திரை விமரிசனம்

விஷாலின் ‘அயோக்யா’ - திரை விமர்சனம்

சுரேஷ் கண்ணன்


தெலுங்கு வெகுசன சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாத். பெயரிலேயே ‘பூரி’ இருப்பதாலோ என்னமோ, இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே ‘மசாலா’தான். ஆனால் அவை வழக்கமான, தேய்வழக்கு பாணியாக இருக்காது. திரைக்கதையை வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் நகர்த்திச் செல்லும் விதமானது, பூரி ஜெகன்னாத்திற்கு ஏராளமான வெற்றிகளை மட்டுமல்லாது பாராட்டுக்களையும் அள்ளித் தந்திருக்கிறது. வெகுசன சினிமாதான் என்றாலும் பிரதான கதாபாத்திரங்களை நுட்பமாக இவர் வடிவமைக்கும் விதத்திற்காக ‘டைனமிக் டைரக்டர்’ என்கிற அடைமொழியை இவர் பெற்றுள்ளார். 

பூரி ஜெகன்னாத் இயக்கியதில் பெரும் வணிக வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று ‘டெம்ப்பர்’. 2015-ல் வெளியானது. இவரின் வழக்கமான திறமையில் அமைந்த திரைக்கதையும், ஜூனியர் என்.டி.ஆரின் ரகளையான நடிப்பும் இந்தப் படத்தை ‘பிளாக்பஸ்டர்’ வெற்றியாக்கியது. வம்சியின் எழுத்துத்திறமைக்கும் இந்த வெற்றியில் கணிசமான பங்குண்டு. 

இந்த திரைப்படம்தான் இப்போது தமிழில் ‘அயோக்யா’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநரான வெங்கட் மோகன், அசல் வடிவத்தை மிகச் சிறப்பாக நகலெடுத்துள்ளார். ஆனால் ‘ஈயடிச்சான் காப்பியாக’ நின்று விடாமல் கிளைமாக்ஸை துணிச்சலாக மாற்றியுள்ளார். ஒரு வெகுசன சினிமாவின் வழக்கமான போக்கிற்கு எதிரான கிளைமாக்ஸ் அது. படத்தின் மையத்திற்கு பொருந்திப் போவதோடு நம்பகத்தன்மையையும் இந்த கிளைமாக்ஸ் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த முடிவு வெற்றியைத் தேடி தருமா, இல்லையா என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

ஒரு கேடுகெட்ட காவல்அதிகாரி ஓர் உணர்ச்சிகரமான திருப்பத்திற்குப் பிறகு நல்ல அதிகாரியாக உருமாறுவதுதான் இதன் ஒரு வரி கதை. எதிர்மறைக் குணங்களை உடைய நாயகன் நேர்மறையாக மாறுகிற கதைகள் இதுவரையான இந்தியச் சினிமாவில் ஏராளமாக உருவாகியுள்ளன. ஆனால் இந்த திரைப்படத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுவது இதன் சுவாரசியமான திரைக்கதைதான். 

சினிமாவின் வழக்கமான இலக்கணங்களுள் ஒன்றின் படி, இந்த திரைப்படத்தின் நாயகன் யாருமில்லாத அநாதை. சிறுவன் கர்ணணுக்கு பெரும் பணக்காரன் ஆக வேண்டுமென்கிற ஆசை இளம் வயதிலேயே உருவாகிறது. அதற்கான சிறந்த வழி ‘காவல் அதிகாரியாக’ ஆவது என்பதை கண்டுபிடிக்கிறான். குறுக்குவழிகளின் மூலம் அந்த இடத்தை அடைகிறான். பணத்திற்காக எந்த அநீதியையும் செய்யும் பொறுக்கியாக வளர்கிறான். புராணக்கதையில் இருந்த கர்ணன் மற்றவர்களுக்கு அள்ளித் தருபவன். ஆனால் இவனோ மற்றவர்களிடம் இருந்து பிடுங்குகிறவனாக இருக்கிறான்.  

ஆனால் ஒரு சம்பவம் கர்ணனை தலைகீழாக புரட்டிப் போடுகிறது. எந்தவொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அடிப்படையான நேர்மையுணர்வு அவனுக்குள் விழித்துக் கொள்கிறது. ஒரு நல்ல காவல் அதிகாரியாக மாறி சம்பந்தப்பட்ட அநீதியை இழைத்தவர்களை சட்டத்தின் வழியாக பழிவாங்கப் புறப்படுகிறான். இந்தப் பயணத்தில் அவன் தன்னையே இழக்க வேண்டிய சூழலும் அமைகிறது. 

அப்படி அவன் அடைந்த சிக்கலும் சூழலும் என்ன? அதிலிருந்து அவன் மீண்டானா என்பதை விறுவிறுப்பான இறுதிப்பகுதி சொல்கிறது. 

ஜூனியர் என்.டி.ஆர் திறமையாகக் கையாண்ட பாத்திரத்தில் ஏறத்தாழ கச்சிதமாகப் பொருந்துகிறார் விஷால். இவருடைய  உயரமும் வேகமும் அநாயசமான நடிப்பும் அந்தப் பாத்திரத்திற்கு நிறைய நியாயம் செய்திருக்கின்றன. ஆனால் அசலோடு ஒப்பிடும் போது விஷாலின் நடிப்பு ஜூனியராகத்தான் அமைந்திருக்கிறது. அது மட்டுமல்லாது ஜூனியர் என்.டி.ஆரின் உடல்மொழியையே விஷால் பெரிதும் நகலெடுத்திருக்கிறார். அசல் வடிவத்தைப் பார்த்திருப்பவர்களுக்கு இது சலிப்பூட்டலாம். விஷாலின் பாத்திரம் மட்டுமல்ல, இறுதிக்காட்சியைத் தவிர ஒட்டுமொத்த திரைப்படமுமே அசல் வடிவத்தை விசுவாசமாகப் பின்பற்றியிருக்கிறது. 

அசலில் பிரகாஷ்ராஜ் ஏற்றிருந்த வில்லன் பாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். தன்னுடைய பிரத்யேகமான பாணியையும் நக்கலையும் பார்த்திபன் கலந்திருப்பது சுவாரசியம். இன்னமும் சுதந்திரமாக விட்டிருந்தால் இந்தப் பாத்திரம் மேலதிகமாக கவர்ந்திருக்கும். 

இந்த திரைப்படத்தின் முக்கியமான பாத்திரங்களுள் ஒன்றை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்றிருக்கிறார். நேர்மைக்கும் நேர்மையின்மைக்குமான தத்தளிப்பு, இவருடைய பாத்திரத்தின் மூலமாகத்தான் பொங்கி வழிகிறது. விஷாலுக்கும் இவருக்கும் நிகழும் காரசாரமான உரையாடல்கள் பட்டாசு ரகம். தன்னுடைய பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார் ரவிக்குமார். 

நாயகி ராசி கன்னாவிற்கு வழக்கமான நாயகிகள் செய்வதைத் தவிர சிறப்பாக வேறு ஒன்றுமில்லை. சிறிய பாத்திரம்தான் என்றாலும் பூஜா தேவரியா நன்றாக நடித்திருக்கிறார். யோகிபாபு, சோனியா அகர்வால் போன்றோர் தோன்றி மறைகிறார்கள். இரண்டே காட்சியில் வந்திருந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் உணர்ச்சிகரமான நடிப்பில் கவர்கிறார். 

கார்த்திக்கின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்தின் கவரக்கூடிய அம்சங்களுள் ஒன்றாக இருக்கிறது. ராம் – லஷ்மணின் சண்டை வடிவமைப்பு சிறப்பாக கைகூடியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதைக்கு பாடல்கள் இடையூறாக அமைந்திருக்கின்றன. இசையமைப்பாளர் சி.எஸ்.சாம், தான் உருவாக்கிய பாடல்களால் ரசிகர்களைக் கவர முடியவில்லையென்றாலும் பரபரப்பான பின்னணி இசையில் தன் அபாரமான திறமையைக் காட்டியிருக்கிறார். 

அசல் வடிவத்தில் இருந்த சில லாஜிக் பிழைகளைக் களைய முயன்றுள்ளார் இயக்குநர் வெங்கட் மோகன். முன்னரே குறிப்பிட்டபடி கிளைமாக்ஸையும் அசல் வடிவத்தில் இருந்து முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால் இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. 

‘தாமதமாக கிடைக்கும் நீதி, அநீதிக்கு சமமானது’ என்றொரு சொற்றொடர் உண்டு. மிகக் கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் வழியாக விசாரணைகளை இயன்ற வரை தாமதப்படுத்துகிறார்கள். சாட்சியங்களை அழிக்கிறார்கள். பிறகு எளிதாக வெளியே வந்துவிடுகிறார்கள். 

அவ்வாறின்றி சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரு கொடூரமான குற்றவாளி அடையாளம் காணப்பட்டால் தாமதம் ஏதுமின்றி அவனுக்கு தூக்குத் தண்டனை தரப்பட வேண்டும் என்கிற பொதுப்புத்தி சார்ந்த உணர்ச்சிகரமான சிந்தனையை இந்த திரைப்படம் மிக அழுத்தமாக வலியுறுத்துகிறது. 

முன்னேறிய நாடுகள் பல மரண தண்டனையை நீக்கியுள்ளன. ‘மரண தண்டனை வேண்டுமா, கூடாதா’ என்கிற விவாதம் பல்லாண்டுகளாக நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் ‘இன்ஸ்டன்ட் காஃபி’ போல ‘உடனடி தூக்குத்தண்டனையை’ வழங்க வேண்டும் என்கிற ஆபத்தான செய்தியை இந்த திரைப்படம் வலியுறுத்துகிறது. 

மிக மிக அரிய வழக்குகளில் மட்டுமே மரணதண்டனை வழங்கப்படும். அதுவும் பல்வேறு கட்ட நீதி விசாரணைகளுக்குப் பிறகே நிகழும். தவறுதலாக கூட ஒரு நிரபராதியின் உயிர் பறிபோய் விடக்கூடாது என்பதற்காகவே அரசியல் அமைப்பில் இத்தனை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

ஆனால் இவற்றையெல்லாம் இந்த திரைப்படம் கருத்தில் கொள்ளாமல் உணர்ச்சிகரமான மையத்திலேயே சுழல்கிறது. இது தொடர்பான காட்சிகள் நம்பகத்தன்மையில்லாமல் அமைந்துள்ளன. இந்தியாவை உலுக்கிய டெல்லி நிர்பயா கொடூரம், சமீபத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரம் போன்றவற்றின் பின்னணிகள் இதற்காக தொட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.  

காவல் அதிகாரியின் பாத்திரம் என்றாலும் அதற்குரிய சீருடையில் விஷால் ஒரு காட்சியில் கூட தோன்றுவதில்லை. அவர் ‘உண்மையான’ காவல் அதிகாரியாக செயல்படவில்லை என்பதற்கான அடையாளமாக இதை எடுத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட மெனக்கெடலை படத்தின் ஆதாரமான விஷயத்திற்கும் எடுத்துக் கொண்டிருந்தால் ‘அயோக்யா’ ஒரு யோக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT