90 மற்றும் இரண்டாயிரத்துகளில் பிரபலமான நடிகைகளான சிம்ரன், லைலா இருவரும் 2000இல் வெளியான பார்த்தேன் ரசித்தேன் படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் 2003இல் வெளியான பிதாமகனிலும் இணைந்து சில காட்சிகள் நடித்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்க உள்ளனர். அறிவழகனின் ‘சப்தம்’ படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தை ஆல்ஃபா ஃப்ரேம்ஸ், 7ஜி ஃபிமிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார்.
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஈரம்’. இதனால் சப்தம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் லக்ஷ்மி மேனன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் பல கதாபாத்திரங்கள் கொண்ட படமாக உருவாகி வருகிறதென இயக்குநர் அறிவழகன் கூறியுள்ளார். மேலும் அவர், “இதில் லைலா, சிம்ரன் மிகவும் சிறப்பான நடிகைகள். கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். சிங்கள் ஷாட் ஆர்டிஸ்ட், சப்தம் இந்தப் படத்தில் முக்கிய பங்காற்றும் ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.