கணவர் முரளி ராணுவ வீரர். நாட்டுக்காக இன்னுயிரைத் தந்தவர். அவரது மனைவி லில்லி. ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் லில்லிக்கு கணவரின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளலாம் என்று பாலில் விஷத்தை கலந்து வைத்துக் கொண்டு செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்.
அவர் உயிரை மாய்த்துக் கொண்டாரா? அல்லது வாழ்வில் பிறப்பும், இறப்பும் தவிர்க்க முடியாதது என்ற உண்மையை உணர்ந்து அந்த மன அழுத்தமான சூழலில் இருந்து மீண்டு வருகிறாரா? என்பதே குறும்படத்தின் கதை.
யூ-டியூப் தளத்தின் வருகையாலும், அதிக விலை கொண்ட உயர் ரக செல்ஃபோன்களில் அதிக தரத்துடன் விடியோ எடுக்கும் வசதி இருப்பதாலும் யார் வேண்டுமென்றாலும் குறும்படங்களையும், விடியோ தொகுப்புகளையும் எடுக்கும் நிலை இன்று வந்துவிட்டது.
அதனால், குறும்படங்களின் தரமும் குறைந்து வருகிறது. பெயருக்கு எடுத்து பதிவேற்றம் செய்யப்பட்டுவரும் பல குறும்படங்களுக்கு மத்தியில் சிறப்பான ஒரு குறும்படத்தை இயக்கி இருக்கிறார் கோவை இளைஞர் பாலாஜி எஸ்பிஆர்.
இந்தப் படத்தில் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான கூட்டணியுடன் களம் இறங்கி நேர்த்தியான ஒரு படத்தை இவர் தந்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் மைன்ட்ஸ்கிரீன் நிறுவனத்தில் ஒளிப்பதிவைக் கற்றுத் தேர்ந்த கார்த்திகேயன் சந்திரசேகர், சேத்தன், லஷ்மி பிரியா ஆகியோர் நடிப்பில் உருவாக்கப்பட்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ரிவிலேஷன்ஸ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த ஷமந்த் நாக் ஆகியோர் இந்தக் குறும்படத்தில் பணிபுரிந்திருக்கின்றனர்.
மிகச்சிறப்பான பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்தை வேறொரு பரிமாணத்தைத் தருகிறது. மிக மெதுவாக நகரும் இந்தப் படத்தை ஒட்டுமொத்த தன் தோளில் சுமந்திருக்கிறார் நடிகை அஞ்சலி ராவ்.
அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிகர் சிலம்பரசனின் தங்கையாக வருபவர்தான் இந்த அஞ்சலி ராவ். ‘காலிங் பெல்’ சப்தம் கேட்டு அதிர்ச்சி அடைவது, குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் தருணத்தை வெளிப்படுத்தும் காட்சி, சிறுவன் அணிந்திருக்கும் டீ-ஷர்டில் கணவரின் பெயரான முரளி என்றிருப்பதை பார்த்து வாழ்வின் அர்த்தத்தை உணரும் இடம் என நடிப்பில் முத்திரை பதிந்திருக்கிறார் அஞ்சலி ராவ். தமிழ் சினிமா இவரைப் போன்ற திறமைசாலிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒலி வடிவமைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். படம் தொடங்கும்போதே இடி இடிக்கும் சப்தமும், மழை பொழிதல், கதவுகளை திறப்பது, நாற்காலி நகர்த்தும் சப்தம் உள்பட பார்வையாளர்களுக்கு உண்மைத்தன்மையைக் கடத்துவதில் ஒலி வடிவமைப்பாளர் ராஜேஷ் சசீந்திரன் மிக முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.
அஸ்வினின் படத்தொகுப்பும் கேமரா ஷாட்களை அழகாக தொகுத்திருக்கிறது.
ஒரு சிறிய சம்பவத்தை கொண்டு நேர்த்தியாக ஒரு கதையை 10 நிமிடங்களில் சொல்லி முடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி எஸ்பிஆர்.
உணர்தல் பெயரில் விரிசல் ஏற்பட்டது போன்று டைட்டில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், கணவரை இழந்த மனைவியின் மனநிலையை உணர்த்துவதற்காக குறியீடாக வீட்டின் கண்ணாடி ஜன்னலும் உடைந்திருக்கும் காட்சி காண்பிக்கப்படும். இது, இயக்குநர் காட்சி மொழியைக் கையாளும் திறமையைப் பரைசாற்றும் காட்சியாக அமைந்துள்ளது.
கவலைகள் அனைத்தும் மழையில் கரைந்துபோகட்டும் என்பது போன்று படத்தின் இறுதிக்காட்சியை மழையுடன் முடித்திருப்பது சிறப்பு.
இந்தக் குறும்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வைக் கடத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இயக்குநர் பாலாஜி எஸ்பிஆரை தொடர்பு கொண்டு குறும்படம் குறித்து பேசினேன். அப்போது அவர் பேசியதாவது,
‘பொறியியல் முடித்துவிட்டு சினிமா மீது இருந்த காதலால் குறும்படங்களை இயக்கத் தொடங்கினேன். சவாரி உள்பட சில குறும்படங்களை இதற்கு முன்பு இயக்கியிருக்கிறேன். இந்தக் குறும்படம் நண்பர்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. படத்தில் பணிபுரிந்த அனைவரும் இந்தக் குறும்படத்தை உருவாக்குவதற்கு பெரிதும் உதவியாக இருந்தனர். பல குறும்பட விழாக்களில் உணர்தல் பங்கெடுத்து பரிசுகளை பெற்று வருகிறது. எனது படக் குழுவினருக்கே அனைத்து பாராட்டுகளையும் சமர்ப்பிக்கிறேன். அடுத்ததாக ஒரு கதையை உருவாக்கி வருகிறேன்’ என்று கூறிய பாலாஜிக்கு திரைத் துறையில் தடம் பதிக்க வாழ்த்துகள்.