நடிகர் விஜய்யின் 68ஆவது படத்தின் வில்லன் குறித்த தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்குப் பிறகு, விஜய்யை இயக்குவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் மூலம் விஜய்யுடன் வெங்கட்பிரபு முதன்முறையாகவும், அதேசமயம் யுவன்சங்கர்ராஜா இரண்டாவது முறையாகவும் கூட்டணி அமைக்க உள்ளனர்.
இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்திலும், விஜய்யின் மெர்சல் திரைப்படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.