பேச்சுலர் பட இயக்குநர் சதிஷ் செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பரில் திரையரங்குகளில் வெளியான பேச்சுலர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் ஒரு சார்பு நிலையில் பேசப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இந்தப் படம் வருவாய் ரீதியாக வெற்றிபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பேச்சுலர் வெளியாகி அடுத்த வாரமே ஜி.வி.பிரகாஷின் மற்றொரு படமும் வெளியானது. ஆனால் பேச்சுலர் படம் ஜெயில் படத்தையும் கடந்து திரையரங்குகளில் ஓடியது. படக்குழுவினர் வெற்றியைக் கொண்டாடினர்.
இதையும் படிக்க | காதலருக்கு வாழ்த்து சொன்ன பிரியா பவானி ஷங்கர்
இந்த நிலையில் சதிஷ் செல்வராஜ் அடுத்ததாக நடிகர் கார்த்தியிடம் கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதை கார்த்திக்குப் பிடித்திருப்பதாகவும், விரைவில் அவர் இதுகுறித்து முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன், விருமன் படங்களில் நடித்துமுடித்துள்ள கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் கார்த்தி நடிக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.