சிபி சத்யராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாயோன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி வெளியான படம் மாயோன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தை அருண்மொழி மாணிக்கம் தனது டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்து இந்தப் படத்தின் திரைக்கதையையும் எழுதியுள்ளார். கிஷோர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க | பொன்னியின் செல்வன் பின்னணி இசை - டிரம்ஸ் சிவமணி பகிர்ந்த விடியோ
சமீபத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தினுடைய இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருப்பதாகவும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் மாயோன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. நடிகர் சிபி சத்யராஜ், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் அடுத்த பாகத்திலும் தொடர்வார்களா அல்லது புதிய குழு இந்தப் படத்துக்காக களமிறங்குவார்களா என்ற கேள்விகளுக்கு விடை இல்லை.