புதிய படத்துக்காக நடிகர் சூர்யா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் படத்தில் நடித்துவந்தார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக படம் பாதியில் நிற்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் மறுப்பு தெரிவித்தது.
இதையும் படிக்க | மார்லன் பிராண்டோவின் கடிதம் - 50 ஆண்டுகளுக்கு பிறகு நடிகையிடம் மன்னிப்புக்கேட்ட ஆஸ்கர்
வணங்கான் படத்தை மீண்டும் துவங்குவதற்கு முன் சிவா படத்தில் நடித்துமுடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம். இந்த நிலையில் சிறுத்தை சிவா படம் குறித்து சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது. வீரம் படத்துக்கு பிறகு சிவாவின் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளாராம்.
மாயாவி, ஆறு, சிங்கம் போன்ற சூர்யாவின் படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் மன்மதன் அம்பு படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சூர்யா ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கில் இசையமைக்கும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. புஷ்பா பாடல்கள் நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் அடுத்ததாக 'தி வாரியர்' பட விசில் மற்றும் புல்லட் பாடல்களும் வெற்றிபெற்றன. இந்த காரணங்களால் சூர்யா - இயக்குநர் சிவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கின்றன.