ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை(இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது.
இந்நிலையில் சிறந்த மூலப்பாடல் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் விருதை வென்றுள்ளது.
இந்த விருதை இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியும் (மரகதமணி), பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். இசையமைப்பாளர் கீரவாணிக்கும், படக்குழுவினருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்கர் விருதுகள் அறிவிப்புக்கு முன்னதாக, மேடையில் ஒலித்த நாட்டு நாட்டு பாடலுக்கு அரங்கில் இருந்த நூற்றுக்கணக்கானோர் நடனமாடி ஆரவாரம் செய்தனர்.
அதேபோல், சிறந்த ஆவணக் குறுப்படத்துக்கான விருதை இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் வென்று சாதனை படைத்துள்ளது.