வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்லவுள்ளதாக நடிகர் சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு நாள்களாக தகவல் பரவி வந்தன.
இதையும் படிக்க | கேஜிஎஃப் இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்?
இந்நிலையில், டி. ராஜேந்தர் உடல்நிலைக் குறித்து அவரது மகனும், நடிகருமான சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.