உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, தற்போது நடக்க முடியாத நிலையில், இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பெற்று வரும்போதே யசோதா படத்துக்கான பின்னணி குரல் கொடுக்கும் பணியில் கையில் ட்ரிப்ஸ் உடன் ஈடுபட்டார்.
ஒருசில நேர்காணல்களில் பங்கேற்று பேசிய சமந்தா, ரசிகர்களின் அன்பினாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே கடினமாக காலத்தைக் கடந்து வந்ததாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். எனினும் நேர்காணல்களில் வழக்கமான அவரின் துடிப்பு குறைவாகவே இருந்தது.
படிக்க | ரஜினி மகளுக்கு மெட்டு போடும் ரஹ்மான்! 'லால்சலாம்' அப்டேட்!
அடுத்தடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
இதனிடையே கடந்த இரு நாள்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலக் குறைவால் சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர் வீட்டிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாக சமந்தாவின் உதவியாளர் தெரிவித்திருந்தார்.
படிக்க | சமந்தாவுக்கு யசோதா படத்தால் வந்த புதிய சிக்கல்!!
இந்நிலையில், தொடர் சிகிச்சையின் காரணமாக தற்போது சமந்தா எழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் அறையில் உள்ள கட்டிலில் படுத்தபடியே இருப்பதாகவும், எழுந்து சிறிது தூரம் கூட நடக்க முடியவில்லை எனவும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. சமந்தா விரைவில் குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.
சமந்தா நடிப்பில் கடந்த 11ஆம் தேதி வெளியான யசோதா படம் தமிழ், தெலுங்கு என இரு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் ஓடிடியில் இப்படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.