செய்திகள்

பிபிஇ உடையணிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வசந்தபாலனைப் பார்க்கச் சென்ற லிங்குசாமி!

DIN

கரோனா சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது இயக்குநர் லிங்குசாமி தன்னை வந்து பார்த்த சம்பவத்தை உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பிரபல இயக்குநர் வசந்தபாலன். ஏப்ரல் 21ம் தேதி கரோனா அவருக்கு உறுதியானது. சிகிச்சையில் இருபது நாள்கள் கடந்து விட்டதால் கரோனா தொற்றில்லாத மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அடுத்த வாரத்தில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்தபாலன், ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவுகள் எழுதி வருகிறார். கரோனாவால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் வந்து பார்த்த இயக்குநர் லிங்குசாமி குறித்து இயக்குநர் வசந்தபாலன் ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

வீரம் என்றால் என்ன ?
பயமில்லாத மாதிரி நடிக்கிறது.
பழைய வசனம்.
வீரம் என்றால் என்ன தெரியுமா ?
பேரன்பின் மிகுதியில் 
நெருக்கடியான நேரத்தில் 
அன்பானவர்கள் பக்கம் நிற்பது.
புதிய வசனம்.
போன வாரத்தில் 
மருத்துவமனையின் 
தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று
இரவு முழுக்க நித்திரையின்றி 
இரவு மிருகமாய் 
உழண்டவண்ணம் இருக்கிறது.
விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள்
மருத்துவமனைத் தேடி விரைகிறது.
எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது.
இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது.
உங்களை அனுமதித்தால் உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறது.
வேறு வழியின்றி 
முழு மருத்துவ உடைகளுடன் 
அனுமதிக்கப்படுகிறது.
மெல்ல என் படுக்கையை ஒட்டி 
ஒரு உருவம் நின்றபடியே 
எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது.
ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது.
எனையே உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறது.
மருத்துவரா 
இல்லை 
செவிலியரா 
என்று 
எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.
உள்ளிருந்து "டாக்டர்" என உச்சரிக்கிறேன்.
"லிங்குசாமிடா" என்றது அந்த குரல்.
அத்தனை சுவாசக்கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி
"டே!  நண்பா" என்று கத்தினேன்.
"பாலா" என்றான்.
அவன் குரல் உடைந்திருந்தது.
வந்திருவடா…
"ம்" என்றேன்
என் உடலைத் தடவிக்கொடுத்தான்.
எனக்காக பிரார்த்தனை செய்தான்.
என் உடையாத கண்ணீர்பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது.
தைரியமாக இரு 
என்று என்னிடம் சொல்லிவிட்டு 
செல்லும் போது 
யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது.
இந்த உயர்ந்த நட்புக்கு 
நான் என்ன செய்தேன் என்று 
மனம் முப்பது ஆண்டுகள் 
முன்னே பின்னே ஓடியது.
"உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா….."
என்றேன்.
நானிருக்கிறேன்
நாங்களிருக்கிறோம்
என்றபடி 
ஒரு சாமி 
என் அறையை விட்டு வெளியேறியது.
கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் 
எனை அணைத்தது போன்று இருந்தது.
ஆயிரம் முத்தங்கள் லிங்கு…..
ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய் என்று எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

விமர்சனத்துக்குள்ளான ஹார்திக் பாண்டியாவின் தலைமைப் பண்பு!

SCROLL FOR NEXT