கற்றது தமிழ் படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆனதையொட்டி இன்ஸ்டகிராமில் பதிவு எழுதியுள்ளார் நடிகை அஞ்சலி.
2007-ல் ராம் இயக்குநராக அறிமுகமான படம் - கற்றது தமிழ். ஜீவா, அஞ்சலி, கருணாஸ் நடித்திருந்தார்கள். தமிழ் கற்ற ஒருவர் புரட்சிகர சிந்தனைகளுடன் சமூகத்தை எதிர்கொள்ளும் உளவியல் படமாக உருவாகியிருந்தது. படம் பார்த்த பலரையும் பலவிதங்களில் பாதிப்பு ஏற்படுத்தியது. யுவன் சங்கர் ராஜா - நா. முத்துகுமார் கூட்டணியில் உருவான பறவையே எங்கு இருக்கிறாய் பாடலை எப்போது யார் கேட்டாலும், பார்த்தாலும் அன்றைய நாள் இயல்பாக அமைந்து விடாது.
ரசிகர்களின் மனத்துக்கு நெருக்கமான கற்றது தமிழ் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகியிருக்கிறது. இதனால் இன்ஸ்டகிராமில் நடிகை அஞ்சலி கூறியதாவது:
ஆனந்தியை உங்களில் ஒருவராக மாற்றியதற்கும் உங்கள் மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் மிக்க நன்றி. ராம் சாருடன் இணைந்து பணிபுரிவது பெருமைக்குரியது. அவருடைய படம் தான் இன்று நானாக மாற உதவியுள்ளது என்றார்.