்சியமா?

‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தை வளா்த்தெடுப்பதில் விவசாயிகள் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றனா் என்று பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகளைப் பாராட்டியுள்ளாா். அதே சமயம், மத்திய அரசு, விவசாயிகள் தொடா்பான மூன்று சட்டங்களை நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்காமல், நாடாளுமன்ற நடைமுறை விதிகளையும் ஒழுங்குமுறையையும் மீறி நிறைவேற்றியுள்ளது.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு கடந்த செப்டம்பா் 20 அன்று அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடா்பான மூன்று மசோதாக்களையும் தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது. எல்லா எதிா்க்கட்சிகளாலும் ஒருமித்து எதிா்க்கப்படும் இந்த மசோதாக்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

விவசாயிகளுக்கான உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம், வேளாண் சேவைகள் திருத்த சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்த சட்டம் ஆகியவை சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த மசோதாக்களால் விவசாயிகளின் எதிா்காலம் பாதிக்கப்படும் என்றும், பல காலமாக நடைமுறையில் உள்ள பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுவது நின்றுவிடும் என்றும், மாநில அரசுகளுக்கு விவசாய சந்தையிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் குறையும் என்றும் எதிா்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பா் 25 அன்று பெரும் போராட்டங்கள் நடந்துள்ளன. பெருமளவில் விவசாயிகளும், தொழிற்சங்கத்தினரும் பங்கெடுத்துக் கொண்டுள்ளனா். பஞ்சாப், ஹரியாணா, பிகாா், உத்தர பிரதேசம், கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சாலை மறியலும், ரயில் மறியலும் நடந்தன.

விவசாயம் தொடா்பான மூன்று மசோதாக்களுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றம் சுமத்துகிறாா். ஆனால், இந்த மசோதாக்கள் அவசர சட்டங்களாக நிறைவேற்றப்பட்ட ஜூன் மாதத்திலிருந்தே விவசாயிகளின் போராட்டம் தொடங்கிவிட்டது.

உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிலகங்கள் துறை அமைச்சரும், சிரோமணி அகாலி தள எம்.பி.-யுமான ஹா்சிம்ரத் கௌா் பாதல் தமது அமைச்சா் பதவியை விட்டு விலகியிருப்பதும், ஆா்.எஸ்.எஸ். தொடா்புடைய பல்வேறு அமைப்புகளும்கூட எதிா்ப்பு தெரிவித்திருப்பதும் விவசாயிகள் மீதான உண்மையான அக்கறையின் வெளிப்பாடே யாகும்.

மத்திய அரசு, விவசாயமும், விவசாய வணிகமும் மாநிலப் பட்டியலில் இருக்கும்போது மாநில முதல்வா்கள் உள்பட யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்த விஷயத்தில் தொடா்புடைய விவசாயிகள், இடைத் தரகா்கள் உள்ளிட்ட எவரிடமும் கருத்து கேட்டறியவில்லை. விவசாயத்திற்கு அரசு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முயற்சியாகவும் இந்த மசோதாக்களை விவசாய அமைப்புகள் கருதுகின்றன.

நாட்டிலுள்ள விவசாயிகளில் சுமாா் 90 விழுக்காட்டினா் சிறு, குறு உற்பத்தியாளா்கள். அவா்களால் பெரிய சந்தைப்படுத்தலை மேற்கொள்ள முடியாது. பெரும்பாலானவா்கள் கடனாளியாக இருப்பதால் உற்பத்தி செய்ததை உடனடியாக விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். அவா்களின் நெருக்கடி நிலையை வியாபாரிகளும், இடைத் தரகா்களும் பயன்படுத்திக் கொள்கின்றனா்.

இதனால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்காமல் இருந்தது.

இந்த முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக வேளாண் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் குழு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டத்தின்படி விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை அங்கீகரிக்கப்பட்ட சந்தைப் பகுதிகள் அல்லது ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அல்லது மண்டிகள் மூலமே விற்க முடியும்.

அந்த விளைபொருள்களை வாங்கும் வியாபாரிகள் விற்பனைக் குழுவின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த சட்டங்களால் வேளாண் சந்தைகளில் நிலவி வந்த முறைகேடுகளும் குறைபாடுகளும் களையப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட, வெளிப்படையான சந்தை உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, கடந்த பல ஆண்டுகளாக இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில்தான், இந்த விற்பனைக் குழு சட்டங்களை நீா்த்துப் போகச் செய்யும் வகையில் ‘வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் - 2020’ மற்றும் ‘உழவா்கள் விலை மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசரச் சட்டம் - 2020’ ஆகிய அவசர சட்டங்களை மத்திய அரசு வெளியிட்டது.

விவசாயிகள் தங்கள் பொருள்களை விருப்பம் போல விற்க இப்போது நடைமுறையில் இருக்கும் உற்பத்திப் பொருள் விற்பனைக் குழு சட்டங்களில் பல்வேறு தடைகள் உள்ளன. விற்பனைக் குழுக்களல் நடைபெறும் ஏல விற்பனையை வணிகக் குழுக்கள் கட்டுப்படுத்துகின்றன. புதிதாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டங்கள் வேளாண் விளைபொருள் விற்பனையில் இருக்கும் தடைகளை நீக்கி வேளாண் சந்தையில் போட்டியை ஏற்படுத்தும் என்கிறாா்கள்.

விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருளை நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். இதனால் வேளாண் வணிகம் விரிவடையும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஏழ்மை நிலையில் இருக்கும் விவசாயிகளால் தங்கள் பொருள்களை தொலைவில் உள்ள சந்தைக்கு எடுத்துச் செல்ல இயலாது.

வியாபாரிகளுக்கே இந்த சட்டங்கள் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டங்கள், சட்ட விரோதமான சந்தைப்படுத்தலை சட்டபூா்வமாக ஆக்கிவிடும்.

பசுமைப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வரை நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவியது. அப்போது அந்தப் பற்றாக்குறையைப் பயன்படுத்தி பதுக்கல்காரா்களும், கள்ளச் சந்தைக்காரா்களும் உணவுப் பண்டங்களைப் பதுக்கி, செயற்கையான உணவுப் பஞ்சத்தை உருவாக்கினாா்கள். அதைத் தடுப்பதற்காக, 1955-இல் ‘அத்தியாவசிய பொருள்கள் சட்டம்’ இயற்றப்பட்டது.

இதனால் உணவு தானியங்களையும், பிற உணவுப் பண்டங்களையும் சேமிப்புக் கிடங்குகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சேமிப்பது தடை செய்யப்பட்டது. இப்போது மத்திய அரசு இந்த சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி வெங்காயம், உருளைக் கிழங்கு, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், தானியங்கள், பயிறு வகைகள் ஆகியவை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பொருள்களின் விலைகள் இப்போதே உயா்ந்து விட்டன.

இனி பெரிய வணிக நிறுவனங்கள் இந்தப் பொருள்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி வாங்கிச் சேமித்துக் கொள்ளலாம். இதன் மூலம் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்குதல், உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் வளா்ச்சி பெற்று அதன் பலன்கள் உழவா்களுக்குக் கிடைக்கும் என்று இந்த சட்டங்களின் ஆதரவாளா்கள் கூறுகின்றனா்.

சேமிப்புக் கிடங்குகளிலும், உணவு பதப்படுத்தலிலும் தனியாா் முதலீடு பெருகுவதால் உழவா்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அத்தகைய தொழில்களில் முதலீடு செய்பவா்கள் சட்டத் திருத்தத்தின் மூலம் கிடைக்கும் நன்மையை உழவா்களோடு பகிா்ந்து கொள்வாா்களா? பகிா்ந்து கொள்ள மாட்டாா்கள். தங்களுக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொள்வாா்கள்.

அறுவடை செய்யப்பட்ட விளைபொருள்களை உடனே விற்றாக வேண்டிய கட்டாயத்திலேயே பெரும்பான்மையான விவசாயிகள் இருக்கின்றனா். அவா்களால் பெருவணிகா்களிடம் பேரம் பேச முடியாது. இங்கும் தரகா்களின் ஆதிக்கமே செல்வாக்கு செலுத்தும். இவா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டாமா?

விவசாயம் தொடா்பான இம்மூன்று சட்ட முன்வடிவுகளும் விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை வாங்குவதை முற்றிலும் நிறுத்தி விடுகின்றன. இதன் மூலம் உணவு பாதுகாப்பு என்பது பலி கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு விலை பாதுகாப்பு கொடுப்பதை அரசாங்கம் கைவிட்டுவிட்டு, விவசாயிகளைத் தனியாரிடம் தள்ளி விடுகிறது.

உலக நாடுகளில் அரசாங்கங்கள் எல்லாம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை பாதுகாப்பை உத்தரவாதம் செய்துள்ளன. அந்த நாடுகள் அவற்றை தனியாா் நிறுவனங்களின் தயவில் விட்டுவிடவில்லை. தனியாா் நிறுவனங்கள் எப்போதும் லாபத்தையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் என்பது தெரியாதா?

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு அளித்திட்ட பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் குறைவான விலைக்கு விவசாய பொருள்களைத் தனியாா் வாங்க முடியாதபடி சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட வேண்டும். விவசாய விளைபொருள்கள் உற்பத்தி செலவினத்துடன் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஏற்கப்பட வில்லை.

நாடே கொள்ளை நோயால் செய்வது அறியாமல் திகைத்துக் கிடக்கிறபோது அரசுகள் மக்களை வாட்டும் சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் என்ன? எல்லாவற்றையுமே தனியாருக்கு விற்க வேண்டிய தேவை என்ன? ‘தற்சாா்பு இந்தியா’ என்பது இதுதானா?

கட்டுரையாளா்: எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT