சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடுவதாக வெளியான தகவலுக்கு நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில் நடிகர் விஷால் ஆந்திர பிரதேசம் அரசியலில் களமிறங்கி, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடுவதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், ''அரசியலில் களமிறங்கி ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டேன். இதனை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். இதுகுறித்து என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை.
இதையும் படிக்க | 'தரமான சம்பவம் காத்திருக்கு' - அனிருத் பகிர்ந்த செம அப்டேட்
எங்கிருந்து இந்த தகவல் பரவியது எனத் தெரியவில்லை. திரைப்படங்களில் மட்டுமே தொடர்ந்து நடிப்பேன். அந்திரப் பிரதேச அரசியலில் களமிறங்கி, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் குப்பம் தொகுதி சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி. அவரைத் தோற்கடிக்க நடிகர் விஷாலை அங்கு களமிறக்க ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டிருப்பதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
குப்பம் தொகுதியில் தமிழர்களும் கணிசமாக வசிக்கின்றனர். எனவே தமிழக மக்களுக்கும், ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான விஷாலை களமிறக்க ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டிருப்பதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை நடிகர் விஷால் முற்றிலுமாக மறுத்துள்ளார்.