இயக்குநர் வெற்றிமாறன் மறைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் தற்போது நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி உள்ளிட்டோரை வைத்து ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கிவருகிறார். அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், ‘தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வெற்றிமாறன் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.