இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 67 திரைப்படத்தின் அப்டேட் குறித்து இயக்குநர் ரத்னகுமார் கிண்டலாக கேள்வியெழுப்பியுள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் நேற்றிலிருந்து வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதையும் படிக்க: ’வாரிசு’ ஓடிடி வெளியீடு எப்போது?
மேலும், இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு தனிவிமானம் மூலம் நேற்று முன்தினம் ஸ்ரீநகர் சென்றது.
இன்று, இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் பெற்றிருப்பதாக விஜய் 67 படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்ததைக் குறிப்பிட்டு இயக்குநர் ரத்னகுமார் ‘காஷ்மீரில் டவர் இல்லையா? எல்லா அப்டேட்களும் தாமதமாக வருகிறது. முக்கியமான அப்டேட்டைக் கொடுங்க அட்மின்..’ என செவன் ஸ்கிரின் நிறுவனத்திடம் கேலியாக கோரிக்கை வைத்துள்ளார்.
ரத்னகுமார் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு தொடர்ச்சியாக வசனம் மற்றும் திரைக்கதை பங்களிப்பை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.