சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர் தனது இறுதி அத்தியாத்தை எட்டியுள்ளது. ரோஜா தொடரின் நாயகன் சிபு சூர்யன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் மாலை 'பிரைம் டைம்' தொடராக ரோஜா ஒளிபரப்பாகி வருகிறது. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா', தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
முழுமையாக நான்கு ஆண்டுகள் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்த தொடர்களில் முக்கியமான இடம் 'ரோஜா' தொடருக்கு உண்டு. அந்த அளவிற்கு பல குடும்பங்களில் விருப்பமான தொடராக இருந்துவருகிறது 'ரோஜா'.
தற்போது ரோஜா தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அந்த தொடரில் அர்ஜுன் என்ற முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்த சிபு சூர்யன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலான அழகான பயணம். நூற்றுக்கணக்கான நினைவுகளுடன் அளவுகடந்த அன்பு கிடைத்த ஆண்டுகள்.
இன்று என்னுடைய படப்பிடிப்பின் இறுதி நாள். பலராலும் நேசிக்கப்பட்ட அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தை என்னை நம்பி எனக்களித்த சரிகம தயாரிப்பு நிறுவனத்துக்கும் சன் தொலைக்காட்சிக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் மீதான அன்புக்கும், எனக்களித்த ஆதரவுக்கும் எனது நன்றியும், அன்புகளும். உங்கள் அன்புக்கு என்றுமே கடமைப்பட்டவனாக இருப்பேன். விரைவில் உங்களைச் சந்திப்பேன் எனப் பதிவிட்டுள்ளார்.