ஸ்பெஷல்

மறுபடியும் முதல்ல இருந்தா! ..மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் செம்பருத்தி!

தினமணி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரின் தற்போதைய கதையைப் பார்த்தால், மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்பாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரம் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தொடர் பழைய விறுவிறுப்பை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த அகிலாண்டேஸ்வரி வேதாளம் முருங்கை மரம் ஏறுவதைப் போல பார்வதி எதிர்ப்பு புராணத்தையே பாட ஆரம்பித்துள்ளார். 

பார்வதி என் வீட்டுக்கு வேலைக்காரியாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் எனக்கு மருமகளாகவே முடியாது என்று பிடிவாதம் பிடிப்பதாக கடந்த வாரக் காட்சிகள் முடிவடைந்தன.

அகிலாண்டேஸ்வரி சிறைக்குச் செல்வதற்கு முன்பு மூத்த மருமகள் பார்வதி மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பார்வதியை மருமகளாக ஏற்றுக்கொள்வதற்கான அச்சாணியாகவே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

இதனிடையே அகிலாண்டேஸ்வரி சிறைக்குச் சென்றதும் ஐஸ்வர்யா குடும்ப பொறுப்புகளை எடுத்துக்கொண்டு வம்படியாக செய்யும் தவறுகளை பார்வதி திருத்துவது போன்ற காட்சிகள் அனைத்தும் அகிலாண்டேஸ்வரிக்கு தெரியவந்து பார்வதியை மூத்த மருமகளாக ஏற்றுக்கொள்வார் என்றே எதிர்பார்ப்பு எழுந்தது.

தொடரில் ஆதியாக வரும் கார்த்தி உள்பட பல முக்கியமாக கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டதால், ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தொடரின் முடிவுக்கு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அகிலாண்டேஸ்வரி மீண்டும் பார்வதியை எதிர்ப்பது, வேலைக்காரியாக இருக்க அனுமதிப்பது போன்ற காட்சிகள்.. 'என்னாது..? மறுபடியும்.. முதல்ல.. இருந்தா..?' என்ற வைகைப்புயலின் வசனத்தையே நினைவுபடுத்துகிறது.

இதனிடயே இளைய மருமகள் ஐஸ்வர்யா, திரைப்படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக தன்னை நினைத்துக்கொள்வதைப் போல... அகிலாண்டேஸ்வரியாக தன்னை நினைத்துக்கொண்டு செய்து வந்த களேபரங்களையெல்லாம் மூட்டைக்கட்டி பொறுப்பான மருமகளாக மாறும் காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன.

சேராதவர்களுடன் சேர்ந்து என்னை என் புகுந்த வீட்டில் வாழவிடாமல் செய்துவிட்டதாக தன் தாயையே வீட்டிலிருந்து வெளியேறும்படி ஐஸ்வர்யா ஆக்ரோஷமாக கத்துகிறார். 

அந்த அளவுக்கு ஒரு வாரத்திலேயே திருந்தி திடீர் திருப்பத்தை அளிப்பது ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லாமல் வீட்டிலிருந்து தொடரைப் பார்ப்பவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று தான் கூற வேண்டும்.

ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி வீட்டில் அதிகாரம் படைத்த மருமகளாக வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அத்தனை காரியங்களையும் செய்து வந்த ஐஸ்வர்யா, கரண்ட் ஷாக் அடிக்கும் காட்சிக்குப் பிறகு சுயநினைவை இழந்தது போல
''எனக்கு எதிரி பார்வதி இல்லை. நீங்கள்தான். சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து என்னையும் நாசமாக்கிட்டீங்க'' என்று அம்மாவை வீட்டை விட்டு வெளியேற்ற கட்டளையிடுகிறாள். 

பார்வதியின் தாயார் புறப்படும்போது ''விமானத்தைத் தவறவிட்டு தப்பித்தவறி கூட வீட்டுப்பக்கம் வந்துவிடாதீங்க. காரில் பெட்ரோல் நிரப்பி வெச்சிருக்கேன். கார்ல கூட நீங்க போலாம்'' என்று ஐஸ்வரியாவின் கணவன் அருண் தனது மாமியாரை வழியனுப்புவது சீரியலையே வழியனுப்பி வைப்பது போலவே உணர்த்துகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களை கவரும் வகையிலும், ஏற்கெனவே உள்ள பார்வையாளர்களை தக்கவைக்கும் வகையிலும் எடுக்கப்பட்ட தொடர்களில் செம்பருத்தி தனித்த இடம் பிடித்திருந்தது. 

ஆனால், தற்போது அது முற்றிலும் மாறி எப்போது தொடரை முடிப்பீர்கள் என்று வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு மாறிவிட்டது. தொடர் பலதரப்பில் நேர்மறையான விமர்சனங்களை வாங்கும்போதே முடித்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

எபிஸோடுகளை ஓட்ட வேண்டும் என்ற கணக்கிற்கு கதையை நீர்த்துப்போகச் செய்து ரசிகர்களின் பொறுமையை சோதிப்பது எந்த வகையில் நியாயம்? 

மற்ற தொடர்களைப் போன்று வேறு தொடரிலிருந்து கதாபாத்திரங்களை இறக்கி மகா சங்கமம் என்று இரு தொடரை ஒன்றாக ஒளிபரப்பும் செயலை செய்யாத செம்பருத்தி, தனித்து ஒளிபரப்பானது.

இவ்வாறு மக்களிடம் உயர்ந்த இடத்திலிருந்த செம்பருத்தி மீண்டும் அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது. அது முடியவில்லை என்றால் சீக்கிரம் முடிப்பதே சிறந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT