யூடியூபர் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் நாஞ்சில் விஜயன். இவர் சீரியல்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் தொடர்பான சர்ச்சையில், சூர்யா தேவிக்கும், நாஞ்சில் விஜயனுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதில் நாஞ்சில் விஜயன் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக செயல்பட்டதால், நாஞ்சில் விஜயன் வீட்டுக்கு சூர்யா தேவி சென்றபோது, அவரை நாஞ்சில் விஜயன் தாக்கியதாக கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா தேவி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்துறையினர் நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். விசாரணைக்கு நாஞ்சில் விஜயன் ஆஜராகாமலும், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வளசரவாக்கம் காவல்துறையினர் நாஞ்சில் விஜயனை நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.