பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நடிகர் பாபு ஆண்டனி அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், கார்த்தி வந்தியத் தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும் நடித்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற வேடத்தில் நடித்துள்ளார். நடிகை த்ரிஷா குந்தவி தேவி என்ற வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன. இதுகுறித்து நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது சுட்டுரைப் பக்கத்தில் நடிகை த்ரிஷாவை குறிப்பிட்டு, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு மிக்க நன்றி கம்ச ராஜா எஎன திரிஷா பதில் கூறியிருந்தார்.
வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படம் என்பதால் இந்தப் படத்தின் படத்தொகுப்பு மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு நீண்ட நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் பாபு ஆண்டனி தனது முக நூல் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் எனது இடது தோல்பட்டை கயைம் அடைந்தது. அதன் காரணமாக எனக்கு இன்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று பிற்பகலே நான் வீடு திரும்பிவிடுவேன்.
நிறைய சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் பொன்னியின் செல்வன். எனக்கு காயம் ஏற்பட்டும் மணிரத்னம் தைரியமாக என்னை தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனுமதித்தார். அவர் மன்னிப்பு கேட்டு என்னை படத்தில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவருக்கு நன்றி.
நான் 3 முதல் 4 வாரங்களில் பழையபடி செயல்பட துவங்கி விடுவேன். 50 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். கடவுள் சிறந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.