புலி திரைப்படத்தின் வருவாயை மறைத்ததாக நடிகர் விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித் துறை உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35.42 கோடி பெற்றதாக குறிப்பிட்டார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை வருமான வரித் துறையினர் மேற்கொண்டனர். அதில் 2015ஆம் ஆண்டுடன் நடத்தப்பட்ட சோதனையின் ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ரூ.15 கோடியை மறைத்துள்ளது தெரியவந்தது.
வருவாயை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித் துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. காலதாமதமாக விதிக்கப்பட்ட உத்தரவு என்பதால், இதனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், மனு தொடர்பாக வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.