தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை சமந்தா திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
தனது நோய் பாதிப்பு குறித்து அவரே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் பதிவிட்டிருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த சில படங்களிலிருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை சமந்தா தரப்பு மறுத்திருந்தது.இந்த நிலையில்தான், சமந்தாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா என்ற வெப் தொடரில் நடிக்க ஏற்கனவே சமந்தா ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தான் படப்பிடிப்பில் கலந்துகொண்டதை தெரிவித்துள்ளார். நேற்று படக்குழுவினருடன் உரையாடிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். தற்போது காரில் அமர்ந்தபடி “ஒளியைக் கண்டேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப்பதிவிற்கு சில மணிநேரங்களிலேயே 8லட்சத்து 33 ஆயிரம் லைக்குகள் பெற்றுள்ளது. நேற்று பதிவிட்ட மோட்டிவேஷனல் பதிவிற்கு 1.6 மில்லியன் லைக்குகள் பெற்றதுக் குறிப்பிடத்தக்கது. சமந்தாவிற்கு பலவேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் கமெண்ட்டில் ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.