நடிகை சமந்தா மேற்கொண்ட சிகிச்சை முடிந்ததால் அவர் விரைவில் நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா படத்திற்குப் பின் நடிகை சமந்தா தன் சினிமா வாழ்வில் மிகப்பெரிய புகழுடன் அதிக சம்பளத்துடன் ஒரு ‘ரவுண்ட்’ வந்துகொண்டிருக்கிறார். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பின் அவருடைய வளர்ச்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையில், சமந்தாவுக்கு சரும பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும் இதற்காக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இருப்பினும் இதை சமந்தாவின் மேலாளர் மறுத்து வந்தார். ஆனால் சமந்தா எதற்காக அமெரிக்கா செல்கிறார் என்பது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, சமந்தா நடித்து வந்த குஷி படத்தின் படப்பிடிப்பும் தடைபட்டது.
இதையும் படிக்க | பிரபல இசையமைப்பாளருக்கு திருமணம்
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் நடிகை சமந்தா மேற்கொண்ட சிகிச்சை நிறைவு பெற்றதாகவும் இன்னும் சில நாள்களில் அவர் நாடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சமந்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் முகத்தில் ஏற்பட்ட சரும பிரச்னை காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன் காரணமாக அவர் ஷங்கரின் ஐ, மணிரத்னத்தின் கடல் பட வாய்ப்புகளை அவர் இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.