நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.
வாலி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா, நியூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அடியெடுத்து வைத்தார்.
வாலி, குஷி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான மாநாடு, டான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நாயகனாக அவர் நடித்துள்ள 'கடமையை செய்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா நடிகையை காதலிப்பதாக அவ்வபோது வந்தந்திகள் வந்தாலும், அதனை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில், 54 வயதாகும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அவரது குடும்பத்தார் பெண் பார்த்து வருகின்றனர்.
எனினும் மணப்பெண் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.