பூ ராமுவின் மறைவுக்கு நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சசியின் பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராமு. தொடர்ந்து நீர்ப்பறவைகள், தங்க மீன்கள், வீரம், ஜில்லா, நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள், சூரரைப் போன்று படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(ஜுன் 28) மாலை 7 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிக்க | ''திரௌபதி குடியரசுத் தலைவர்னா, அப்போ பாண்டவர்கள்?'' - இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு
அந்த வகையில் நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான பூ ராமுவின் மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். குடும்பத்தினருக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்ததற்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பூ ராமு மம்மூட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.